< யோசுவா 10 >
1 ௧ யோசுவா ஆயீயைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயீக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
யோசுவா ஆயி நகரத்தைக் கைப்பற்றி அதை முழுவதும் அழித்துப்போட்டான் என, எருசலேமின் அரசன் அதோனி-சேதேக் இப்பொழுது கேள்விப்பட்டான். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் செய்தான் என்றும், அத்துடன் கிபியோன் மக்களும் இஸ்ரயேலருடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களருகே வாழ்கிறார்களென்றும் கேள்விப்பட்டான்.
2 ௨ கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயீயைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
இதனால் அவனும் அவனுடைய குடிமக்களும் மிகவும் கலக்கமடைந்தார்கள். ஏனெனில் கிபியோன் நகரமும், அரசர்கள் வாழும் பட்டணங்களில் ஒன்றைப்போல ஒரு பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அது ஆயிபட்டணத்தைவிட பெரிதாகவும் இருந்தது. மனிதர் எல்லோரும் திறமையான வீரர்களாய் இருந்தனர்.
3 ௩ ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்:
4 ௪ நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான்.
“நான் கிபியோன் நகரைத் தாக்குவதற்கு நீங்கள் வந்து எனக்கு உதவுங்கள். ஏனெனில் கிபியோனியர் யோசுவாவோடும் இஸ்ரயேலரோடும் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளார்கள்” என வேண்டுகோள் விடுத்தான்.
5 ௫ அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள்.
அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள்.
6 ௬ அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
கிபியோனியர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பி: “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிடாதேயும். உடனடியாக வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் மலைநாட்டிலுள்ள எமோரிய அரசர்கள் அனைவரும் எங்களுக்கெதிராகப் போர் செய்ய ஒன்றுகூடியிருக்கிறார்கள்” என்றார்கள்.
7 ௭ உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
எனவே யோசுவா தனது மிகச்சிறந்த படைவீரர்கள் உட்பட, மற்ற முழு படையுடனும் கில்காலிலிருந்து அணிவகுத்துச் சென்றான்.
8 ௮ யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நான் அவர்களை உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்களில் ஒருவனாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடியாது” என்றார்.
9 ௯ யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.
கில்காலிலிருந்து யோசுவா இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, எமோரியர்கள் எதிர்பாராத வேளையில் அவர்களைத் தாக்கினான்.
10 ௧0 யெகோவாவோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.
யெகோவா எமோரியப் படையினரை இஸ்ரயேலருக்கு முன்பாகக் கலக்கமடையச் செய்தார். இஸ்ரயேலர் கிபியோனிலே அவர்களைத் தோற்கடித்து பெரும் வெற்றியீட்டினார்கள். இஸ்ரயேலர் பெத் ஓரோனுக்குப் போகும் வழியெங்கும் அவர்களைத் துரத்திச்சென்று அசேக்கா, மக்கெதா ஆகிய ஊர்கள் வரையிலும் வெட்டி வீழ்த்தினார்கள்.
11 ௧௧ அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கல்மழைகளை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாகப் பெத் ஓரோனிலிருந்து இறங்கும் வழியில் அசேக்காவரை ஓடுகையில், யெகோவா ஆகாயத்திலிருந்து பெரிய கல்மழையை அவர்கள்மேல் பொழிந்தார். இதனால் இஸ்ரயேலரின் வாளால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட, பெரிய கல்மழையினால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகராயிருந்தார்கள்.
12 ௧௨ யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான்.
யெகோவா எமோரியரை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்த அன்று, யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் யெகோவாவிடம் வேண்டிக்கொள்கையில் கூறியதாவது: “சூரியனே, கிபியோனுக்கு மேலாக தரித்து நில்; சந்திரனே ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலாகத் தரித்து நில்.”
13 ௧௩ அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.
அப்படியே இஸ்ரயேலர் தங்கள் பகைவர்களைப் பழிவாங்கும்வரை சூரியனும் நின்றது, சந்திரனும் நின்றது. இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சூரியன் நடுவானத்தில் தரித்து நின்றதால், ஒரு முழுநாள்வரை அது மறையத் தாமதித்தது.
14 ௧௪ இப்படிக் யெகோவா ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
யெகோவா ஒரு மனிதனுடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுத்த இந்த நாளைப்போன்ற ஒரு நாள், இதற்கு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை, பின்பும் இருக்கவில்லை. நிச்சயமாக யெகோவா இஸ்ரயேல் மக்களுக்காகப் போர்புரிந்தார்.
15 ௧௫ பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
அதன்பின் யோசுவா இஸ்ரயேலருடன் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பிச்சென்றான்.
16 ௧௬ அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள்.
இப்போர் நடந்தவேளையில் ஐந்து எமோரிய அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஓடிப்போய் ஒளித்துக்கொண்டார்கள்.
