< யோசுவா 22 >

1 அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து,
அதன்பின்பு யோசுவா ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரை வரவழைத்து,
2 அவர்களை நோக்கி: யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள்.
அவர்களிடம், “யெகோவாவின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியெல்லாம் நீங்கள் செய்து, நான் கட்டளையிட்ட எல்லாவற்றிலும், எனக்கும் கீழ்ப்படிந்தீர்கள்.
3 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.
இன்றுவரை வெகுகாலமாக நீங்கள் உங்கள் சகோதரரை கைவிட்டுவிடவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த பணியை நீங்கள் செய்துமுடித்தீர்கள்.
4 இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா தாம் வாக்களித்தபடியே, உங்கள் சகோதரருக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே யெகோவாவின் அடியவனாகிய மோசே யோர்தானுக்கு அப்பால் உங்களுக்குக் கொடுத்த நாட்டில் இருக்கும் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போங்கள்.
5 ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
ஆனால் யெகோவாவின் அடியவனாகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளையையும் சட்டத்தையும் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்: உங்கள் இறைவனாகிய யெகோவாவை நேசித்து, அவரின் வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருக்குச் சேவை செய்யக் கவனமாய் இருங்கள்” என்றான்.
6 இவ்விதமாக யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
அதன்பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பினான், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
7 மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கு மோசே பாசானிலே பங்கு கொடுத்தான்; அதினுடைய மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தான் நதிக்கு இந்தப் புறத்திலே மேற்கே அவர்களுடைய சகோதரர்களோடு பங்கு கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
மனாசேயின் அரைக் கோத்திரத்திற்கு மோசே பாசானில் நிலத்தைக் கொடுத்திருந்தான். மற்ற அரைக் கோத்திரத்திற்கு யோசுவா யோர்தான் நதியின் மேற்பகுதியில் அவர்களின் சகோதரர்களுடனே நிலம் கொடுத்தான். பின் யோசுவா அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை ஆசீர்வதித்து,
8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்போடும், அநேக ஆடைகளோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்களுடைய எதிரிகளிடம் கொள்ளையிட்டதை உங்களுடைய சகோதரர்களோடு பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.
“உங்கள் பெருகிய செல்வத்துடன் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகையான மந்தை, வெள்ளி, தங்கம், வெண்கலம், இரும்பு, ஏராளமான உடைகள் ஆகிய கொள்ளைப்பொருட்களை உங்கள் சகோதரர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுங்கள்” என்றான்.
9 அப்பொழுது ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, அவர்கள் கைவசப்படுத்திக்கொண்ட அவர்களுடைய சொந்த தேசமான கீலேயாத் தேசத்திற்குப் போக, கானான் தேசத்தில் உள்ள சீலோவில் இருந்த இஸ்ரவேல் மக்களைவிட்டுத் திரும்பிப்போனார்கள்.
எனவே ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோர் கானான் தேசத்தில் உள்ள சீலோ என்னும் இடத்தில் மற்ற இஸ்ரயேலரை விட்டுப்பிரிந்து தங்கள் சொந்த நாடான கீலேயாத்திற்குப் போனார்கள். இது யெகோவாவின் கட்டளைப்படி மோசேயினால் அவர்களுக்குச் சொத்துரிமையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.
10 ௧0 கானான் தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபனுடைய சந்ததியினர்களும், காத்தின் சந்ததியினர்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், அங்கே யோர்தான் நதியின் மேற்கு பகுதியில் பார்வைக்குப் பெரிதான ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள்.
ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோர் கானான் தேசத்திலே யோர்தான் நதிக்கு அருகேயுள்ள கெலிலோத்துக்கு வந்தபோது, யோர்தானுக்கு அருகே மிகப்பெரிய தோற்றமுடைய பலிபீடம் ஒன்றைக் கட்டினார்கள்.
11 ௧௧ ரூபனுடைய சந்ததியினர்களும் காத்தின் சந்ததியினர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் கானான் தேசத்திற்கு எதிரே இஸ்ரவேல் மக்களுக்குச் சொந்தமான யோர்தானின் எல்லைகளில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேள்விப்பட்டார்கள்.
இஸ்ரயேலருக்குரிய பகுதியில் யோர்தானுக்கு அருகேயுள்ள கானானின் எல்லையில் உள்ள கெலிலோத்தில் அவர்கள் பலிபீடத்தை எழுப்பினதை மற்ற இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.
12 ௧௨ அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் மக்களின் சபையாரெல்லோரும் அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்வதற்காக சீலோவிலே கூடி,
அப்பொழுது இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவர்களுக்கெதிராக யுத்தம் புரிவதற்காக சீலோவிலே ஒன்றுதிரண்டது.
