< ஏசாயா 59 >

1 இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
நிச்சயமாகவே, காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை; கேட்க முடியாதபடி அவருடைய காது மந்தமாகவுமில்லை.
2 உங்களுடைய அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது; உங்களுடைய பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஆனால், உங்களுடைய பாவங்களே, உங்கள் இறைவனிடமிருந்து உங்களைப் பிரித்திருக்கின்றன. உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதபடி, அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்திருக்கின்றன.
3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.
ஏனெனில் உங்கள் கைகள் இரத்தத்தினாலும், உங்கள் விரல்கள் குற்றத்தினாலும் கறைபட்டிருக்கின்றன; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசி, உங்கள் நாவுகள் கொடுமையானவற்றை முணுமுணுத்திருக்கின்றன.
4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
ஒருவனும் நீதிக்காக வாதாடுவதில்லை; ஒருவனும் உத்தமமாய் தன் வழக்கைப் பேசுவதில்லை. அவர்கள் அர்த்தமற்ற விவாதத்தில் நம்பிக்கை வைத்து, பொய் பேசி, தீங்கைக் கருத்தரித்து பாவத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
5 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும்.
அவர்கள் விரியன் பாம்பின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தி வலையைப் பின்னுகிறார்கள். அவைகளின் முட்டையை உண்பவன் எவனும் சாவான்; அவைகளில் ஒன்று உடைந்தால் விரியன் பாம்பு வெளிவரும்.
6 அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.
அவர்களின் சிலந்தி வலைப் பின்னல்கள், உடைக்கு உபயோகமற்றவை; அவர்கள் செய்தவற்றால் தங்களை மூடிக்கொள்ளவும் இயலாது. அவர்களுடைய செயல்களெல்லாம் தீமையானவையே; அவர்களின் கைகளில் வன்செயல்களே இருக்கின்றன.
7 அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது.
அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன; குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அவர்கள் விரைகிறார்கள். அவர்கள் சிந்தனைகளும் தீமையான சிந்தனையே; பாழாக்குதலும் அழிவும் அவர்களின் வழித்தடங்களில் இருக்கின்றன.
8 சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான்.
சாமாதானத்தின் வழியை அவர்கள் அறியமாட்டார்கள்; அவர்களின் பாதைகளில் நீதி இல்லை. அவர்கள் தங்கள் பாதைகளைக் கோணலாக்கிக் கொண்டார்கள்; அதில் நடப்பவர் எவருக்கும் சமாதானம் இல்லை.
9 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.
ஆகையால் நியாயம் எங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது, நீதி எங்களை நெருங்குவதில்லை; வெளிச்சத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் எல்லாமே இருளாயிருக்கின்றன. பிரகாசத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனாலும் காரிருளிலேயே நடக்கிறோம்.
10 ௧0 நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம்.
நாங்கள் குருடர்களைப்போல் சுவரைப் பிடித்து, தடவித் திரிகிறோம்; கண்கள் இல்லாதவர்களைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகிறோம். மங்கிய மாலைப் பொழுதில் இடறுகிறதுபோல நடுப்பகலில் இடறுகிறோம்; பெலனுள்ளவர்கள் மத்தியில் மரித்தவரைப்போல் இருக்கிறோம்.
11 ௧௧ நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.
நாங்கள் யாவரும் கரடிகளைப்போல் உறுமுகிறோம்; புறாக்களைப்போல் கவலையுடன் விம்முகிறோம். நியாயத்திற்குக் காத்திருந்தோம், ஆனால் அதைக் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அதுவும் தூரத்திலேயே இருக்கிறது.
12 ௧௨ எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
எங்கள் மீறுதல்கள் உமது பார்வையில் அநேகமாய் இருக்கின்றன, எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராகச் சாட்சி பகிருகின்றன. எங்கள் மீறுதல்கள் எப்போதும் எங்களுடனேயே இருக்கின்றன; எங்கள் அநியாயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
13 ௧௩ யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்து, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கச்செய்தோம்.
யெகோவாவுக்கு விரோதமாகக் கலகமும் நம்பிக்கைத் துரோகமும் செய்தோம்; எங்கள் இறைவனுக்கு முதுகைக் காட்டினோம். ஒடுக்குதலையும் கிளர்ச்சியையும் குறித்துப்பேசி, எங்கள் இருதயங்களில் கருத்தரித்த பெரும் பொய்களை வெளிப்படுத்தினோம்.
14 ௧௪ நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது.
அதனால், நியாயம் பின்னே தள்ளப்பட்டிருக்கிறது; நீதி தூரத்திலே நிற்கிறது; உண்மை தெருக்களில் இடறி, உத்தமம் உள்ளே வரமுடியாமல் இருக்கிறது.
15 ௧௫ சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் யெகோவா பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
ஒரு இடத்திலும் உண்மை காணப்படவில்லை; தீமையைவிட்டு விலகுகிறவர்கள் இரையாவார்கள். யெகோவா அதைக்கண்டு, அங்கு நியாயமில்லாதபடியால், கோபங்கொண்டார்.
16 ௧௬ ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்செய்கிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.
அங்கே ஒருவனும் இல்லாததை அவர் கண்டார், பரிந்து பேசுவதற்கு அங்கு ஒருவரும் இல்லையென அவர் கண்டு திகைப்படைந்தார். எனவே அவரின் சொந்தக் கரமே அவருக்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது; அவருடைய சொந்த நீதியே அவரைத் தாங்கியது.
17 ௧௭ அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
அவர் நீதியைத் தனது மார்புக்கவசமாய் அணிந்து, இரட்சிப்பின் தலைச்சீராவைத் தலையில் வைத்துக்கொண்டார்; அநீதிக்குப் பழிவாங்குதலின் உடையை அவர் உடுத்தி, வைராக்கியத்தைத் தன் மேலங்கியாகப் போர்த்துக்கொண்டார்.
18 ௧௮ செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.
அவர்கள் செய்தவற்றுக்கேற்ப அவர் பதிலளிப்பார். கடுங்கோபத்தைத் தனது எதிரிகளுக்கும், தண்டனையைப் பகைவர்களுக்கும் கொடுப்பார்; தீவுகளுக்கும் அவைகளின் செய்கைக்கேற்ப பதிலளிப்பார்.
19 ௧௯ அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி யெகோவாவின் நாமத்திற்கும், சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி வரும்போது, யெகோவாவுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார்.
மேற்கிலுள்ள மனிதர் யெகோவாவின் பெயருக்குப் பயப்படுவார்கள்; சூரியன் உதிக்கும் திசையிலுள்ளவர்கள் அவருடைய மகிமை நடுங்குவார்கள். ஏனெனில், யெகோவாவின் சுவாசத்தினால் அடித்துச் செல்லப்படும் காட்டாற்று வெள்ளம்போல் அவர் வருவார்.
20 ௨0 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று யெகோவா சொல்கிறார்.
“தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பிய யாக்கோபின் வழித்தோன்றல்களிடம், சீயோனுக்கு மீட்பர் வருவார்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
21 ௨௧ உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எனது உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா சொல்கிறார். “உன் மேலிருக்கும் எனது ஆவியானவரும், உன் வாயில் நான் வைத்த என் வார்த்தைகளும் உன் வாயைவிட்டு நீங்கமாட்டாது, அவை உன் பிள்ளைகளின் வாய்களிலிருந்தும், அவர்களின் சந்ததிகளின் வாய்களிலிருந்தும் இப்பொழுதிலிருந்து என்றென்றைக்கும் நீங்கமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.

< ஏசாயா 59 >