< எண்ணாகமம் 21 >

1 வேவுகாரர்கள் காண்பித்த வழியாக இஸ்ரவேலர்கள் வருகிறார்கள் என்று தெற்கே வாழ்கிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலர்களுக்கு எதிராக யுத்தம் செய்து, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானியனான ஆராத் பட்டணத்து அரசன், இஸ்ரயேலர் அத்தரீமுக்குப் போகிறவழியாய் வருகிறதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் இஸ்ரயேலரைத் தாக்கி சிலரைச் சிறைப்பிடித்தான்.
2 அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் அழிப்போம்” என்று சபதம் செய்தார்கள்.
அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம்: “நீர் இந்த மக்களை விடுவித்து எங்கள் கையில் கொடுத்தால், நாங்கள் அவர்கள் பட்டணத்தை முழுவதும் அழித்துப்போடுவோம்” என்று நேர்த்திக்கடன் செய்தார்கள்.
3 யெகோவா இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.
யெகோவா இஸ்ரயேலரின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, கானானியரை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்பொழுது இஸ்ரயேலர் அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முழுவதும் அழித்தார்கள். அதனால் அவ்விடம், ஓர்மா என்று அழைக்கப்பட்டது.
4 அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படி, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாகப் பயணம்செய்தார்கள்; வழிப்பயணத்தின் காரணமாக மக்கள் மனவேதனையடைந்தார்கள்.
அவர்கள் ஓர் என்னும் மலையிலிருந்து செங்கடலுக்குப் போகும் வழியாக ஏதோமைச் சுற்றிப்போகும்படி பயணம் செய்தார்கள். ஆனால் மக்களோ வழியில் பொறுமையை இழந்தார்கள்.
5 மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள்.
அவர்கள் இறைவனுக்கும், மோசேக்கும் விரோதமாகப் பேசி, “பாலைவனத்தில் செத்துப்போகும்படி எங்களை எகிப்திலிருந்து வெளியே ஏன் கொண்டுவந்தீர்கள்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை. இந்த கேவலமான உணவை நாங்கள் அருவருக்கிறோம்” என்றார்கள்.
6 அப்பொழுது யெகோவா விஷமுள்ள பாம்புகளை மக்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் மக்களைக் கடித்ததினால் இஸ்ரவேலர்களுக்குள்ளே அநேக மக்கள் இறந்தார்கள்.
அப்பொழுது யெகோவா அவர்களுக்குள்ளே விஷப்பாம்புகளை அனுப்பினார். அவை மக்களைக் கடித்ததினால் இஸ்ரயேலரில் பலர் இறந்தார்கள்.
7 அதினால் மக்கள் மோசேயினிடத்தில் போய்: “நாங்கள் யெகோவாவுக்கும் உமக்கும் விரோதமாகப் பேசினதினால் பாவம்செய்தோம்; பாம்புகள் எங்களைவிட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யவேண்டும்” என்றார்கள்; மோசே மக்களுக்காக விண்ணப்பம்செய்தான்.
எனவே மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் யெகோவாவுக்கும், உமக்கும் விரோதமாய்ப் பேசியதனால் பாவம்செய்தோம். இந்தப் பாம்புகளை எங்களைவிட்டு அகற்றும்படி யெகோவாவிடம் மன்றாடும்” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களுக்காக மன்றாடினான்.
8 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஒரு விஷமுள்ள பாம்பின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.
யெகோவா மோசேயிடம், “நீ ஒரு பாம்பைச் செய்து, ஒரு கம்பத்தின்மேல் வைத்து உயர்த்திவை. கடிக்கப்பட்டவன் எவனும் அதைப்பார்த்தால் பிழைப்பான்” என்றார்.
9 அப்படியே மோசே ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; பாம்பு ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலப் பாம்பை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
அவ்வாறே மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் உயர்த்திவைத்தான். பாம்பினால் கடிக்கப்பட்ட எவனும் வெண்கலப்பாம்பை நோக்கிப் பார்த்தபோது பிழைத்தான்.
10 ௧0 இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள்.
இஸ்ரயேலர் தொடர்ந்து பயணம்பண்ணி ஒபோத்தில் முகாமிட்டார்கள்.
11 ௧௧ ஓபோத்திலிருந்து பயணம் செய்து, கிழக்குதிசைக்கு நேராக மோவாபுக்கு எதிரான வனாந்திரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள்.
பின் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, சூரிய உதயதிசையில் மோவாபிற்கு எதிர்ப்புறமாயுள்ள பாலைவனத்தில் அபாரீம் மேடுகளில் முகாமிட்டார்கள்.
