< ஆதியாகமம் 41 >

1 இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நைல் நதியருகில் நின்றுகொண்டிருந்தான்.
இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான்.
2 அப்பொழுது அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன.
அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன.
3 அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன.
அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன.
4 அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
அதன்பின் அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்களும், கொழுத்ததும் செழிப்பானதுமான ஏழு பசுக்களையும் தின்றுவிட்டன. அப்பொழுது பார்வோன் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டான்.
5 மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
மீண்டும் அவன் நித்திரை செய்தபோது, இன்னுமொரு கனவு கண்டான். அக்கனவில் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்து வந்தன.
6 பின்பு, மெலிந்ததும் கீழ்காற்றினால் வறண்டதுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப்போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன.
7 மெலிந்த கதிர்கள் செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது கனவு என்று அறிந்தான்.
அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கிவிட்டன. பார்வோன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தபோது, அது கனவு என அறிந்தான்.
8 காலையிலேயே பார்வோனுடைய மனம் கலக்கம் கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும் அனைத்து அறிஞர்களையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்ல முடியாமல் போனது.
காலையில் பார்வோனுடைய மனம் குழப்பமடைந்தது, அதனால் அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகள், ஞானிகள் எல்லோரையும் வரவழைத்து, தான் கண்ட கனவுகளை அவர்களுக்குச் சொன்னான். ஆனால், அவர்கள் ஒருவராலும் அக்கனவுகளுக்கு விளக்கங்கூற முடியவில்லை.
9 அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் பார்வோனை நோக்கி: “நான் செய்த குற்றம் இன்றுதான் என் ஞாபகத்தில் வந்தது.
அப்பொழுது பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் பார்வோனிடம், “நான் செய்த தவறொன்று இன்றுதான் எனக்கு நினைவு வருகிறது.
10 ௧0 பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,
பார்வோன் ஒருமுறை தமது பணியாட்களில் கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுவோரின் பொறுப்பாளனையும் காவல் அதிகாரியின் வீடாகிய சிறையில் வைத்தார்.
11 ௧௧ நானும் அவனும் ஒரே இரவிலே வெவ்வேறு அர்த்தம்கொண்ட கனவு கண்டோம்.
நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விளக்கமுடையதாய் இருந்தன.
12 ௧௨ அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான்.
அங்கே காவலர் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த, எபிரெய இளைஞன் ஒருவனும் எங்களோடிருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னோம், அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான்.
13 ௧௩ அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கில் போட்டுவிட்டார்” என்றான்.
அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான்.
14 ௧௪ அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனை அவசரமாகச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவந்தார்கள். அவன் சவரம் செய்துகொண்டு, வேறு உடை அணிந்து, பார்வோனிடத்தில் வந்தான்.
எனவே பார்வோன் யோசேப்பை அழைத்துவரச் செய்தான், அவன் காவல் கிடங்கிலிருந்து உடனே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம்செய்து, உடைமாற்றி பார்வோன் முன்வந்து நின்றான்.
15 ௧௫ பார்வோன் யோசேப்பை நோக்கி: “ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன்” என்றான்.
பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்குரிய விளக்கத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. யாராவது உனக்கு ஒரு கனவைச் சொன்னால், நீ அதற்கு விளக்கம் கூறுவாய் என நான் கேள்விப்பட்டேன்” என்றான்.
16 ௧௬ அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்திரவு அருளிச்செய்வார்” என்றான்.
அதற்கு யோசேப்பு பார்வோனிடம், “என்னால் அதைச் செய்யமுடியாது, ஆனால் பார்வோன் விரும்பும் பதிலை இறைவன் அவருக்குத் தருவார்” என்றான்.
17 ௧௭ பார்வோன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே, நான் நதியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
பார்வோன் யோசேப்பிடம், “என் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன்.
18 ௧௮ அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன.
அப்பொழுது கொழுத்ததும் செழிப்புமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கு இடையே மேய்ந்து கொண்டிருந்தன.
19 ௧௯ அவைகளுக்குப்பின்பு இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தன; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.
அவற்றின்பின் எலும்பும் தோலுமான, மெலிந்த அவலட்சணமான வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறின. இதைப்போன்ற அவலட்சணமான பசுக்களை எகிப்து நாடெங்கும் நான் ஒருபோதும் கண்டதில்லை.
20 ௨0 கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன.
அந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், முதலில் வெளியேறிய ஏழு கொழுத்த பசுக்களையும் தின்றுவிட்டன.
21 ௨௧ அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போனபோதிலும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன்பு இருந்தது போலவே அவலட்சணமாக இருந்தன; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.
அவற்றைத் தின்ற பின்பும், அவை அவற்றைத் தின்றன என யாராலும் சொல்ல முடியாதிருந்தது; அவை முன்புபோலவே அவலட்சணமாய் இருந்தன. அதன்பின் நான் விழித்துக்கொண்டேன்.
22 ௨௨ பின்னும் நான் என் கனவிலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
“மேலும், நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன். அதில், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள், ஒரே தாளில் ஓங்கி வளர்ந்ததைக் கண்டேன்.
23 ௨௩ பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன.
