< யோசுவா 9 >
1 ௧ யோர்தான் நதிக்கு மேற்கு திசையிலுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான மத்திய தரை சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
யோர்தானுக்கு மேற்கேயிருந்த அரசர்கள் இச்செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இவர்கள் மலைநாட்டின் மேற்கேயுள்ள மலையடிவாரத்திலும், மத்திய தரைக்கடல் கரையோரம் முழுவதிலும் லெபனோன் வரையும் வாழ்ந்த ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய நாடுகளின் அரசர்கள்.
2 ௨ அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள்.
இந்த அரசர்கள் ஒன்றுசேர்ந்து யோசுவாவுக்கும், இஸ்ரயேலருக்கும் எதிராகப் போர் தொடுப்பதற்கென வந்தார்கள்.
3 ௩ எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
ஆயினும் எரிகோ, ஆயிபட்டணங்களுக்கு யோசுவா செய்தவற்றைக் கிபியோனின் மக்கள் கேள்விப்பட்டபோது,
4 ௪ ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் தேச பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து,
கிபியோன் மக்கள் பிரதிநிதிகள்போல தந்திரமாக சென்றார்கள். அவர்கள் கந்தையான சாக்கு மூட்டைகளையும் கிழிந்து தைக்கப்பட்ட பழைய தோல் திராட்சைக் குடுவைகளையும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு,
5 ௫ பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது.
தேய்ந்ததும், தைக்கப்பட்டதுமான பழைய காலணிகளையும், பழைய உடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்த பூசணம் பிடித்திருந்த அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர்.
6 ௬ அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள்.
இவ்வாறான கோலத்துடன் இக்குழுவினர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் சென்றனர். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும் சென்று, “நாங்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வருகிறோம். எனவே எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்” என்றனர்.
7 ௭ அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள்.
அதற்கு இஸ்ரயேல் மனிதர் அந்த ஏவியரிடம், “ஒருவேளை நீங்கள் எங்களுக்கு அருகில் வாழ்பவர்களாய் இருக்கக்கூடும். அப்படியானால் நாங்கள் உங்களோடு எப்படி உடன்படிக்கை செய்துகொள்ள முடியும்?” என்று கேட்டனர்.
8 ௮ அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் அடிமைகள்” என்றனர். ஆனாலும் யோசுவா அவர்களிடம், “நீங்கள் யார்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
9 ௯ அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும்,
அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் புகழின் நிமித்தம், உங்கள் அடியவர்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வந்திருக்கிறோம். ஏனெனில், அவர் எகிப்திலே செய்த செயல்கள் எல்லாவற்றைப்பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டோம்.
10 ௧0 அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.
மேலும், அவர் யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள அஸ்தரோத்தில் ஆட்சி செய்த எமோரியரின் இரண்டு அரசர்களான, எஸ்போனின் அரசனாகிய சீகோனுக்கும், பாசானின் அரசனாகிய ஓகுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.
11 ௧௧ ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
எனவே எங்கள் சபைத்தலைவர்களும், எங்கள் தேசத்தில் வாழும் எல்லோரும் எங்களிடம், ‘உங்கள் பயணத்துக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு இஸ்ரயேலரிடம் போய், நாங்கள் உங்கள் அடிமைகளாயிருப்போம்; எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்கள்.
12 ௧௨ உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
உங்களிடம் வருவதற்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, இந்த அப்பங்களைச் சுடச்சுடக் கட்டிக்கொண்டு வந்தோம். இப்பொழுதோ இவைகள் எவ்வளவாய்க் காய்ந்து பூசணம் பிடித்திருக்கின்றன என்று நீங்களே பாருங்கள்.
13 ௧௩ நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள்.
இந்தத் திராட்சை தோற்குடுவைகள் நாங்கள் நிரப்பியபோது புதிதாய் இருந்தன. ஆனால் இப்பொழுது எவ்வளவாக கிழிந்துவிட்டன என்று பாருங்கள். மிக நீண்ட பிரயாணத்தினால், எங்கள் உடைகளும் பாதணிகளும் பழசாய்ப்போய்விட்டன” என்றார்கள்.
