< மல்கியா 2 >
1 ௧ இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது.
“ஆசாரியர்களே, இப்போதும் இந்த எச்சரிக்கை உங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
2 ௨ நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
நீங்கள் செவிகொடாமலும், என் பெயரைக் கனம்பண்ண உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும்விட்டால், உங்கள்மேல் ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன். ஆம், நீங்கள் என்னைக் கனம்பண்ணுவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவைகளை சபித்து விட்டேன்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
3 ௩ இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.
“உங்கள் நிமித்தம் உங்கள் வழித்தோன்றல்களை நான் கடிந்துகொள்வேன்; நீங்கள் பண்டிகைக் காலங்களில் பலியிட்ட மிருகங்களின் கழிவுகளை உங்கள் முகங்களில் வீசுவேன். நீங்களும் அதனுடன் எறியப்படக் கொண்டுபோகப்படுவீர்கள்.
4 ௪ லேவியுடன்செய்த என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ஆசாரியர்களே நான் உங்களுக்கு ஒரு எச்சரிப்பை அனுப்புகிறேன். லேவியின் சந்ததியுடன் நான் செய்துகொண்ட உடன்படிக்கை மேலும் தொடரும்படி, இந்த எச்சரிக்கையை நான் அனுப்பினேன் என்பதை அப்பொழுது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
5 ௫ அவனோடே செய்த என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்திற்குப் பயந்தும் இருந்தான்.
“நான் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கும் உடன்படிக்கை; அவற்றை நான் அவனுக்குக் கொடுத்தேன்; இதனால் நான் அவனிடம் பயபக்தியை எதிர்ப்பார்த்தேன். அவனும் என்னிடம் பயபக்தியாயிருந்து என் பெயரைக் குறித்த பயம் உடையவனாயிருந்தான்.
6 ௬ சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாக வாழ்ந்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
அவன் வாயில் உண்மையான அறிவுறுத்தல் இருந்தது. அவனுடைய உதடுகளில் பொய்யானதொன்றும் காணப்படவில்லை. அவன் என்னோடு சமாதானத்துடனும், நீதியுடனும் நடந்தான். அவன் அநேகரைப் பாவத்திலிருந்து திருப்பினான்.
7 ௭ ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய யெகோவாவின் தூதன்.
“ஆசாரியனின் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய வாயிலிருந்து மனிதர் அறிவுறுத்தலை நாடிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவனே சேனைகளின் யெகோவாவின் தூதுவனாயிருக்கிறான்.
8 ௮ நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறச்செய்தீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ஆனால் நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை உங்கள் போதனைகளால் இடறிவிழப்பண்ணினீர்கள்; நான் லேவியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
9 ௯ நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன்.
“நீங்கள் என்னுடைய வழிகளைப் பின்பற்றாது, என் சட்டத்தின் விஷயங்களில் பாகுபாடு காட்டியதால், நான் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அவமானப்படுத்தி, இழிவுக்குள்ளாகும்படி செய்திருக்கிறேன்.”
10 ௧0 நம்மெல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மை உருவாக்கவில்லையோ? நாம் நம்முடைய முற்பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்கு ஏன் துரோகம் செய்யவேண்டும்?
யூதா மக்களே! நம் எல்லோருக்கும் ஒரே தகப்பன் அல்லவா இருக்கிறார்? நம் எல்லோரையும் ஒரே இறைவன்தானே படைத்தார். அப்படியிருக்க நாம் ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்களாயிருந்து, நம் தந்தையர்களுடன் இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஏன் தூய்மைக்கேடாக்க வேண்டும்?
11 ௧௧ யூதா மக்கள் துரோகம் செய்தார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; யெகோவா சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா மக்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் மகள்களை திருமணம்செய்தார்கள்.