12 ௧௨ அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், சேரேத் பள்ளத்தாக்கிலே முகாமிட்டார்கள்.
அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டு சாரேத் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள்.
13 ௧௩ அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பாலைவனத்தில் உள்ளதும், எமோரியரின் பிரதேசத்துக்குள் நீண்டு செல்கிறதுமான அர்னோன் ஆற்றின் அருகே முகாமிட்டார்கள். மோவாபுக்கும், எமோரியருக்கும் இடையில் மோவாபின் எல்லையாக அர்னோன் ஆறு ஓடுகிறது.
14 ௧௪ அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும்,
அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது: “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோனின் பள்ளத்தாக்கும்
15 ௧௫ ஆர் என்னும் இடத்திற்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் யெகோவாவுடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
ஆர் என்னும் பட்டணம்வரை சென்று மோவாபின் எல்லை ஓரமாக சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.”
16 ௧௬ அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; “மக்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பேயேருக்குப் போனார்கள். “மக்களைக் கூடிவரச்செய்; அவர்களுக்கு நான் தண்ணீர் கொடுப்பேன்” என்று யெகோவா மோசேக்குச் சொன்ன கிணறு அங்குதான் இருந்தது.
17 ௧௭ அப்பொழுது இஸ்ரவேலர்கள் பாடின பாட்டாவது: “ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
அப்பொழுது இஸ்ரயேலர் பாடிய பாடலாவது: “கிணற்றுத் தண்ணீரே, பொங்கி வா! அதைக் குறித்துப் பாடுங்கள்.
18 ௧௮ நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்” என்று பாடினார்கள்.
பிரபுக்கள் வெட்டிய கிணற்றைக் குறித்தும், மக்களில் உயர்குடிப்பிறந்தோர் செங்கோல்களினாலும், கோல்களினாலும் தோண்டிய கிணற்றைக்குறித்துப் பாடுங்கள்.” அதன்பின் அவர்கள் பாலைவனத்திலிருந்து மத்தானாவுக்குப் போனார்கள்.
19 ௧௯ அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
20 ௨0 பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
பாமோத்திலிருந்து மோவாபின் பள்ளத்தாக்கிற்கும் போனார்கள். அங்கே பாழ் நிலத்திற்கு எதிர்த்தாற்போல், பிஸ்காவின் உச்சி இருந்தது.
21 ௨௧ அப்பொழுது இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி:
பின்பு இஸ்ரயேலர் எமோரியரின் அரசன் சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி,
22 ௨௨ “உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி உத்திரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சைத்தோட்டங்களிலும் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், உமது எல்லையைக் கடந்துபோகும்வரை ராஜபாதையில் நடந்துபோவோம்” என்று சொல்லச்சொன்னார்கள்.
“உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். நாங்கள் எந்த வயல் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம்; எந்தவொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர்கூட குடிக்கமாட்டோம். நாங்கள் நாட்டைக் கடக்கும்வரைக்கும் அரசபாதையின் வழியாகவே செல்வோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.
23 ௨௩ சீகோன் தன்னுடைய எல்லை வழியாகக் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்திரவு கொடாமல், தன்னுடைய மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்திரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
ஆனால் சீகோன் தன் பிரதேசத்தின் வழியாக இஸ்ரயேலரைப் போகவிடாதிருந்தான். அவன் தன் முழு படையையும் திரட்டிக்கொண்டு இஸ்ரயேலருக்கு விரோதமாகப் பாலைவனத்திற்கு அணிவகுத்துச் சென்றான். அவன் யாகாசை அடைந்தபோது இஸ்ரயேலருடன் சண்டையிட்டான்.
24 ௨௪ இஸ்ரவேலர்கள் அவனைப் பட்டயக்கூர்மையினால் வெட்டி, அர்னோன் துவங்கி அம்மோன் மக்களின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்கும் உள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் மக்களின் எல்லை பாதுகாப்பானதாக இருந்தது.
ஆனால் இஸ்ரயேலரோ அவனை வாளுக்கு இரையாக்கி அர்னோன் முதல் யாப்போக்கு வரையுள்ள அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார்கள். ஆனால் அம்மோனியரின் எல்லைவரை மட்டுமே கைப்பற்றினார்கள். ஏனெனில் அவர்களுடைய எல்லை அரண் செய்யப்பட்டு இருந்தது.
25 ௨௫ இஸ்ரவேலர்கள் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியர்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள்.