அதன்பின் வாடிய, மெலிந்த, கீழ்க்காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் முளைத்து வந்தன.
24 ௨௪ மெலிந்த கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டன”. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் அர்த்தத்தை எனக்கு சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றான்.
இந்த மெலிந்த ஏழு நெற்கதிர்களும், மற்ற ஏழு விளைந்த கதிர்களையும் விழுங்கிவிட்டன. நான் இந்தக் கனவுகளை மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால் அவற்றின் விளக்கத்தை ஒருவனாலும் சொல்ல முடியவில்லை” என்றான்.
25 ௨௫ அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: “பார்வோனின் கனவு ஒன்று தான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு தெரிவித்திருக்கிறார்.
அப்பொழுது யோசேப்பு, “பார்வோனின் இரு கனவுகளுமே ஒன்றுதான். இறைவன் செய்யப்போவதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
26 ௨௬ அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருடங்களாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருடங்களாம்; கனவு ஒன்றே.
நல்ல ஏழு பசுக்களும் ஏழு வருடங்கள், நல்ல ஏழு கதிர்களும் ஏழு வருடங்கள்; இவை இரண்டும் ஒரே கனவுதான்.
27 ௨௭ அவைகளுக்குப்பின்பு ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருடங்களாம்; கீழ்காற்றினால் தீய்ந்து உலர்ந்ததுமான ஏழு கதிர்களும் ஏழு வருடங்களாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம்.
அவற்றின்பின் வந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், அப்படியே கீழ்க்காற்றினால் கருகிப்போன பயனற்ற ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள்.
28 ௨௮ பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.
“பார்வோனுக்கு நான் சொன்னதுபோல், இறைவன் தாம் செய்யப்போவதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.
29 ௨௯ எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைச்சல் உண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்.
எகிப்து நாடெங்கும் நிறைவான விளைச்சலுள்ள ஏழு வருடங்கள் வரப்போகின்றன.
30 ௩0 அதன்பின்பு பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
ஆனால் அதைத் தொடர்ந்து பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். அப்பொழுது எகிப்தின் நிறைவான விளைச்சல் மறக்கப்படும், பஞ்சம் எகிப்து நாடு முழுவதையும் பாழாக்கும்.
31 ௩௧ வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோகும்.
நாட்டின் நிறைவான விளைச்சலுக்குப் பின் வரப்போகும் பஞ்சம் மிகவும் கொடியதாகையால், அந்த நிறைவான காலம் நினைக்கப்படமாட்டாது.
32 ௩௨ இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிப்பதற்காக, இந்தக் கனவு பார்வோனுக்கு மீண்டும் வந்தது.
இது இறைவனால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டபடியாலும், இதை இறைவன் விரைவில் நிறைவேற்றுவார் என்பதாலுமே, இறைவன் இவற்றைப் பார்வோனுக்கு இரண்டு விதத்தில் கனவுகளால் வெளிப்படுத்தியுள்ளார்.
33 ௩௩ ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்துதேசத்திற்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.
“ஆதலால் பார்வோன் விவேகமும், ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, எகிப்து நாட்டுக்கு அவனைப் பொறுப்பாக நியமிப்பாராக.
34 ௩௪ இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருடங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படிச் செய்வாராக.
பார்வோன் ஏழு வருட நிறைவான விளைச்சல் காலங்களில் எகிப்தின் அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கைச் சேகரித்து வைப்பதற்காக, நிலத்தின் மேற்பார்வையாளர்களையும் நியமிப்பாராக.
35 ௩௫ அவர்கள் வரப்போகிற நல்ல வருடங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருப்பதற்கு, பார்வோனுடைய அதிகாரத்திற்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி சேமித்துவைப்பார்களாக.
அவர்கள் வரப்போகிற வளமான வருடங்களில் விளையும் தானியங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, பார்வோனின் அதிகாரத்தின்கீழ் அந்த தானியங்களை பட்டணங்களில் உணவுக்காக அதைப் பாதுகாக்க வேண்டும்.
36 ௩௬ தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாமலிருக்க, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக” என்றான்.
எகிப்து பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடி, அதன்மேல் வரப்போகும் ஏழு வருட பஞ்சகாலத்தில் பயன்படுத்துவதற்காக, அந்த தானியம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்” என்றான்.
37 ௩௭ இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவனுடைய வேலைக்காரர்கள் எல்லோருடைய பார்வைக்கும் நன்றாகத் தோன்றியது.
அந்த திட்டம் பார்வோனுக்கும் அவனுடைய அலுவலர்களுக்கும் நலமாய்க் காணப்பட்டது.
38 ௩௮ அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: “தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ” என்றான்.
பார்வோன் தம்முடைய அலுவலர்களிடம், “இறைவனின் ஆவியையுடைய இந்த மனிதனைப்போல் ஒருவனை நாம் காணக்கூடுமோ?” என்று கேட்டான்.
39 ௩௯ பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: “தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறதினால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப்போல் விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை.
40 ௪0 நீ என் அரண்மனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாக இருப்பேன்” என்றான்.
எனவே, நான் உன்னை என் அரண்மனைக்கு அதிகாரி ஆக்குகிறேன்; என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான்.
