< எஸ்றா 7 >

1 இந்தக் காரியங்களுக்குப்பின்பு, செராயாவின் மகனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
இவற்றுக்குப்பின் பெர்சியா அரசன் அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில் செராயாவின் மகன் எஸ்றா பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். எஸ்றா செராயாவின் மகன், செராயா அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின் மகன்,
2 இவன் சல்லூமின் மகன், இவன் சாதோக்கின் மகன், இவன் அகிதூபின் மகன்,
இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன்,
3 இவன் அமரியாவின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் மெராயோதின் மகன்,
அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோத்தின் மகன்,
4 இவன் செராகியாவின் மகன், இவன் ஊசியின் மகன், இவன் புக்கியின் மகன்,
மெராயோத் செராகியாவின் மகன், செரகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன்,
5 இவன் அபிசுவாவின் மகன், இவன் பினெகாசின் மகன், இவன் எலெயாசாரின் மகன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் மகன்.
புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன்.
6 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாக இருந்தான்; அவனுடைய தேவனாகிய யெகோவாவுடைய கரம் அவன்மேல் இருந்ததால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
இந்த எஸ்றா பாபிலோனிலிருந்து வந்தான். இவன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கொடுத்திருந்த மோசேயின் சட்டத்தை கற்றுத்தேர்ந்த ஆசிரியனாயிருந்தான். அவன் கேட்ட எல்லாவற்றையும் அரசன் அவனுக்குக் கொடுத்தான். ஏனெனில், அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் கரம் அவனோடிருந்தது.
7 அவனுடன் இஸ்ரவேல் மக்களிலும், ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், பாடகர்களிலும், வாசல் காவலாளர்களிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருடத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
அர்தசஷ்டா அரசன் அரசாண்ட ஏழாம் வருடத்தில் இஸ்ரயேல் மக்களில் சிலரான ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோரும் எஸ்றாவுடன் எருசலேமுக்குப் போனார்கள்.
8 ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாவது வருடத்தின் ஆட்சியாக இருந்தது.
அரசனின் ஆட்சியின் ஏழாம் வருடம் ஐந்தாம் மாதத்தில் எஸ்றா எருசலேமை வந்துசேர்ந்தான்.
9 முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பயணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததால் எருசலேமுக்கு வந்தான்.
அவன் பாபிலோனிலிருந்து முதல் மாதம் முதலாம் நாளிலே தன் பிரயாணத்தைத் தொடங்கி, ஐந்தாம் மாதம் முதலாம் நாள் எருசலேமை வந்தடைந்தான். அவனுடைய இறைவனின் கிருபையின்கரம் அவன்மேல் இருந்தது.
10 ௧0 யெகோவாவுடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
ஏனெனில் எஸ்றா யெகோவாவின் சட்டத்தைக் கற்பதற்கும், கைக்கொள்வதற்கும், இஸ்ரயேலிலே அதன் விதிமுறைகளையும், சட்டங்களையும் கற்பிக்கவும் தன்னை அர்ப்பணித்திருந்தான்.
11 ௧௧ யெகோவாவுடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த கடிதத்தின் நகலாவது:
இஸ்ரயேலுக்கான யெகோவாவின் கட்டளைகளையும், விதிமுறைகளையும் குறித்த விஷயங்களைக் கற்றறிந்தவனும், ஆசாரியனும், வேதபாரகனுமாகிய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா அரசன் கொடுத்திருந்த கடிதத்தின் பிரதி இதுவே:
12 ௧௨ ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:
பரலோகத்தின் இறைவனுடைய சட்ட ஆசிரியனான எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, அரசர்களுக்கு அரசனான அர்தசஷ்டா வாழ்த்துதல் கூறி எழுதுகிறதாவது,
13 ௧௩ நம்முடைய ராஜ்ஜியத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களிலும், அதின் ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், உன்னுடன் எருசலேமுக்குப் போக விருப்பமாயிருக்கிற அனைவரும் போகலாம் என்று நம்மாலே உத்திரவிடப்படுகிறது.
எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்களுடன், ஆசாரியர்கள், லேவியர்கள் உட்பட யார் எருசலேமுக்கு உன்னுடன் போக விரும்புகிறார்களோ அவர்கள் உன்னுடன் போகலாம் எனக் கட்டளையிடுகிறேன்.
14 ௧௪ நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,
உன் கையில் இருக்கிற உன் இறைவனின் சட்டத்தின்படி யூதாவையும், எருசலேமையும் விசாரிப்பதற்காக நீ அனுப்பப்படுகிறாய். நீ அரசனாலும் அவருடைய ஏழு ஆலோசகர்களாலும் அனுப்பப்படுகிறாய்.
15 ௧௫ ராஜாவும் அவருடைய மந்திரிகளும் எருசலேமில் குடியிருக்கிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனவிருப்பத்துடன் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,
மேலும், நீ அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் எருசலேமில் வாழ்கின்ற இஸ்ரயேலின் இறைவனுக்குத் தாராளமாய்க் கொடுத்த வெள்ளியையும், தங்கத்தையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
16 ௧௬ பாபிலோன் தேசமெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய மக்களும் ஆசாரியர்களும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்திற்கென்று மனஉற்சாகமாகக் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிகளாலும் அனுப்பப்படுகிறாய்.
பாபிலோன் நாட்டிலிருந்து உனக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டுபோ. அத்துடன் எருசலேமில் இருக்கிற தங்கள் இறைவனுக்கென மக்களும், ஆசாரியரும் கொடுத்திருக்கிற சுயவிருப்பக் காணிக்கை யாவையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
17 ௧௭ ஆகையால் அந்தப் பணத்தால் நீ தாமதமின்றி காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்து பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.
