< சங்கீதம் 43 >

1 தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய் எனக்காக வழக்காடும், வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்.
2 என் பெலனாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்? பகைவனால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?
3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; அவை எனக்கு வழிகாட்டட்டும். நீர் குடியிருக்கும் இடமான உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும்.
4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். இறைவனே, என் இறைவனே, யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக இன்னும் அவரைத் துதிப்பேன்.

< சங்கீதம் 43 >