41 ௪௧ பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “பார், முழு எகிப்துதேசத்திற்கும் உன்னை அதிகாரியாக்கினேன்” என்று சொல்லி,
மேலும் பார்வோன் யோசேப்பிடம், “உன்னை எகிப்து நாடு முழுவதற்கும் பொறுப்பதிகாரியாக நியமிக்கிறேன்” என்றான்.
42 ௪௨ பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,
பின்பு பார்வோன் தன் விரலில் அணிந்திருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, யோசேப்பின் விரலில் போட்டான். அவன் சிறந்த மென்பட்டு அங்கியை அவனுக்கு உடுத்தி, கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியையும் அணிவித்தான்.
43 ௪௩ தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழு எகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்;
அதிகாரத்தில் தனக்கு அடுத்தவனாக அவனை தேரில் ஏற்றி பவனி வரச்செய்தான். அவனுக்கு முன்சென்ற மனிதர், “மண்டியிட்டுப் பணியுங்கள்!” என்று சத்தமிட்டார்கள். இவ்வாறு பார்வோன் அவனை எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமித்தான்.
44 ௪௪ பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்திரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது” என்றான்.
மேலும் பார்வோன் யோசேப்பிடம், “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்திலுள்ள யாரும் உனது உத்தரவின்றி கையையோ, காலையோ உயர்த்தக் கூடாது” என்றான்.
45 ௪௫ மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படிப் புறப்பட்டான்.
பார்வோன் யோசேப்பின் பெயரை சாப்நாத்பன்னேயா என மாற்றி, போத்திபிரா என்னும் ஓன் பட்டண ஆசாரியனின் மகள் ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். பின்பு யோசேப்பு எகிப்து நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கச் சென்றான்.
46 ௪௬ யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
யோசேப்பு எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு பணிபுரியத் தொடங்கியபோது, அவன் முப்பது வயதுடையவனாய் இருந்தான். யோசேப்பு பார்வோன் முன்னிலையில் இருந்து புறப்பட்டுப்போய், எகிப்து முழுவதையும் சுற்றிப் பயணம் செய்தான்.
47 ௪௭ பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
அப்படியே செழிப்பான ஏழு வருடங்களில் நாடு மிகுதியான விளைச்சலைக் கொடுத்தது.
48 ௪௮ அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான்.
செழிப்பான அந்த ஏழு வருடங்களில் எகிப்தில் விளைந்த தானியங்களை, யோசேப்பு பட்டணங்களில் சேகரித்து வைத்தான். ஒவ்வொரு பட்டணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வயல்களில் விளைந்த தானியங்களைச் சேர்த்துவைத்தான்.
49 ௪௯ இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
யோசேப்பு தானியத்தைக் கடலின் மணலைப்போல் பெருமளவாகச் சேர்த்துவைத்தான். அது கணக்கிட முடியாதபடி மிக அதிகமாக இருந்தபடியால், பின்பு அவன் பதிவுசெய்வதை நிறுத்திவிட்டான்.
50 ௫0 பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள்.
பஞ்சமுள்ள வருடங்கள் தொடங்குவதற்கு முன்பே யோசேப்புக்கும் ஓன் பட்டணத்தின் ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்துக்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.
51 ௫௧ யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான்.
அப்பொழுது யோசேப்பு, “இறைவன் என் தொல்லைகளையும், என் தகப்பன் வீட்டையும் மறக்கச்செய்தார்” என்று சொல்லி, தன் மூத்த மகனுக்கு மனாசே எனப் பெயரிட்டான்.
52 ௫௨ நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான்.
“நான் துன்பப்பட்ட நாட்டிலே இறைவன் என்னைச் செழிக்கப்பண்ணினார் என்று சொல்லி, தன் இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் எனப் பெயரிட்டான்.”
53 ௫௩ எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருடங்களும் முடிந்தபின்,
எகிப்தின் செழிப்பான வளம் நிறைந்த ஏழு வருடங்களும் முடிவுற்றன.
54 ௫௪ யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.
அதன்பின் யோசேப்பு சொல்லியிருந்தது போலவே, பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் ஆரம்பமாகின. மற்ற எல்லா நாடுகளிலும் பஞ்சம் உண்டானது, ஆனால் எகிப்து முழுவதிலும் உணவு இருந்தது.
55 ௫௫ எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான்.
எகிப்தியர் எல்லோரும் பஞ்சத்தை அனுபவிக்கத் தொடங்கியபோது, பார்வோனிடம் உணவு கேட்டு அழுதார்கள். பார்வோன் எல்லா எகிப்தியரிடமும், “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்றான்.
56 ௫௬ தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது.
எகிப்து முழுவதிலும் பஞ்சம் பரவியபோது, யோசேப்பு எல்லா களஞ்சியங்களையும் திறந்து, தானியத்தை எகிப்தியருக்கு விற்றான். ஏனெனில், பஞ்சம் எகிப்து முழுவதும் கொடியதாயிருந்தது.
57 ௫௭ அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
உலகெங்கும் பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால், எல்லா நாட்டினரும் யோசேப்பிடம் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.

< ஆதியாகமம் 41 >