< சங்கீதம் 78 >

1 ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல். என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, அவருடைய செயல்களை மறவாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள்.
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது.
9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்;
10 ௧0 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள்.
11 ௧௧ அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
அவர்கள் அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12 ௧௨ அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார்.
13 ௧௩ கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார்.
14 ௧௪ பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
அவர் பகலில் மேகத்தினாலும், இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15 ௧௫ பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார்.
16 ௧௬ கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார்.
17 ௧௭ என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள்.
18 ௧௮ தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள்.
19 ௧௯ அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, “பாலைவனத்தில் விருந்தளிக்க இறைவனால் முடியுமோ?
20 ௨0 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, நீரோடைகள் நிரம்பி வழிந்தன, ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள்.
21 ௨௧ ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது.
22 ௨௨ யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை.
23 ௨௩ அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; வானங்களின் கதவுகளைத் திறந்தார்.
24 ௨௪ மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25 ௨௫ தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை இறைவன் அவர்களுக்கு அனுப்பினார்.
26 ௨௬ வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார்.
27 ௨௭ இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார்.
28 ௨௮ அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார்.
29 ௨௯ அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார்.
30 ௩0 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே,
31 ௩௧ தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார்.
32 ௩௨ இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை.
33 ௩௩ ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார்.
34 ௩௪ அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள்.
35 ௩௫ தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள்.
36 ௩௬ ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள்.
37 ௩௭ அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை.
38 ௩௮ அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; அவர் அவர்களை அழித்துவிடாமல் அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
39 ௩௯ அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.
40 ௪0 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள்.
41 ௪௧ அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள்.
42 ௪௨ அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
அவர்கள் அவருடைய வல்லமையையும், ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை.
43 ௪௩ அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார்.
44 ௪௪ அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை.
45 ௪௫ அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின.
46 ௪௬ அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
47 ௪௭ கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார்.
48 ௪௮ அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்.
49 ௪௯ தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
அவர் தமது கடுங்கோபத்தையும், சினத்தையும், எதிர்ப்பையும், இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார்.
50 ௫0 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல், கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51 ௫௧ எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் காமின் கூடாரங்களில் அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார்.
52 ௫௨ தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே,
53 ௫௩ அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது.
54 ௫௪ அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார்.
55 ௫௫ அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்; அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார்.
56 ௫௬ ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை.
57 ௫௭ தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள்.
58 ௫௮ தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்.
59 ௫௯ தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார்.
60 ௬0 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார்.
61 ௬௧ தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
62 ௬௨ தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார்.
63 ௬௩ அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது.
64 ௬௪ அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை.
65 ௬௫ அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார்.
66 ௬௬ தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார்.
67 ௬௭ அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை.
68 ௬௮ யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
69 ௬௯ தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
70 ௭0 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார்.
71 ௭௧ கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும் மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார்.
72 ௭௨ இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான்.

< சங்கீதம் 78 >