< எண்ணாகமம் 24 >
1 ௧ இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி,
இஸ்ரயேலரை ஆசீர்வதிப்பதையே யெகோவா விரும்புகிறார் என பிலேயாம் அறிந்தான். எனவே அவன் முன்புபோல் மாந்திரீகத்தின் உதவியை நாடாமல், பாலைவனத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.
2 ௨ தன்னுடைய கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன்னுடைய கோத்திரங்களின்படியே முகாமிட்டிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது.
பிலேயாம் வெளியே பார்க்கையில், இஸ்ரயேலர் கோத்திரம் கோத்திரமாய் முகாமிட்டிருப்பதைக் கண்டான். அந்நேரத்தில் இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வந்தார்.
3 ௩ அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
அவன் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது: “பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு, தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு,
4 ௪ தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
இறைவனின் வார்த்தைகளைக் கேட்கிறவனின் இறைவாக்கு, அவன் எல்லாம் வல்லவரிடமிருந்து தரிசனம் காண்கிறவன், அவன் முகங்குப்புற கீழே விழுந்தவன், கண்கள் திறக்கப்பட்டவன்:
5 ௫ யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே, உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
“யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரயேலே, உன் குடியிருப்புகளும் எவ்வளவு அழகானவை!
6 ௬ அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், யெகோவா நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.
“அவை பள்ளத்தாக்குகளைப்போல் பரந்திருக்கின்றன, ஆற்றின் அருகில் இருக்கும் தோட்டங்களைப்போல் இருக்கின்றன, யெகோவா நட்ட சந்தனமரங்களைப்போல் இருக்கின்றன. தண்ணீரருகே நிற்கிற கேதுருமரங்களைப்போல் இருக்கின்றன.
7 ௭ அவர்களுடைய வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் விதை திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகை விட உயருவான்; அவர்களுடைய ராஜ்ஜியம் மேன்மையடையும்.
அவர்கள் வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்களுடைய வித்து நீர்த்திரளின்மேல் பரவும். “அவர்களுடைய அரசன் ஆகாபைப் பார்க்கிலும் பெரியவனாயிருப்பான்; அவர்கள் அரசு புகழ்ந்துயர்த்தப்படும்.
8 ௮ தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.
“இறைவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; அவர்களுக்கு ஒரு காட்டெருதின் பெலன் இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு விரோதமான நாடுகளை விழுங்கிப்போடுவார்கள். அவர்களுடைய எலும்புகளையும் முறித்துப்போடுவார்கள்; அவர்கள் தங்களுடைய அம்புகளினால் உருவக்குத்துவார்கள்.
9 ௯ சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” என்றான்.
அவர்கள் சிங்கத்தைப் போலவும் பெண் சிங்கத்தைப் போலவும் மடங்கிப் படுத்திருக்கிறார்கள்; அவற்றை எழுப்பத் துணிபவன் யார்? “உங்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்களாக; உங்களை சபிப்பவர்கள் சபிக்கப்பட்டிருப்பார்களாக!”
10 ௧0 அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் வந்தவனாகி, கையோடு கைதட்டி, பிலேயாமை நோக்கி: “என்னுடைய எதிரிகளைச் சபிக்க உன்னை அழைத்து வந்தேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.
அப்பொழுது பிலேயாமுக்கு விரோதமாக பாலாக்கின் கோபம் மூண்டது. அவன் தன் கைகளைத் தட்டி பிலேயாமிடம்: “நான் என் பகைவர்களைச் சபிக்கவே உன்னை அழைப்பித்தேன். ஆனால் நீயோ, இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறாய்.
11 ௧௧ ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ; உன்னை மிகவும் மேன்மைப்படுத்துவேன் என்றேன்; நீ மேன்மை அடையாதபடி யெகோவா தடுத்தார் என்றான்.
இப்பொழுது நீ உடனடியாக உன் வீட்டிற்குப் போ. நான் உனக்கு நிறைய வெகுமதி கொடுப்பேன் என சொல்லியிருந்தேன். ஆனால் அந்த வெகுமதிகளை நீ பெறாதபடி யெகோவா உன்னைத் தடுத்துள்ளார்” என்றான்.
12 ௧௨ அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று,
அதற்குப் பிலேயாம் பாலாக்கிடம்: “நீ என்னிடம் அனுப்பிய தூதுவர்களிடம் நான் சொல்லவில்லையா?