13 ௧௩ கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் கோத்திரத்தார்களிடமும், காத் கோத்திரத்தார்களிடமும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களிடமும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய மகனாகிய பினெகாசையும்,
எனவே இஸ்ரயேலர் ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசை ரூபன், காத், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம் கீலேயாத்திற்கு அனுப்பினார்கள்.
14 ௧௪ அவனோடு இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரம்பேர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தான்.
அவனுடன் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவனாக இன்னும் பத்துத் தலைவர்களையும் அனுப்பினார்கள். அவர்கள் ஒவ்வொருவனும் இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுள் ஒரு குடும்பத் தலைவனாக இருந்தான்.
15 ௧௫ அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் கோத்திரத்தார், காத் கோத்திரத்தார், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களாகிய இவர்களிடம் வந்து:
அவர்கள் கீலேயாத்திற்குப்போய் ரூபனியர், காத்தியர் மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம்,
16 ௧௬ நீங்கள் இந்த நாளிலே யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்பி, இந்த நாளிலே யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்யும்படியாக உங்களுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராகச் செய்த இந்தத் துரோகம் என்ன?
“யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதும் சொல்கிறது என்னவென்றால்: ‘நீங்கள் எப்படி இஸ்ரயேலரின் இறைவனுக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்? இப்பொழுது நீங்கள் எப்படி யெகோவாவைவிட்டு வழிவிலகி அவருக்கு எதிராகக் கலகம்பண்ணி உங்களுக்கென ஒரு பலிபீடத்தைக் கட்டலாம்?
17 ௧௭ பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? யெகோவாவுடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்த நாள்வரைக்கும் நாம் அதிலிருந்து நீங்கிச் சுத்தமாகவில்லையே.
பேயோரின் மலையில் செய்த பாவம் எங்களுக்குப் போதாதோ? அதனால் யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதின் மேலும் கொள்ளைநோய் வந்தபோதும்கூட, இன்றுவரை அப்பாவத்திலிருந்து நம்மை நாம் சுத்திகரித்துக் கொள்ளவில்லையே!
18 ௧௮ நீங்கள் இந்த நாளில் யெகோவாவைப் பின்பற்றாதபடித் திரும்புவீர்களோ? இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேலின் சபையின்மேல் கடுங்கோபங்கொள்வாரே.
இப்பொழுது நீங்கள் யெகோவாவைவிட்டு விலகிபோகிறீர்களா? “‘இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தால், நாளை அவர் முழு இஸ்ரயேல் சமுதாயத்தின்மேலும் கோபம்கொள்வார் அல்லவா.
19 ௧௯ உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
உங்கள் சொத்துரிமையான நாடு மாசுபட்டிருந்தால், இறைசமுககூடாரம் இருக்கிற யெகோவாவின் நாட்டிற்கு வந்து, எங்களுடன் அந்நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தையன்றி, வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு விரோதமாகவோ, எங்களுக்கு விரோதமாகவோ கலகம் செய்யவேண்டாம்.
20 ௨0 சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று யெகோவாவுடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
முன்னர் சேராவின் மகனாகிய ஆகான் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் நம்பிக்கைத் துரோகமாக நடந்தபோது, இறைவனின் கோபம் இஸ்ரயேல் சமுதாயம் முழுவதன் மேலும் வரவில்லையோ? அவனுடைய பாவத்திற்காக அவன் மட்டும் சாகவில்லையே’” என்றார்கள்.
21 ௨௧ அப்பொழுது ரூபன் கோத்திரத்தார்களும், காத் கோத்திரத்தார்களும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும், இஸ்ரவேலின் ஆயிரம்பேர்களின் தலைவர்களுக்கு மறுமொழியாக:
இதற்கு மறுமொழியாக ரூபன், காத், மனாசேயின் அரைப்பங்கு கோத்திரத்தார் அனைவரும், அங்கு வந்த இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுக்கு கூறியதாவது:
22 ௨௨ தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
“வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, அவர் அறிவார். அதை இஸ்ரயேலரும் அறிந்துகொள்ளட்டும்! யெகோவாவுக்கு எதிரான கலகமாய், அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமையாய் இது இருந்தால் இன்று எங்களைத் தப்பவிடவேண்டாம்.
23 ௨௩ ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்த பலிபீடத்தைக் கட்டினதே அல்லாமல், யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாவது போஜனபலியையாவது சமாதானபலிகளையாவது செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், யெகோவா அதை விசாரிப்பாராக.
யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்காகவும், தகன காணிக்கைகளையோ, தானியக் காணிக்கைகளையோ, அல்லது சமாதான காணிக்கைகளையோ பலியிடுவதற்காகவும் நாங்கள் எங்கள் சொந்தப் பலிபீடத்தைக் கட்டியிருந்தால், யெகோவா தாமே எங்களிடம் கணக்குக் கேட்கட்டும்.
24 ௨௪ நாளைக்கு உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் என்ன?
