< சங்கீதம் 35 >
1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும்.
௧தாவீதின் பாடல். யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.
2 கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும்.
௨நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
3 என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: நீர் என் ஆத்துமாவுக்கு, “நானே உனது இரட்சிப்பு.”
௩என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.
4 எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக.
௪என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக.
5 யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக;
௫அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
6 யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
௬அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
7 காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும்,
௭காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
8 அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.
௮அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
9 அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும்.
௯என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
10 “யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
௧0ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும்.
11 இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள்.
௧௧கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
12 நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள்.
௧௨நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.
13 ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது,
௧௩அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.
14 எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் நான் அவர்களுக்காக துக்கித்தேன்; என் தாய்க்காக அழுகிறது போல, துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன்.
௧௪நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.
15 ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள்.
௧௫ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள்.
16 அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள்.
௧௬அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.
17 யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும்.
௧௭ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
18 அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்.
௧௮மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
19 காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் என்னைப் பழித்து மகிழாமலும், காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும்.
௧௯வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
20 அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள்.
௨0அவர்கள் சமாதானமாகப் பேசாமல், தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
21 அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
௨௧எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
22 யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்.
௨௨யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.
23 விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும்.
௨௩என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
24 என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் என்னை நியாயம் விசாரியும்; அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்.
௨௪என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும்.
25 “ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும்.
௨௫அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை என்று பேசாதபடிக்கும் செய்யும்.
26 என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் வெட்கமடைந்து கலங்குவார்களாக; எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
௨௬எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படவேண்டும்.
27 என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும்.
௨௭என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும்.
28 எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.
௨௮என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.