< யோபு 16 >

1 அதற்கு யோபு மறுமொழியாக:
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
2 “இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர்.
“நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லோரும் துன்பத்துக்குள்ளாக்கும் தேற்றரவாளர்கள்!
3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா? உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன?
4 உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.
நீங்கள் என் நிலையில் இருந்தால், என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்; நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி, உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும்.
5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன், என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.
6 நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது; பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை.
7 இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர்.
இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்; என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர்.
8 நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.
நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது; என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது.
9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, என் மேல் கோபப்படுகிறான்; என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான்.
இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து, என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்; என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார்.
10 ௧0 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.
மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்; ஏளனத்துடன் என்னைக் கன்னத்தில் அறைந்து எனக்கு விரோதமாய் ஒன்றுகூடுகிறார்கள்.
11 ௧௧ தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார்.
இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து, கொடியவர்களின் பிடிக்குள் என்னை சிக்கவைத்தார்.
12 ௧௨ நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.
நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்; அவர் என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கினார். அவர் என்னைத் தமது இலக்காக ஆக்கினார்;
13 ௧௩ அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார்.
அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள். இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.
14 ௧௪ நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி, ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.
15 ௧௫ நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
“நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்; என் மேன்மையைப் தூசியில் புதைத்தேன்.
16 ௧௬ அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
என் முகம் அழுகையால் சிவந்து, என் கண்கள் இருளடைந்தது;
17 ௧௭ என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது.
இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை; என் ஜெபம் தூய்மையானது.
18 ௧௮ பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
“பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே; என் கதறல் ஒருபோதும் ஓய்ந்து போகாதிருக்கட்டும்!
19 ௧௯ இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது; எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.
20 ௨0 என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது, எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர்.
21 ௨௧ ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும்.
ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல, அவரும் மனிதனுக்காக இறைவனுடன் பேசுகிறார்.
22 ௨௨ குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.
“நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு, இன்னும் சில வருடங்களே இருக்கின்றன.

< யோபு 16 >