< நியாயாதிபதிகள் 5 >
1 ௧ அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:
அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
2 ௨ “யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும், மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
“யெகோவா இஸ்ரயேலுக்காக நீதியை நிலைநாட்டியதற்காகவும், மக்கள் தங்களை மனமுவர்ந்து ஒப்படைத்ததற்காகவும் யெகோவாவைத் துதியுங்கள்!
3 ௩ ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன்.
“அரசர்களே கேளுங்கள்! ஆளுநர்களே செவிகொடுங்கள்! யெகோவாவை பாடுவேன், நான் பாடுவேன். இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு, இசை மீட்டுவேன்.
4 ௪ யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
“யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும், ஏதோம் நாட்டைவிட்டு அணிவகுத்துச் சென்றபோதும் பூமி அதிர்ந்தது. வானங்கள் பொழிந்தன. மேகங்கள் தண்ணீரை கீழே பொழிந்தன.
5 ௫ யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன. இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.
6 ௬ ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
“ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும் வீதிகள் கைவிடப்பட்டிருந்தன. பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றார்கள்.
7 ௭ தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று. தெபோராளாகிய நான் இஸ்ரயேலில் தாயாக எழும்பும்வரை அது நின்றுபோயிற்று.
8 ௮ புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
எப்போது அவர்கள் புது தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்களோ, அப்போதே யுத்தமும் பட்டண வாசலில் வந்தது. இஸ்ரயேலில் உள்ள நாற்பதாயிரம் பேரிடம் கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
9 ௯ மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.
எனது இருதயமோ இஸ்ரயேலின் தலைவர்களோடே இருக்கிறது. மக்களுக்குள்ளே விரும்பிவந்த தொண்டர்களுடனும் இருக்கிறது. யெகோவாவைத் துதியுங்கள்!
10 ௧0 வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பற்றி யோசியுங்கள்.
“வெள்ளைக் கழுதைமேல் சவாரி செய்கிறவர்களே, சேணத்தின் கம்பளத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களே, வீதி வழியாய் நடப்பவர்களே, யோசித்துப் பாருங்கள்.
11 ௧௧ தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்; அதுமுதல் யெகோவாவின் மக்கள் நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
தண்ணீர் குடிக்கும் இடங்களில் பாடகரின் குரலையும். அவர்கள் யெகோவாவின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள். இஸ்ரயேலின் வீரர்களின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள். “அப்பொழுது யெகோவாவிடம் மக்கள் பட்டண வாசலுக்கு சென்றார்கள்.
12 ௧௨ விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
விழித்தெழு, விழித்தெழு தெபோராளே! விழித்தெழுந்து பாட்டுப்பாடு. பாராக்கே எழுந்திரு! அபினோமின் மகனே உன்னை சிறைப்பிடித்தவர்களைச் சிறைபிடி.
13 ௧௩ மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
“தப்பியிருந்த மனிதர் உயர்குடிமக்களிடம் வந்தார்கள். யெகோவாவின் மக்கள் வல்லவர்களுடன் என்னிடம் வந்தார்கள்.
14 ௧௪ அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
அமலேக்கியர் வாழும் இடமான எப்பிராயீமிலிருந்து சிலர் வந்தார்கள். பென்யமீனியர் உன்னைப் பின்தொடர்ந்தவர்களுடன் சேர்ந்தார்கள். மாகீரில் இருந்து தலைவர்களும் வந்தார்கள். செபுலோனிலிருந்து அதிகாரிகளும் வந்தார்கள்.
15 ௧௫ இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடு இருந்தார்கள். ஆம்! இசக்கார் கோத்திரத்தார் பாராக்கின் பின்னே பள்ளத்தாக்கில் விரைந்து சென்றார்கள். ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் இருதயத்தை ஆராய்ந்தார்கள்.
16 ௧௬ மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
ஏன் நீ தொழுவங்களுக்குள் இருக்கிறாய்? மந்தைகளைக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்பதற்காகவா? ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள் தங்கள் இருதயத்தை அதிகமாய் ஆராய்ந்தார்கள்.
17 ௧௭ கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
கீலேயாத் யோர்தானின் மறுகரையில் தங்கியிருந்தது. தாண், ஏன் கப்பல்களின் அருகே தயங்கி நின்றான்? ஆசேர் கடற்கரையில் தரித்து, சிறுவளைகுடா பகுதிகளில் தங்கியிருந்தான்.