“இல்லை! உங்கள் சந்ததிகள், எங்கள் சந்ததிகளிடம் ஒரு நாளைக்கு, ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
25 ௨௫ ரூபனுடைய மக்கள் காத்தின் மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்தார்; யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் யெகோவா வுக்குப் பயப்படாமலிருக்கச் செய்வார்கள் என்கிற பயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
ரூபனியரே! காத்தியரே! உங்களுக்கும் எங்களுக்கும் இடையே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார்; யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை’ என்று சொல்வார்கள் என்ற பயத்தினால் இதைச் செய்தோம். இவ்வாறு எங்களுடைய சந்ததிகள் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதை நிறுத்திவிட உங்கள் சந்ததிகள் காரணமாயிருப்பார்கள்.
26 ௨௬ சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும், பலிகளாலும், சமாதானபலிகளாலும், நாங்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியார்களுக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,
“அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல;
27 ௨௭ யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்களுடைய பிள்ளைகள் நாளைக்கு எங்களுடைய பிள்ளைகளிடம் சொல்லாமலிருப்பதற்காகவே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.
மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.
28 ௨௮ நாளைக்கு எங்களோடாவது, எங்களுடைய சந்ததியார்களோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின யெகோவாவுடைய பலிபீடத்தின் சாயலான பலிபீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.
“மேலும் நாங்கள், ‘அவர்கள் எப்பொழுதாவது எங்களிடமோ, அல்லது எங்கள் சந்ததிகளிடமோ இப்படிச் சொன்னால், நாங்கள் எங்கள் தந்தையர் கட்டிய யெகோவாவின் பலிபீடத்தின் மாதிரி அமைப்பைப் பாருங்கள்! இது தகன காணிக்கைகளுக்காகவோ அல்லது மற்ற பலிகளுக்காகவோ அல்ல; ஆனால் இது எங்களுக்கும், உங்களுக்கும் ஒரு சாட்சியாகவே கட்டப்பட்டிருக்கிறது என்று பதிலளிப்போம்’ என்று சொல்லி இதைக் கட்டினோம்.
29 ௨௯ நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கு எதிராகக் கலகம்செய்வதும், இன்று யெகோவாவைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாக இருப்பதாக என்றார்கள்.
“எங்கள் இறைவனாகிய யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தின் முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வதும் அவரைவிட்டு விலகுவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக. இதில் தகன காணிக்கைகளையும், தானியக் காணிக்கைகளையும், மற்றப் பலிகளையும் செலுத்துவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக என்போம்” என்றார்கள்.
30 ௩0 ரூபனுடைய கோத்திரத்தார்களும், காத்தின் கோத்திரத்தார்களும், மனாசே கோத்திரத்தார்களும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடு இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரம்பேர்களின் தலைவர்களும் கேட்டபோது, அது பார்வைக்கு நன்றாக இருந்தது.
அப்பொழுது ஆசாரியன் பினெகாசும், சமுதாயத் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களும் ரூபனியர், காத்தியர், மனாசேயினர் ஆகியோர் கூறியதைக் கேட்டதும், மனதில் திருப்தியடைந்தார்கள்.
31 ௩௧ அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.
32 ௩௨ ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் மக்களிடம் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.
எலெயாசாரின் மகன் ஆசாரியன் பினெகாசும் தலைவர்களும் ரூபனியரையும், காத்தியரையும் சந்தித்துவிட்டு கீலேயாத்திலிருந்து கானானுக்குத் திரும்பிவந்து இஸ்ரயேலரிடம் நடந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்.
33 ௩௩ அந்தச் செய்தி இஸ்ரவேல் மக்களின் பார்வைக்கு நன்றாக இருந்தது; ஆகவே ரூபனுடைய வம்சத்தார்களும் காத்தின் வம்சத்தார்களும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள் மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் மக்கள் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்டு இஸ்ரயேலர் சந்தோஷப்பட்டு இறைவனுக்குத் துதி செலுத்தினார்கள். ரூபனியரும், காத்தியரும் வாழ்ந்த நாட்டிற்கு விரோதமாகப் படையெடுத்து, அதை அழிப்பதைப்பற்றி பின் ஒருபோதும் அவர்கள் பேசியதில்லை.
34 ௩௪ யெகோவா தேவன் என்பதற்கு அந்த பலிபீடம் நமக்குள்ளே சாட்சியாக இருக்கும் என்று சொல்லி, ரூபனுடைய வம்சத்தார்களும், காத்தின் வம்சத்தார்களும் அதற்கு ஏத் என்று பெயரிட்டார்கள்.
அப்பொழுது ரூபனியரும், காத்தியரும் அந்த பலிபீடத்திற்கு, “யெகோவாவே இறைவன் என்பதற்கு நமக்கு ஒரு சாட்சி” என்று பெயரிட்டார்கள்.

< யோசுவா 22 >