17 ௧௭ ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது.
இந்த ஐந்து அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஒளித்திருக்கிறார்கள் என்ற செய்தி யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
18 ௧௮ அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள்.
உடனே யோசுவா இஸ்ரயேலரிடம், “அந்தக் குகைவாசலைப் பெரும் பாறைக் கற்களை உருட்டி மூடிவிடுங்கள். அங்கு சிலரைக் காவலுக்கு நிறுத்துங்கள்.
19 ௧௯ நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
நீங்களோ நிற்காமல் உங்கள் பகைவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களைப் பின்நின்று தாக்குங்கள். அவர்களை தங்கள் நகரத்திற்குள் தப்பித்துச்செல்ல விடாதீர்கள். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று உத்தரவிட்டான்.
20 ௨0 யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் அவர்களை மகா பயங்கரமாக அவர்கள் முழுவதும் அழியும்வரைக்கும் தாக்கினார்கள்; அவர்களில் மீதியானவர்கள் பாதுகாப்பான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
இவ்வாறே யோசுவாவும், இஸ்ரயேலர்களும் அவர்களை ஒருவரும் மீந்திராதபடி முழுவதும் அழித்தார்கள். ஆனாலும் தப்பிச்சென்ற ஒரு சிலரோ அரண்சூழ்ந்த தங்கள் பட்டணங்களுக்குப் போய்ச்சேர்ந்தார்கள்.
21 ௨௧ மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
அதன்பின் இஸ்ரயேல் படை முழுவதும் எத்தீங்குமில்லாமல் மக்கெதா நகரினுள் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தார்கள். இஸ்ரயேலுக்கு எதிராக ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசத் துணியவில்லை.
22 ௨௨ அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
அப்பொழுது யோசுவா, “அரசர் மறைந்திருக்கும் குகைவாசலைத் திறந்து, அந்த ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
23 ௨௩ அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
அவ்வாறே எருசலேம், எப்ரோன், யர்மூத்துர், லாகீசு, எக்லோன் பட்டணங்களின் ஐந்து அரசர்களையும் அந்த குகையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள்.
24 ௨௪ அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்ததும், யோசுவா இஸ்ரயேல் மனிதர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து, தன்னோடு வந்திருந்த படைத்தளபதிகளிடம், “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்துகளில் வையுங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள் முன்னேவந்து தங்கள் பாதங்களை அரசர்களின் கழுத்தின்மேல் வைத்தார்கள்.
25 ௨௫ அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான்.
யோசுவா தன் படைத்தளபதிகளிடம், “பயப்படாதீர்கள்; மனந்தளராதீர்கள். பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். நீங்கள் போரிடவிருக்கும் உங்கள் எதிரிகளுக்கு யெகோவா இவ்விதமே செய்வார்” என்றான்.
26 ௨௬ அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.
இப்படிக் கூறி யோசுவா அந்த அரசர்களை வெட்டிக்கொன்று அவர்களுடைய உடல்களை ஐந்து மரங்களிலே தொங்கவிட்டான். அவ்வுடல்கள் மாலைவரை தொங்கிக்கொண்டிருந்தன.
27 ௨௭ சூரியன் மறைகிற நேரத்திலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையிலே அவர்களைப் போட்டு; இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் குகையின் வாயிலே அடைத்தார்கள்.
சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் யோசுவா உத்தரவிட்டபடி, இஸ்ரயேலர் அவ்வுடல்களை இறக்கி முன்பு அரசர்கள் ஒளித்திருந்த குகைக்குள்ளே அவற்றை வீசினார்கள். குகை வாசலை பெரிய கற்களினால் மூடினார்கள். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன.
28 ௨௮ அந்த நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயத்தினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனிதர்களையும் எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
அதே நாளில் யோசுவா மக்கெதா நகரைக் கைப்பற்றினான். அந்நகரில் இருந்தோரையும் அதன் அரசனையும் வாளுக்கு இரையாக்கி, அங்கிருந்த அனைவரையும் முழுவதும் அழித்தான். ஒருவரையேனும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே மக்கெதா அரசனுக்கும் செய்தான்.
29 ௨௯ மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான்.
பின் யோசுவாவும், அவனோடு இருந்த எல்லா இஸ்ரயேலர்களும் மக்கெதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதைத் தாக்கினார்கள்.
30 ௩0 யெகோவா அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
யெகோவா அப்பட்டணத்தையும், அதன் அரசனையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பட்டணத்திலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். அவன் ஒருவரையும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே லிப்னா அரசனுக்கும் செய்தான்.
31 ௩௧ லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைவரோடும் லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தான்.