யூதா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. இஸ்ரயேலிலும், எருசலேமிலும் அருவருக்கத்தக்க செயல் செய்யப்பட்டிருக்கிறது: யூதா மனிதர் அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிற பெண்களைத் திருமணம் செய்ததினால், யெகோவா விரும்பும் பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள்.
12 ௧௨ இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாக இருந்தாலும், உத்திரவு கொடுக்கிறவனாக இருந்தாலும், சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்துகிறவனாக இருந்தாலும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இல்லாமல் யெகோவா அழிப்பார்.
இதைச் செய்கிற மனிதனை குறித்தோ, அவன் யாராயிருந்தாலும் அவனை யெகோவா யாக்கோபின் கூடாரங்களில் வாழாதபடி முழுவதும் அகற்றிவிடட்டும்; அவன் சேனைகளின் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்துகிறவனாய் இருந்தாலும், அவனை அகற்றிவிடட்டும்.
13 ௧௩ நீங்கள் இரண்டாவது முறையும் இதைச் செய்து, யெகோவாவுடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதிக்கமாட்டார், அதை உங்கள் கைகளில் பிரியமாக ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
நீங்கள் இன்னொன்றைச் செய்கிறீர்கள்: யெகோவாவின் பலிபீடத்தை கண்ணீரினால் நிரப்புகிறீர்கள். யெகோவா உங்கள் காணிக்கைகளைக் கண்ணோக்கிப் பாராமல் இருப்பதாலும், அவற்றை உங்கள் கைகளிலிருந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளாததினாலும் அழுது புலம்புகிறீர்கள்.
14 ௧௪ ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே.
நீங்களோ, “இது ஏன்?” என்றும் கேட்கிறீர்கள். ஏனென்றால் நீயோ உனது திருமண உடன்படிக்கையின் மனைவி உன் துணையாயிருந்தும், அவளுக்குத் துரோகம் செய்திருக்கிறாய்; இதனால் உனது வாலிப காலத்து மனைவிக்கும் உனக்கும் இடையே உடன்படிக்கையின் சாட்சியாய் இருந்த யெகோவா விளக்கம் கேட்கிறார்.
15 ௧௫ அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
உங்கள் இருவரையும் யெகோவா ஒருவராய் இணைக்கவில்லையா? நீங்கள் உடலிலும் ஆவியிலும் அவருடையவர்களே. ஏன் ஒருவராய் இணைத்தார்? அவர் தனக்கு இறை பக்தியுள்ள சந்ததியை பெறுவதற்காகவே இவ்வாறு செய்தார். எனவே நீங்கள் உங்கள் ஆவியிலே உங்களைக் காத்துக்கொண்டு, உங்கள் வாலிப வயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள்.
16 ௧௬ விவாகரத்தை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் ஆடையை மூடுகிறான் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்செய்யாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
நான் விவாகரத்தை வெறுக்கிறேன் என இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார். ஒரு மனிதன் உடையினால் தன்னை மூடி மறைப்பதுபோல், வன்முறையை மூடி மறைப்பதை நான் வெறுக்கிறேன் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். எனவே நீங்கள் உங்களை ஆவியில் காத்துக்கொண்டு, நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருங்கள்.
17 ௧௭ உங்கள் வார்த்தைகளினாலே யெகோவாவை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் யெகோவாவின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்மேல் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
உங்கள் வார்த்தையினாலே யெகோவாவை சோர்வடையச் செய்தீர்கள். “எப்படி அவரை சோர்வடைய வைத்தோம்?” எனக் கேட்கிறீர்கள். தீமையானவற்றைச் செய்கிற எல்லோரையும் பார்த்து, யெகோவாவின் பார்வையில் நல்லவர்கள் என்றும், அவர்களிலே அவர் மகிழ்ச்சிகொள்கிறார் என்றும் சொல்கிறீர்கள். “நீதியை வழங்கும் இறைவன் எங்கே?” என்று கேட்கும்போதுமே அவ்வாறு செய்கிறீர்கள்.