இப்பணத்தைக் கொண்டு காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும் அவற்றுடன் அவற்றுக்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் வாங்கக் கவனமாயிரு. அவற்றை எருசலேமில் இருக்கிற உன் இறைவனின் ஆலயத்தின் பலிபீடத்தில் பலியிடு.
18 ௧௮ மீதியான வெள்ளியையும் பொன்னையும்கொண்டு செய்யவேண்டியது இன்னதென்று உனக்கும் உன் சகோதரர்களுக்கும் நலமாகத் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.
மிகுதியான வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டு இறைவனின் திட்டப்படி நீயும் உன் சகோதர யூதர்களும் நலமாய்த் தோன்றும் எதையும் செய்யலாம்.
19 ௧௯ உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கவேண்டும்.
உனது இறைவனுடைய ஆலயத்தின் வழிபாட்டுக்காக உன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் எருசலேமின் இறைவனிடத்தில் ஒப்புவி.
20 ௨0 பின்னும் உன் தேவனுடைய ஆலயத்திற்கு அவசியமாகக் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
அத்துடன் உன்னுடைய இறைவனின் ஆலயத்தில் வேறு ஏதாவது கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அரச திரவிய களஞ்சியத்திலிருந்து அது உனக்குக் கொடுக்கப்படும்.
21 ௨௧ நதிக்கு அப்புறத்திலிருக்கிற அனைத்து பொருளாளர்களுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன், நூறு தாலந்து வெள்ளி, நூறுகலம் கோதுமை, நூறுகலம் திராட்சைரசம், நூறுகலம் எண்ணெய்வரை, உங்களிடம் கேட்கிற எல்லாவற்றையும்,
அர்தசஷ்டா அரசனாகிய நான் ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருக்கும் எல்லா பொருளாளர்களுக்கும், ஆசாரியனாகவும் பரலோகத்தின் இறைவனின் சட்டங்களைக் கற்பிக்கிறவனுமான எஸ்றா உங்களிடம் கேட்கிறதையெல்லாம் காலம் தாழ்த்தாது கொடுக்கக் கவனமாயிருக்கும்படி உத்தரவிடுகிறேன்.
22 ௨௨ வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
நூறு தாலந்து வெள்ளி, நூறுபடி கோதுமை நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் ஒலிவ எண்ணெய் ஆகிய அளவுவரை கொடுங்கள். அத்துடன் தேவையான அளவு உப்பையும் கொடுங்கள்.
23 ௨௩ பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு கவனமாக செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவருடைய மகன்களும் ஆளும் தேசத்தின்மேல் கடுங்கோபம் ஏன் வரவேண்டும்.
பரலோகத்தின் இறைவன் விவரித்தபடி, எல்லாம் பரலோக இறைவனின் ஆலயத்திற்காகக் கவனத்துடன் செய்யப்படட்டும். அரசனுடைய பிரதேசத்துக்கும், அவனுடைய மகன்களுக்கும் எதிராக ஏன் அவரின் கோபம் உண்டாக வேண்டும்.
24 ௨௪ பின்னும் ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும், வாசல் காவலாளர்களும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் எந்தவொரு வரியையும் சுமத்தக்கூடாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
அத்துடன் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர், இறைவனின் மற்ற ஆலய ஊழியக்காரர் ஆகியோரிடம் எவ்வித வரியோ, தீர்வையோ, திறையோ வசூலிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையென்பதை நீங்கள் அறியவேண்டும்.
25 ௨௫ மேலும் நதிக்கு மறுபுறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த அனைத்து மக்களையும் நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ள அறிஞர்களையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளைப் போதிக்கவும் வேண்டும்.
எஸ்றாவாகிய நீயோ, உன்னிடம் இருக்கும் உனது இறைவனின் ஞானத்தின்படி, நதிக்கு மறுகரையில் இருக்கும் மக்களான உன் இறைவனின் சட்டங்களை அறிந்திருக்கும் யாவருக்கும் நீதி வழங்கும்படி, நீதிபதிகளையும், உப நீதிபதிகளையும் நியமி. அவற்றை அறியாத மக்களுக்கு நீ கற்பிக்க வேண்டும்.
26 ௨௬ உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், நாடு கடத்தப்படுதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.
உனது இறைவனின் சட்டங்களுக்கும், அரசனின் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாதவன் எவனோ, அவன் மரண தண்டனை, நாடுகடத்தப்படல், சொத்துக்கள் பறிமுதல் அல்லது சிறைத் தண்டனை ஆகியவற்றில் ஒன்றினால் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
27 ௨௭ எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிகளுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்கு தயவு கிடைக்கச் செய்த எங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.
இவ்விதமாய் எருசலேமிலுள்ள ஆலயத்துக்கு அலங்கரிக்கும்படி அரசனின் இருதயத்தை ஏவிய எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக.
28 ௨௮ அப்படியே என் தேவனாகிய யெகோவாவுடைய கரம் என்மேல் இருந்ததால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவர்களை என்னுடன் வரும்படி சேர்த்துக்கொண்டேன்.
அரசனுக்கும், அவரது ஆலோசகருக்கும், அரசனின் வல்லமையுள்ள அதிகாரிகள் எல்லோருக்கும் முன்பு அவர் எனக்குத் தயவு காண்பித்தார். என்மேல் இறைவனாகிய யெகோவாவின் கரம் இருந்ததால், நான் தைரியங்கொண்டு என்னுடன் போவதற்கு இஸ்ரயேலில் இருந்து முதன்மையான மனிதர்களை ஒன்றுசேர்த்தேன்.

< எஸ்றா 7 >