இஸ்ரயேலர் எமோரியரின் எல்லா பட்டணங்களையும் கைப்பற்றி அவற்றில் குடியேறினார்கள். எஸ்போனும், அதைச் சுற்றியுள்ள எல்லா குடியிருப்புகளும் இவற்றுள் அடங்கும்.
26 ௨௬ எஸ்போனானது எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாக இருந்தது; அவன் மோவாபியர்களின் முந்தின ராஜாவுக்கு எதிராக யுத்தம்செய்து, அர்னோன் வரைக்கும் இருந்த அவனுடைய தேசத்தையெல்லாம் அவனுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டான்.
எஸ்போன் எமோரிய அரசன் சீகோனின் பட்டணமாயிருந்தது. அவன் முன்னிருந்த மோவாபின் அரசனுடன் சண்டையிட்டு அர்னோன் வரையிலிருந்த அவனுடைய நாட்டை அவனிடமிருந்து எடுத்திருந்தான்.
27 ௨௭ அதினாலே நீதிமொழியைப் பேசுகிறவர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும்.
அதினாலே அவர்களுடைய கவிஞர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள், அது திரும்பவும் கட்டப்படட்டும்; சீகோன் பட்டணம் புதுப்பிக்கப்படட்டும்.
28 ௨௮ எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவன்மார்களையும் எரித்தது.
“எஸ்போனில் இருந்து நெருப்பு வெளியேறிற்று, சீகோன் பட்டணத்திலிருந்து சுவாலை வெளியேறிற்று. அது மோவாபின் ஆர் பட்டணத்தை எரித்தது அர்னோன் மேடுகளின் குடிகளையும் எரித்துப்போட்டது.
29 ௨௯ ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன்னுடைய மகன்களையும் தன்னுடைய மகள்களையும் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.
மோவாபியரே உங்களுக்கு ஐயோ கேடு! கேமோஷின் மக்களே நீங்கள் அழிந்தீர்கள்! அவன் தன் மகன்களை அகதிகளாகவும், தன் மகள்களை சிறைக்கைதிகளாகவும் எமோரிய அரசன் சீகோனிடம் ஒப்புக்கொடுத்தான்.
30 ௩0 அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம், தீபோன் ஊர்வரைக்கும் அழிந்தது; மெதெபாவுக்கு அருகான நோப்பா பட்டணம்வரை அவர்களைப் பாழாக்கினோம்” என்று பாடினார்கள்.
“ஆனால், நாங்களோ அவர்களைத் தள்ளி வீழ்த்தினோம்; தீபோன்வரை எஸ்போன் அழிந்தது. மேதேபாவரை பரந்திருக்கும் நோப்பா பகுதிவரையும் அவர்களை அழித்தோம் என்று பாடுகிறார்கள்.”
31 ௩௧ இஸ்ரவேலர்கள் இப்படியே எமோரியர்களின் தேசத்திலே குடியிருந்தார்கள்.
இப்படியாக இஸ்ரயேலர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்.
32 ௩௨ பின்பு, மோசே யாசேர் பட்டணத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கைப்பற்றி, அங்கே இருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
மோசே யாசேருக்கு உளவாளிகளை அனுப்பியபின், இஸ்ரயேலர் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள்.
33 ௩௩ பின்பு பாசானுக்குப் போகிற வழியாகத் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன்னுடைய எல்லா மக்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எத்ரேயிக்குப் புறப்பட்டு வந்தான்.
பின்பு இஸ்ரயேலர் திரும்பி பாசானுக்குப்போகும் வழியாய்ப் போனார்கள். அப்பொழுது பாசானின் அரசன் ஓக் என்பவன் இஸ்ரயேலரை எதிர்த்து யுத்தம் செய்ய தனது முழு படையுடன் எத்ரேயுக்குப் போனான்.
34 ௩௪ யெகோவா மோசேயை நோக்கி: “அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய மக்கள் எல்லோரையும், அவனுடைய தேசத்தையும் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.
ஆனால் யெகோவா மோசேயிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் நான் உன் கையில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.
35 ௩௫ அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாக இல்லாதபடி அவனையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய எல்லா மக்களையும் வெட்டிப்போட்டு, அவனுடைய தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.
அப்படியே இஸ்ரயேலர் அவனையும், அவன் மகன்களையும், அவனுடைய முழு படையையும் வெட்டி வீழ்த்தினார்கள். ஒருவரையும் தப்பிப்போக விடவில்லை. அவர்கள் அவனுடைய நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள்.

< எண்ணாகமம் 21 >