18 ௧௮ செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர்.
19 ௧௯ ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்; அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
“அரசர்கள் வந்தார்கள். அவர்கள் சண்டையிட்டார்கள். கானானின் அரசர்கள் மெகிதோவின் தண்ணீர் அருகே தானாக்கில் யுத்தம் செய்தார்கள். ஆனால் அவர்கள் வெள்ளியையோ, கொள்ளையையோ சுமந்து செல்லவில்லை.
20 ௨0 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
வானங்களில் இருந்து நட்சத்திரங்கள் சண்டையிட்டன. அவை தங்கள் வழிகளிலிருந்து சிசெராவுக்கு எதிராகச் சண்டையிட்டன.
21 ௨௧ கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, நீ பெலவான்களை மிதித்தாய்.
கீசோன் நதி அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று. பூர்வகாலத்து கீசோன் நதி, அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று. ஆகவே என் ஆத்துமாவே நீ வலிமைபெற்று முன்னேறிப் போ;
22 ௨௨ அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
குதிரைகளின் குளம்புகள் மூழ்கின. அவனுடைய வலிமையான குதிரைகள் பாய்ந்து செல்கின்றன.
23 ௨௩ மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.
‘மேரோசைச் சபியுங்கள், அதன் மக்களைக் கடுமையாகச் சபியுங்கள்’ என்று யெகோவாவின் தூதனானவர் சொல்கிறார். ‘ஏனெனில் அவர்கள் யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை; வலியவர்களுக்கு எதிராக யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை.’
24 ௨௪ பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
“பெண்களுக்குள்ளே யாகேல் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள், கூடாரங்களில் வாழும் பெண்களுக்குள் கேனியனான ஏபேரின் மனைவி அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
25 ௨௫ தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான், அவளோ அவனுக்கு பால் கொடுத்தாள்; அவள் உயர்குடியினருக்குரிய கிண்ணத்திலே தயிர் கொண்டுவந்தாள்.
26 ௨௬ தன்னுடைய கையால் ஆணியையும், தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவனுடைய தலையில் உருவக்குத்தி, அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.
அவளது கை கூடாரத்தின் முளையையும், வலதுகை தொழிலாளியின் சுத்தியலையும் எட்டி எடுத்தது. அவள் சிசெராவை அடித்தாள், அவனுடைய தலையை நொறுக்கினாள்; அவள் அவனுடைய நெற்றியைக் குத்திச் சிதறடித்தாள்.
27 ௨௭ அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.
அவள் காலடியில் அவன் சரிந்து விழுந்தான்; அவன் விழுந்து அங்கேயே கிடந்தான். அவளது காலடியில் சரிந்தான், விழுந்தான்; அவன் சரிந்த இடத்திலே விழுந்து செத்தான்.
28 ௨௮ “சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள்.
“ஜன்னல் வழியே சிசெராவின் தாய் எட்டிப்பார்த்தாள்; ‘ஏன் அவனுடைய இரதம் அங்கே இன்னும் வரவில்லை? அவனுடைய இரதங்களின் ஓட்டம் ஏன் இன்னும் தாமதிக்கிறது?’ என பலகணியின் பின்நின்று புலம்பினாள்.
29 ௨௯ அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக:
அவளுடைய தோழிகளில் ஞானமுள்ளவள் பதிலளித்தாள்; அவளும் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
30 ௩0 அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், என் கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
‘அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடித்து பங்கிடுகிறார்களோ, ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள், சிசெராவுக்கு கொள்ளையிட்ட பலவர்ண உடைகள், கொள்ளையிட்ட சித்திர வேலைப்பாடுள்ள பலவர்ண உடைகள், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு மிக நுட்பமான சித்திர வேலைப்பாடுள்ள உடைகளையும் கொடுக்க வேண்டாமோ?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
31 ௩௧ யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.
“எனவே யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்கள் இப்படியே அழியட்டும்! உம்மில் அன்புகூருகிறவர்களோ தன் கெம்பீரத்தில் உதிக்கும் சூரியனைப்போல் இருக்கட்டும்.” இதன்பின்பு நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாய் இருந்தது.