பின் யோசுவா அவனோடிருந்த இஸ்ரயேல் அனைவரோடும் லிப்னா பட்டணத்திலிருந்து லாகீசு நகருக்குச்சென்றான். யோசுவா தன் படைகளை அதற்கு எதிராக நிலைநிறுத்தி அதைத் தாக்கினான்.
32 ௩௨ யெகோவா லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் பட்டயத்தினால் அழித்தான்.
யெகோவா லாகீசு நகரை இஸ்ரயேலரிடம் ஒப்புக்கொடுத்தார். யோசுவா இரண்டாம் நாளிலே நகரத்தைக் கைப்பற்றினான். லிப்னா நகருக்குச் செய்ததுபோலவே, அப்பட்டணத்தையும் அதிலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான்.
33 ௩௩ அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான்.
அதேவேளையில் கேசேர் நகரின் அரசனாகிய ஒராம், லாகீசு நகரத்தாருக்கு உதவிசெய்ய படையோடு வந்திருந்தான். ஆனாலும் யோசுவா அவனையும் அவனுடைய படையையும் ஒருவரும் தப்பிப் போகாதிருக்கும் வரைக்கும் தோற்கடித்தான்.
34 ௩௪ லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
பின் யோசுவாவும் அவனோடிருந்த இஸ்ரயேலர் அனைவரும் லாகீசு நகரிலிருந்து எக்லோன் நகருக்குச் சென்றார்கள். அந்நகருக்கெதிராக நிலைகொண்டு அதைத் தாக்கினார்கள்.
35 ௩௫ அதை அந்த நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்த நாளிலே அழித்துப்போட்டான்.
அந்த நாளில் அவர்கள் எக்லோனைக் கைப்பற்றி, லாகீசு நகருக்குச் செய்தவாறே இந்நகரத்தை வாளுக்கு இரையாக்கி, எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள்.
36 ௩௬ பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவருமாக எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
அதன் பின்னர் இஸ்ரயேலர் அனைவரோடும் யோசுவா எக்லோன் நகரிலிருந்து எப்ரோன் நகரையடைந்து அதனைத் தாக்கினான்.
37 ௩௭ அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான்.
இஸ்ரயேலர் அந்நகரைக் கைப்பற்றி அதை வாளுக்கு இரையாக்கினார்கள். அதன் அரசனையும், அதன் கிராமங்களையும், அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள். ஒருவனையாகிலும் உயிரோடு தப்பவிடவில்லை. எக்லோன் நகரைப்போலவே இந்நகரையும் அதன் மக்களையும் முழுவதும் அழித்தார்கள்.
38 ௩௮ பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்செய்து,
பின்னர் யோசுவாவும் அவனோடிருந்த எல்லா இஸ்ரயேலர்களும் திரும்பிச்சென்று தெபீர் நகரைத் தாக்கினார்கள்.
39 ௩௯ அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
அவர்கள் அப்பட்டணத்தைக் கைப்பற்றி அதன் அரசனையும் அதன் கிராமங்களையும் வாளுக்கு இரையாக்கினார்கள். அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள், ஒருவரையும் தப்பிப்பிழைக்க விடவில்லை. லிப்னாவுக்கும் அதன் அரசனுக்கும், எப்ரோன் பட்டணத்திற்கும் செய்ததுபோலவே தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்கள்.
40 ௪0 இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்து,
இவ்விதமாய் யோசுவா மலைநாட்டையும், நெகேப் என்ற தெற்கு நாட்டையும், மலையடிவாரப் பகுதியையும் கிழக்கே மலைச்சரிவுப் பகுதிகள் அனைத்தையும் அதன் அரசர்களையும் தனது ஆட்சிக்குட்படுத்தினான். ஒருவரையும் தப்பவிடாமல் கொன்றொழித்தான். இவ்வாறு இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படி சுவாசமுள்ள அனைவரையும் முழுவதும் அழித்துவிட்டான்.
41 ௪௧ காதேஸ்பர்னேயா துவங்கிக் காசாவரை இருக்கிறதையும் கிபியோன்வரை இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
யோசுவா காதேஸ் பர்னேயா நாடு தொடங்கி காசாவரைக்கும், கோசேனின் முழுபிரதேசம் தொடங்கி கிபியோன் வரையுமுள்ள நாடு முழுதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினான்.
42 ௪௨ அந்த ராஜாக்கள் எல்லோரையும் அவர்களுடைய தேசத்தையும் யோசுவா ஒரே சமயத்தில் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா இஸ்ரயேலருக்காக யுத்தம் புரிந்ததினால், இந்த எல்லா அரசர்களையும் அவர்களுடைய நாடுகளையும் ஒரே படையெடுப்பில் யோசுவா வெற்றிகொண்டான்.
43 ௪௩ பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
இதன்பின்னர் யோசுவா இஸ்ரயேலர் அனைவரோடும் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பினான்.