< யோவான் 20 >

1 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போடப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.
வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
2 உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவிடமும் இயேசுவிற்கு அன்பாக இருந்த மற்ற சீடனிடமும்போய்: கர்த்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
3 அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
4 பேதுருவைவிட மற்ற சீடன் வேகமாக ஓடி, முதலில் கல்லறைக்கு வந்து,
அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
5 அதற்குள்ளே குனிந்து பார்த்து, துணிகள் கிடக்கிறதைப் பார்த்தான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.
6 சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே நுழைந்து,
பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
7 துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான்.
இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
8 முதலில் கல்லறைக்கு வந்த மற்ற சீடனும் அப்பொழுது உள்ளே நுழைந்து, பார்த்து விசுவாசித்தான்.
பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
9 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள்.
ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
10 ௧0 பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
11 ௧௧ மரியாள் கல்லறையின் அருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கும்போது அவள் குனிந்து கல்லறைக்கு உள்ளே பார்த்து,
ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.
12 ௧௨ இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளை உடை அணிந்தவர்களாக இரண்டு தூதர்கள், தலைபக்கம் ஒருவனும் கால்பக்கம் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாள்.
அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
13 ௧௩ அவர்கள் அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
14 ௧௪ இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள்.
இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
15 ௧௫ இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள்.
அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
16 ௧௬ இயேசு அவளைப் பார்த்து: மரியாளே என்றார். அவள் திரும்பிப்பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தம்.
அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
17 ௧௭ இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
18 ௧௮ மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள்.
மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
19 ௧௯ வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் மாலைநேரத்திலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கும்போது, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
20 ௨0 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கரங்களையும் விலாவையும் அவர்களுக்குக் காட்டினார். சீடர்கள் இயேசுவைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.
அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
21 ௨௧ இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
22 ௨௨ அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
23 ௨௩ எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.
நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
24 ௨௪ இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை.
இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
25 ௨௫ மற்றச் சீடர்கள்: இயேசுவை பார்த்தோம் என்று அவனிடம் சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான காயத்தை நான் பார்த்து, அந்தக் காயத்திலே என் விரலைவிட்டு, என் கையை அவருடைய விலாவிலே வைத்துப்பார்க்காமல் விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
26 ௨௬ மீண்டும் எட்டு நாட்களுக்குப்பின்பு அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களோடு இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
27 ௨௭ பின்பு அவர் தோமாவைப் பார்த்து: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கரங்களைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாக இல்லாமல் விசுவாசியாக இரு என்றார்.
பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
28 ௨௮ தோமா அவருக்கு மறுமொழியாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
29 ௨௯ அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைப் பார்த்ததினாலே விசுவாசித்தாய், பார்க்காமல் இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
30 ௩0 இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார்.
இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
31 ௩௧ இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன.

< யோவான் 20 >