< சகரியா 14 >
1 ௧ இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
எருசலேமே, யெகோவாவின் நாள் ஒன்று வருகிறது, அப்பொழுது உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையிட்டு, பொருட்களை உங்கள் முன்னிலையிலேயே பங்கிட்டுக் கொள்வார்கள்.
2 ௨ எருசலேமிற்கு விரோதமாக போரிடச் சகல தேசங்களையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; பெண்கள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனிதர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்படுவதில்லை.
யெகோவாவே எருசலேமுக்கு எதிராகப் போரிடும்படி எல்லா நாடுகளையும் ஒன்றுதிரட்டுவார்; அந்த நகரம் கைப்பற்றப்படும், வீடுகள் கொள்ளையிடப்படும், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். நகர மக்களில் அரைப்பகுதியினர் நாடுகடத்தப்படுவார்கள், ஆனால் மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.
3 ௩ யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார்.
அப்பொழுது யெகோவா வெளியே போய் யுத்தநாளில் சண்டையிடுவதைப்போல் அந்த நாடுகளுக்கு விரோதமாக சண்டையிடுவார்.
4 ௪ அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும்.
5 ௫ அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
நீங்களோ என் மலையின் பள்ளத்தாக்கின் வழியாகத் தப்பி ஓடிப்போவீர்கள். ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை நீண்டிருக்கும். நீங்களோ யூதாவின் அரசனான உசியாவின் நாட்களில் உண்டான பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடியதைப்போல ஓடிப்போவீர்கள். அப்பொழுது என் இறைவனாகிய யெகோவா வருவார். அவருடன் பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள்.
6 ௬ அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும்.
அந்த நாளில் வெளிச்சமோ, குளிரோ, உறைபனியோ இராது.
7 ௭ ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
அந்த நாள் பகலுமின்றி, இரவுமின்றி ஒரு நிகரற்ற நாளாயிருக்கும். அது யெகோவாவினால் அறியப்பட்ட ஒரு நாள். ஆனால் மாலைப் பொழுதிலும் வெளிச்சம் திரும்பிவரும்.
8 ௮ அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும்.
அந்த நாளில் வாழ்வளிக்கும் தண்ணீர் எருசலேமிலிருந்து பாயும். அதன் அரைப்பங்கு கிழக்கே சவக்கடலுக்கும், அரைப்பங்கு மேற்கே மத்திய தரைக்கடலுக்கும் ஓடும். குளிர் காலத்திலும், கோடைகாலத்திலும் இவ்வாறே இருக்கும்.
9 ௯ அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும்.
10 ௧0 தேசமெல்லாம் கேபாதுவங்கி எருசலேமிற்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாக மாற்றப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் இடத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற இடம்வரை, கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள்வரை குடியேற்றப்பட்டிருக்கும்.
கேபா முதல் எருசலேமுக்குத் தெற்கேயுள்ள ரிம்மோன்வரை இருக்கும் நிலமெல்லாம் அரபா சமபூமியைப் போலாகும். எருசலேமோ, பென்யமீன் வாசல் தொடங்கி முதலாம் வாசல் வழியாக, மேலும் மூலைவாசல் வரையிலும், அனானயேல் கோபுரத்திலிருந்து, அரசனின் திராட்சை ஆலைவரையிலும் உயர்த்தப்பட்டு, தன் இடத்தில் நிலைநிற்கும்.
11 ௧௧ அதிலே மக்கள் வாசம்செய்வார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாகத் தங்கியிருக்கும்.
எருசலேம் குடியேற்றப்படும்; எருசலேம் இனி ஒருபோதும் அழிக்கப்படமாட்டாது. அது பாதுகாப்பாயிருக்கும்.
12 ௧௨ எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
எருசலேமுக்கு எதிராகப் போரிட்ட மக்கள் கூட்டங்கள் அனைவரையும் யெகோவா தாக்குவார். யெகோவாவினால் கொள்ளைநோய் கொண்டுவரப்படும்: அவர்கள் காலூன்றி நிற்கையிலேயே அவர்களின் உடலிலிருந்து தசை அழுகிப்போகும். அவர்கள் கண்கள் அதினதின் குழியிலேயே அழுகிப்போகும். அவர்கள் நாவுகளும் அவர்களின் வாய்க்குள்ளேயே அழுகிவிடும்.
13 ௧௩ அந்நாளிலே யெகோவால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
அந்த நாளில் மனிதர் யெகோவாவிடமிருந்து வரும் பெரும் திகிலினால் சூழப்படுவார்கள். ஒவ்வொருவனும் மற்றொருவனின் கையைப் பற்றிப்பிடிப்பான்; அவர்கள் ஒருவரையொருவர் தாக்குவார்கள்.
14 ௧௪ யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும்.
யூதாவும் எருசலேமில் சண்டையிடும். சுற்றுப்புறங்களிலுள்ள நாடுகளின் செல்வங்களான தங்கமும், வெள்ளியும், உடைகளும் பெருந்திரளாய்ச் சேர்க்கப்படும்.
15 ௧௫ அந்த முகாம்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.
அதேபோன்ற ஒரு கொள்ளைநோய் அவர்களின் முகாம்களிலுள்ள குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் அங்குள்ள மிருகங்கள் எல்லாவற்றையும் தாக்கும்.
16 ௧௬ பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக, வருடாவருடம் வருவார்கள்.
ஆனால் அப்பொழுது எருசலேமைத் தாக்கிய, எல்லா நாடுகளிலும் சிலர் தப்பிப் பிழைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும், வருடந்தோறும் சேனைகளின் யெகோவாவாகிய அரசரை வழிபடவும், கூடாரப்பண்டிகையைக் கொண்டாடவும் எருசலேமுக்குப் போவார்கள்.
17 ௧௭ அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை பெய்வதில்லை.
பூமியிலுள்ள மக்கள் கூட்டங்களில் யாராவது சேனைகளின் யெகோவாவாகிய அரசரை ஆராதிக்க எருசலேமுக்குப் போகாதிருந்தால், அவர்களுடைய இடங்களில் மழை பெய்யாது.
18 ௧௮ எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமல் சேராமலும்போனால் அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் யெகோவா வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.
எகிப்து நாட்டு மக்களும் போய் அதில் பங்கெடுக்காவிட்டால், அங்கும் மழை பெய்யாது. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத நாடுகளையும் யெகோவா அதே கொள்ளைநோயால் வாதிப்பார்.
19 ௧௯ இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை.
இதுவே எகிப்தியருக்கு வரும் தண்டனை. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத எல்லா நாடுகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் இதுவே.
20 ௨0 அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
அந்த நாளில் குதிரைகளின் மணிகளில், “யெகோவாவுக்குப் பரிசுத்தம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஆலயத்திலுள்ள சமையல் பானைகளும், பலிபீடத்திற்கு முன்பாக உள்ள தூய்மையான கிண்ணங்களைப்போல் இருக்கும்.
21 ௨௧ அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே எந்தவொரு கானானியனும் இருப்பதில்லை.
அப்பொழுது எருசலேமிலும், யூதாவிலும் உள்ள ஒவ்வொரு பானையும், சேனைகளின் கர்த்தருக்கு என்று தூய்மையாக்கப்பட்டதாக இருக்கும்; அங்கு பலியிட வருகிற யாவரும் அப்பானைகளில் சிலவற்றை எடுத்து அவைகளில் சமைப்பார்கள்; அந்த நாளில் சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தில், இனி ஒருபோதும் கானானியன் இருப்பதில்லை.