< லேவியராகமம் 21 >

1 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில் இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே சொல்.
யெகோவா மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆசாரியனானவன் தன் மக்களில் சாகும் யாருக்காகவும் சம்பிரதாயப்படி தன்னை அசுத்தமாக்கிக்கொள்ளக் கூடாது.
2 தன் தாயும், தன் தகப்பனும், தன் மகனும், தன் மகளும், தன் சகோதரனும்,
நெருங்கிய உறவினரான தன் தகப்பன், தாய், தன் மகன், மகள், தன் சகோதரன் ஆகியோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்தலாம்.
3 ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
அல்லது கணவன் இல்லாத காரணத்தால் தன்னில் தங்கி வாழ்கின்ற, திருமணமாகாத தனது சகோதரிக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
4 தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது.
திருமணத்தின்மூலம் தனக்கு உறவினரானோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
“‘ஆசாரியர்கள் தங்கள் தலைகளை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடிகளின் ஓரத்தைக் கத்தரிக்கவோ, தங்கள் உடல்களைக் கீறிக்கொள்ளவோ கூடாது.
6 தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள் யெகோவாவின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக இருக்கவேண்டும்.
அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். தங்களுடைய இறைவனின் பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனின் உணவை நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறபடியால், அவர்கள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
7 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது.
“‘அவர்கள் வேசித்தனத்தால் கறைப்பட்ட பெண்களையோ அல்லது தங்கள் கணவர்களிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர்களையோ திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் ஆசாரியர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமானவர்கள்.
8 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.
ஆசாரியர்கள் உங்கள் இறைவனின் உணவைப் பலியாகச் செலுத்துகிறபடியால், அவர்களைப் பரிசுத்தமானவர்களாக மதியுங்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறபடியால், அவர்களையும் பரிசுத்தமானவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்.
9 ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
“‘ஒரு ஆசாரியனின் மகள் வேசியாகி அதினால் தன்னைக் கறைப்படுத்தினால், அவள் தன் தகப்பனை அவமானப்படுத்துகிறாள். அவள் நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.
10 ௧0 “தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும்,
“‘தன் சகோதரர்கள் மத்தியில் தன் தலையின்மேல் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டவனும், ஆசாரியனுக்கான உடைகளை அணிவதற்கு நியமிக்கப்பட்டவனுமான தலைமை ஆசாரியன் தன் தலைமயிரைக் குலைக்கவோ, தன் உடைகளைக் கிழிக்கவோ கூடாது.
11 ௧௧ சடலம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும், தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
அவன் ஒரு இறந்த உடல் கிடக்கும் இடத்திற்குப் போகக்கூடாது. அவனுடைய தகப்பனோ, தாயோ இறந்தாலும் அவன் தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது.
12 ௧௨ பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் யெகோவா.
அவன் தன் இறைவனின் பரிசுத்த இடத்தைவிட்டுப் புறப்படவோ, அதைத் தூய்மைக்கேடாக்கவோ கூடாது. ஏனெனில் அவன் தன் இறைவனின் அபிஷேக எண்ணெயால் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறான். நானே யெகோவா.
13 ௧௩ கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும்.
“‘தலைமை ஆசாரியன் திருமணம் செய்யும் பெண், ஒரு கன்னிகையாகவே இருக்கவேண்டும்.
14 ௧௪ விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன்.
அவன் ஒரு விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ, வேசித்தனத்தினால் கறைப்பட்ட ஒரு பெண்ணையோ திருமணம் செய்யக்கூடாது. தன் சொந்த மக்கள் மத்தியில் உள்ள கன்னிகையை மட்டுமே திருமணம் செய்யவேண்டும்.
15 ௧௫ அவன் தன் வித்தைத் தன் மக்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல் என்றார்.
இவ்வாறாக அவன் தன் மக்கள் மத்தியில் தன் சந்ததிகளை மாசுப்படுத்தாமல் இருக்கவேண்டும். அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே’” என்றார்.
16 ௧௬ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
யெகோவா மோசேயிடம்,
17 ௧௭ “நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது.
“நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் அங்கவீனம் உள்ள எவனும் தன் இறைவனின் உணவைச் செலுத்தும்படிக்கு அருகில் வரக்கூடாது.
18 ௧௮ ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட உறுப்புள்ளவனானாலும்,
எத்தகைய அங்கவீனமுள்ளவனும் சமீபத்தில் வரக்கூடாது. குருடன், முடவன், உருவம் சிதைந்தவன், உருவக் குறைபாடுள்ளவன்,
19 ௧௯ கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும்,
கை அல்லது கால் முடமானவன்,
20 ௨0 கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது.
கூன்முதுகன், வளர்ச்சி குன்றியவன், கண்ணில் குறைபாடுள்ளவன், சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளவன், விதைகள் சேதப்பட்டவன் ஆகிய எவனுமே அவ்வாறு வரக்கூடாது.
21 ௨௧ ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.
ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளில் ஊனமுடைய யாராவது, நெருப்பினால் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்த சமீபத்தில் வரக்கூடாது. அவன் ஊனமுள்ளவனாகையால், தன் இறைவனின் உணவைச் செலுத்தும்படி சமீபமாய் வரக்கூடாது.
22 ௨௨ அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் சாப்பிடலாம்.
அவன் தன் இறைவனின் மகா பரிசுத்தமான உணவையும், மற்ற பரிசுத்தமான உணவையும் சாப்பிடலாம்.
23 ௨௩ ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.
ஆனாலும் அவன் தன் அங்கவீனத்தினிமித்தம் திரைக்குச் சமீபமாய்ப் போகவோ, பலிபீடத்தை அணுகவோ கூடாது. இவ்வாறாக என் பரிசுத்த இடத்தைத் தூய்மைக்கேடாக்கக் கூடாது. ஆசாரியர்களைப் பரிசுத்தமாக்கும் யெகோவா நானே’” என்றார்.
24 ௨௪ மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான்.
மோசே இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் அனைவருக்கும் சொன்னான்.

< லேவியராகமம் 21 >