13 ௧௩ நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா?
‘பாலாக், வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தன் அரண்மனையை நிறைத்து அதை எனக்குத் தந்தாலும் யெகோவாவினுடைய கட்டளையை மீறி என் சொந்த விருப்பத்தின்படி எந்த நன்மையையோ, தீமையையோ என்னால் செய்யமுடியாது. யெகோவா சொல்வதை மட்டுமே நான் செய்யவேண்டும்’ என்று சொல்லியிருந்தேனே!
14 ௧௪ இதோ, நான் என்னுடைய மக்களிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த மக்கள் உம்முடைய மக்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும்” என்று சொல்லி.
இப்பொழுது நான் என் மக்களிடத்திற்குப் போகப்போகிறேன். நீ வா. இந்த மக்கள் வரப்போகும் நாட்களில் உன் மக்களுக்கு என்ன செய்வார்கள் என நான் உன்னை எச்சரிப்பேன்” என்றான்.
15 ௧௫ அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
பின்பு அவன் தன் இறைவாக்கை உரைத்துச் சொன்னதாவது: “பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு, தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு,
16 ௧௬ தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
இறைவனின் வார்த்தைகளைக் கேட்பவனின் இறைவாக்கு, அவன் மகா உன்னதமானவரிடமிருந்து அறிவைப்பெற்றவன், எல்லாம் வல்லவரிடத்தில் இருந்து தரிசனம் காண்கிறவன், முகங்குப்புற விழும்போது, கண்கள் திறக்கப்பட்டவன்:
17 ௧௭ அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் சந்ததி எல்லோரையும் நிர்மூலமாக்கும்.
“நான் அவரைக் காண்கிறேன், ஆனால் இப்பொழுது அல்ல; நான் அவரைப் பார்க்கிறேன், ஆனால் சமீபமாய் அல்ல. யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் வரும், இஸ்ரயேலில் இருந்து ஒரு செங்கோல் எழும்பும். அவர் மோவாபியரின் நெற்றிகளை நொறுக்குவார், சேத்தின் சந்ததி எல்லோரையும் தண்டிப்பார்.
18 ௧௮ ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
ஏதோம் வெற்றிகொள்ளப்படும்; அவரது பகைவனான சேயீரும் வெற்றிகொள்ளப்படுவான். ஆனால் இஸ்ரயேலோ வலிமையில் பெருகும்.
19 ௧௯ யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார்” என்றான்.
யாக்கோபிலிருந்து ஒரு ஆளுநர் வருவார். பட்டணத்தில் தப்புகிறவர்களை அவர் தண்டிப்பார்” என்றான்.
20 ௨0 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவில் முற்றிலும் நாசமாவான் என்றான்.
அதன்பின் பிலேயாம் அமலேக்கியரைக் கண்டு, இறைவாக்குரைத்து: “நாடுகளுக்குள்ளே அமலேக்கியர் முதலாவதாயிருந்தார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு அழிவே இருக்கும்” என்றான்.
21 ௨௧ அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “உன்னுடைய தங்குமிடம் பாதுகாப்பானது; உன்னுடைய கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
பின்பு அவன் கேனியரைக் கண்டு இறைவாக்குரைத்து: “உங்கள் குடியிருப்பு பாதுகாப்பாயிருக்கிறது, உங்களுடைய கூடு ஒரு கற்பாறையில் அமைந்திருக்கிறது.
22 ௨௨ ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.
ஆனாலும் கேனியரே! அசூர் உங்களைச் சிறைபிடிக்கும்போது நீங்கள் அழிக்கப்படுவீர்கள்” என்றான்.
23 ௨௩ பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
பின்னும் பிலேயாம் இறைவாக்கைத் தொடர்ந்து சொன்னது: “ஐயோ! இறைவன் இதைச் செய்யும்போது யாரால் உயிர்த்தப்பி வாழமுடியும்?
24 ௨௪ கித்தீமின் கடல் துறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான்” என்றான்.
கித்தீம் கரைகளிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரையும், ஏபேரையும் கீழ்ப்படுத்தும். அவர்களும் அழிந்துபோவார்கள்.”
25 ௨௫ பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன்னுடைய வழியே போனான்.
அதன்பின் பிலேயாம் எழுந்து வீட்டிற்குத் திரும்பினான், பாலாக் தன் வழியே போனான்.