14 ௧௪ அப்பொழுது இஸ்ரவேலர்கள்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
இஸ்ரயேலர், அவர்களுடைய உணவுப்பொருளில் கொஞ்சம் எடுத்து ருசிபார்த்தார்கள். ஆனால் யெகோவாவிடம் அவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை.
15 ௧௫ யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள்.
அதன்பின் யோசுவா அவர்களை அங்கு வாழவிடுவதென ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தான். மக்கள் சமுதாயத்தில் இஸ்ரயேலரின் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்று ஆணையிட்டு உறுதிசெய்தனர்.
16 ௧௬ அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
இஸ்ரயேலர் கிபியோன் நகரத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மூன்றே நாட்களில், அவர்கள் தமக்கு அருகில் வசிக்கும் அயலகத்தாரெனக் கேள்விப்பட்டார்கள்.
17 ௧௭ இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
எனவே மூன்றாம் நாள் இஸ்ரயேலர் புறப்பட்டு ஏவியரின் பட்டணங்களான கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யாரீம் என்னும் பட்டணங்களை அடைந்தார்கள்.
18 ௧௮ சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
ஆயினும் மக்கள் சமுதாயத் தலைவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், இஸ்ரயேலர் அந்நகரங்களைத் தாக்கவில்லை. இதனால் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைவர்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
19 ௧௯ அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது.
ஆனால் தலைவர்கள் எல்லோரும் அதற்கு மறுமொழியாக: “நாங்கள் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் ஆணையிட்டுவிட்டோம். எனவே நாம் அவர்களை இப்பொழுது தொடமுடியாது.
20 ௨0 கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
மாறாக நாம் அவர்களுக்கு இப்படிச் செய்வோம். நாங்கள் அவர்களுக்கு அளித்த ஆணைப்படி வாக்குறுதியை மீறுவதனால் நம்மேல் இறைவனின் கோபம் ஏற்படாதபடிக்கு, அவர்களை நாம் வாழ உயிரோடு விட்டுவிடுவோம்.
21 ௨௧ பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.
அவர்கள் வாழட்டும்; அவர்கள் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினருக்கும் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருக்கட்டும்” என்றனர். இவ்வாறு தலைவர்களால் அவர்களுக்குக் கொடுத்த வாக்கு காப்பாற்றப்பட்டது.
22 ௨௨ பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
பின் யோசுவா கிபியோனியரை தன்னிடம் வரச்செய்து அவர்களிடம், “நீங்கள் எங்களுக்கு அருகில் குடியிருந்துகொண்டு, வெகுதொலைவிலிருந்து வந்தவர்களெனக் கூறி ஏன் எங்களை ஏமாற்றினீர்கள்?
23 ௨௩ இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.
இப்பொழுது நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். இனிமேல் என் இறைவனின் ஆலயத்திற்கு நீங்கள் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருப்பீர்கள்; இவ்வேலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் நீங்கமாட்டீர்கள்” என்றான்.
24 ௨௪ அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா முழு நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், அங்குள்ள குடிகளை உங்களுக்கு முன்பாக அழிக்கவும், மோசேக்கு எவ்வாறு கட்டளையிட்டார் என்பதை, உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கேள்விப்பட்டோம். எனவே உங்கள் நிமித்தம் எங்கள் உயிருக்குப் பயந்தே இப்படிச் செய்தோம்.
25 ௨௫ இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
இப்பொழுது நாங்கள் உமது கையிலேயே இருக்கிறோம். எது உமக்கு நல்லதாகவும், சரியாகவும் தோன்றுகிறதோ அதை எங்களுக்குச் செய்யும்” என்றார்கள்.
26 ௨௬ அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.
இவ்விதமாய் யோசுவா இஸ்ரயேலரிடமிருந்து கிபியோனியர்களைக் காப்பாற்றினான். இஸ்ரயேலர் அவர்களை அழிக்கவில்லை.
27 ௨௭ இந்தநாள்வரை இருக்கிறபடியே, அந்தநாளில் அவர்களைச் சபைக்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்திற்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் வைத்தான்.
அவன் அன்றே கிபியோனியரை, இஸ்ரயேலின் மக்கள் சமுதாயத்திற்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் அமைக்கப்படும் பலிபீடத்திற்கும் விறகு வெட்டுபவர்களாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் நியமித்தான். இன்றுவரை அவர்கள் அவ்வாறே இருக்கிறார்கள்.