< எஸ்றா 5 >
1 ௧ அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேலுடைய தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.
2 ௨ அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும் யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்கு தைரியம் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.
3 ௩ அக்காலத்திலே நதிக்கு இந்தப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகள் அவர்களிடத்திற்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர்.
4 ௪ அப்பொழுது அதற்கு ஏற்ற பதிலையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
அத்துடன், “இதைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்கள் என்ன?” எனவும் கேட்டனர்.
5 ௫ ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடைசெய்யாதபடி, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
ஆனால் இறைவனின் கண் யூதரின் முதியவர்கள்மேல் இருந்தது. தரியு அரசனுக்கு இதைக்குறித்து அறிவிக்கப்பட்டு அவனிடமிருந்து எழுத்துமூலம் பதில் வரும்வரை அவர்களுடைய வேலை நிறுத்தப்படவில்லை.
6 ௬ நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவனுடன் இருந்தவர்களும், ராஜாவாகிய தரியுவிற்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:
ஐபிராத்து நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தத்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகளான ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள அதிகாரிகளும் தரியு அரசனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இதுவே:
7 ௭ ராஜாவாகிய தரியுவிற்கு முழு சமாதானமும் உண்டாவதாக.
அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது: தரியு அரசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
8 ௮ நாங்கள் யூத நாட்டிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்திற்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் நீண்ட மரங்கள் வைக்கப்பட்டு, அந்த வேலை ஒழுங்காக நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
நாங்கள் யூதா மாவட்டத்திலுள்ள மேன்மையுள்ள இறைவனின் ஆலயத்துக்குப் போனோம் என்பதை அரசன் தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் அதைப் பெரிய கற்களினால் கட்டி மரத்தாலான உத்திரங்களையும் சுவர்களின்மேல் வைக்கிறார்கள். அந்த வேலை மிகக் கவனத்துடனும், துரிதமாகவும் செய்யப்பட்டு வருகிறது.
9 ௯ அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.
அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம்.
10 ௧0 இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவர்களான மனிதர்கள் யார் என்று உமக்கு எழுதி தெரியப்படுத்த, அவர்களுடைய பெயர்கள் என்னவென்றும் கேட்டோம்.
அத்துடன் நாங்கள் உமக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் முதியவர்களின் பெயர்களைக் கேட்டு எழுதினோம்.
11 ௧௧ அவர்கள் எங்களுக்கு மறுமொழியாக: நாங்கள் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் தேவனாக இருக்கிறவரைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருடங்களுக்குமுன்னே கட்டிமுடித்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
அவர்கள் எங்களுக்குப் பதிலுரைத்து: “நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் இறைவனாய் இருப்பவரின் ஊழியர்கள். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையே நாங்கள் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கிறோம். அதை இஸ்ரயேலின் ஒரு பெரிய அரசன் கட்டி முடித்திருந்தான்.
12 ௧௨ எங்கள் முற்பிதாக்கள் பரலோகத்தின் தேவனைக் கோபப்படுத்தியதால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை இடித்து, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
எங்களுடைய முற்பிதாக்கள் பரலோகத்தின் இறைவனுக்குக் கோபமூட்டினதால், அவர் இவர்களை பாபிலோன் அரசனான கல்தேயனாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எனவே அவன் இந்த ஆலயத்தை அழித்து மக்களை பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
13 ௧௩ ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே கோரேஸ் ராஜா தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கட்டளையிட்டார்.
“ஆனாலும் பாபிலோன் அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், இறைவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ஒரு கட்டளை பிறப்பித்தான்.
14 ௧௪ நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன், வெள்ளித் தட்டுமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து. அவர் தேசத்து ஆளுனராக ஏற்படுத்திய செஸ்பாத்சாரென்னும் பெயருள்ளவனிடத்தில் அவைகளை ஒப்படைத்து,
அத்துடன் நேபுகாத்நேச்சார் அரசன் எருசலேமிலுள்ள ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்று, பாபிலோனிலுள்ள கோயிலுக்குள் கொண்டுபோய் வைத்திருந்த தங்கத்தினாலும் வெள்ளியினாலுமான பொருட்களை, கோரேஸ் அரசன் பாபிலோனின் கோயிலிலிருந்து எடுத்தான். பின்பு அவற்றை அரசன் தான் ஆளுநனாக நியமித்திருந்த சேஸ்பாத்சார் என்பவனிடம் கொடுத்தான்.
15 ௧௫ அவனை நோக்கி: நீ இந்தத் தட்டுமுட்டுகளை எடுத்து, எருசலேமில் இருக்கும் தேவாலயத்திற்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் இடத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
கோரேஸ் அரசன் அவனிடம், ‘இப்பொருட்களை நீ எருசலேமிலுள்ள ஆலயத்தில் கொண்டுபோய் வை. அவ்விடத்திலேயே இறைவனுடைய ஆலயத்தைத் திரும்பவும் கட்டு’ எனச் சொன்னான்.
16 ௧௬ அப்பொழுது அந்த செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்தநாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் நிறைவடையவில்லை என்றார்கள்.
“எனவே சேஸ்பாத்சார் வந்து எருசலேமில் இறைவனின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். அந்த நாள் முதல் இன்றுவரை அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இன்னும் முடிவடையவில்லை” என்றார்கள்.
17 ௧௭ இப்பொழுதும் ராஜாவுக்கு சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய விருப்பம் என்னவென்று எங்களுக்கு எழுதியனுப்பவும், கட்டளையிடவும்வேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
“ஆகையால் இப்பொழுதும் அரசனுக்கு மனவிருப்பமிருந்தால், பாபிலோனிலுள்ள அரச பதிவேட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்க்கட்டும். எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படி, கோரேஸ் அரசன் உண்மையாக ஒரு கட்டளையை பிறப்பித்தாரோ என்று தேடிப் பார்க்கட்டும். பின்பு அரசன் இந்தக் காரியத்தில் தீர்மானத்தை எங்களுக்கும் அனுப்பட்டும்” என்றார்கள்.