< ரோமர் 13 >
1 ௧ எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; ஏனென்றால், தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் அடங்கி நடவுங்கள். ஏனெனில் இறைவன் அனுமதிக்காமல் எந்த அதிகாரமும் இல்லை. இப்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கிற அதிகாரங்கள் இறைவனாலேயே நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.
2 ௨ எனவே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
ஆகையால் அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறவன், இறைவன் நியமித்ததையே எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறான். அவ்விதம் எதிர்த்து நிற்கிறவர்கள் தங்கள் மேலேயே தண்டனையை விளைவித்துக்கொள்கிறார்கள்.
3 ௩ மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல, தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள்; எனவே, நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
ஏனெனில், சரியானதைச் செய்கிறவர்கள் ஆளுகை செய்கிறவர்களைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. தீமை செய்கிறவர்களே பயப்படவேண்டும். அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சரியானதைச் செய்யுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.
4 ௪ உனக்கு நன்மை உண்டாவதற்காக, அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக, அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே.
ஏனெனில் அவர்கள் உங்களுக்கு நன்மைச் செய்யும்படி இறைவனுடைய வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தவறு செய்தால், அவர்களுக்குப் பயப்படவேண்டும். அவர்கள் அதிகாரத்தை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள், தீமை செய்கிறவர்களுக்குத் தண்டனை கொடுத்து, இறைவனுடைய கடுங்கோபத்தைக் காண்பிக்கும் பிரதிநிதிகள்.
5 ௫ எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும்.
ஆகையால் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பதே அவசியம். தண்டனை கிடைக்குமே என்பதற்காக மட்டும் அல்ல, நம்முடைய மனசாட்சியின் நிமித்தமும் அடங்கி நடக்கவேண்டும்.
6 ௬ இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே.
அதற்காகத்தான் நீங்கள் வரிகளையும் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அதிகாரத்தில் உள்ளவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள். அவர்கள் ஆளுகை செய்யும் பணியில் தங்களது முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள்.
7 ௭ எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.
நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்; சுங்கவரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள்; மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள். கனம்பண்ண வேண்டுமானால் கனம்பண்ணுங்கள்.
8 ௮ ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
யாருக்கும் கடன்காரராய் இருக்கவேண்டாம். ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்துவதில் மட்டுமே எப்பொழுதும் கடன்பட்டவர்களாய் இருங்கள். ஏனெனில் தன்னில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால், நீங்கள் மோசேயின் சட்டத்தையே நிறைவேற்றுகிறீர்கள்.
9 ௯ எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.
“விபசாரம் செய்யாதே,” “கொலை செய்யாதே,” “களவு செய்யாதே,” “அயலானுடையதை அபகரிக்க ஆசைகொள்ளாதே,” என்கிற கட்டளைகளும், வேறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவையெல்லாம், “நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலவனிலும் அன்பாயிரு” என்கிற ஒரே கட்டளையில் அடங்குகின்றன.
10 ௧0 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது.
அயலவனில் அன்பு செலுத்துகிறவன் பிறருக்குத் தீங்கு செய்யமாட்டான். ஆகவே, அன்பே மோசேயின் சட்டத்தை முழுநிறைவாக்குகிறது.
11 ௧௧ தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.
தற்போதைய காலத்தை விளங்கிக்கொண்டவர்களாய் இவைகளைச் செய்யுங்கள். உங்கள் தூக்கத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நாம் முதலில் விசுவாசிக்கத் தொடங்கிய காலத்தைவிட, நமது இரட்சிப்பு இப்பொழுது இன்னும் அருகே வந்துவிட்டது.
12 ௧௨ இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.
இரவு முடியப்போகிறது; பகல் வந்துவிட்டது. எனவே இருளின் செயல்களை நம்மைவிட்டு அகற்றி, ஒளியின் ஆயுதத்தை அணிந்துகொள்வோம்.
13 ௧௩ களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம்.
பகலில் நடப்பவர்களைப்போல் நாம் ஒழுக்கமாய் நடப்போம். களியாட்டங்களையும், வெறியாட்டங்களையும், பாலிய முறைகேடுகளையும், ஒழுக்கக்கேடான செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவோம்.
14 ௧௪ தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.
மாறாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே அணிந்துகொண்டு, உங்கள் மாம்ச இயல்பிலிருந்து வரும் ஆசைகளை திருப்திப்படுத்துவதெப்படி என்ற சிந்தனையை விட்டுவிடுங்கள்.