< யாத்திராகமம் 28 >
1 ௧ “உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள்.
“உன் சகோதரன் ஆரோனையும், அவன் மகன்களான நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரையும் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து உன்னிடம் அழைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி இதைச் செய்யவேண்டும்.
2 ௨ உன்னுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, பரிசுத்த ஆடைகளை உண்டாக்கு.
உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மதிப்பும், கனமும் கொடுக்கும்படி அவனுக்குப் பரிசுத்த உடைகளைச் செய்யவேண்டும்.
3 ௩ ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு.
இவ்விதமான காரியங்களில், நான் ஞானத்தைக் கொடுத்திருக்கும் எல்லா திறமையுள்ள மனிதரிடமும் நீ பேசவேண்டும். ஆரோன் ஆசாரியனாக எனக்கு ஊழியம் செய்யும்படி அவனுடைய அர்ப்பணிப்புக்காக அவனுக்கான உடைகளைச் செய்யும்படி அவர்களுக்குச் சொல்லவேண்டும்.
4 ௪ அவர்கள் உண்டாக்கவேண்டிய ஆடைகள்; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட உள்சட்டையும், தலைப்பாகையும், இடுப்புக்கச்சையுமே. உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த ஆடைகளை உண்டாக்கவேண்டும்.
அவர்கள் செய்யவேண்டிய உடைகள்: ஒரு மார்பு அணி, ஒரு ஏபோத், ஒரு மேலங்கி, நெய்யப்பட்ட ஒரு உள் அங்கி, ஒரு தலைப்பாகை, ஒரு இடைப்பட்டி ஆகியவையே. உன் சகோதரன் ஆரோனும், அவன் மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, திறமையுள்ளவர்கள் இந்த பரிசுத்த உடைகளைத் தயாரிக்க வேண்டும்.
5 ௫ அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிக்கட்டும்.
அவர்கள் தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு நூல்களை பயன்படுத்த வேண்டும்.
6 ௬ “ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும்.
“தங்கத்தையும், நீலநூலையும், ஊதா நூலையும், கருஞ்சிவப்பு நூலையும், திரிக்கப்பட்ட மென்பட்டையும் கொண்டு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாய் ஏபோத்தைச் செய்யவேண்டும்.
7 ௭ அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரண்டு முனைகளிலும் தோளுக்கான இரண்டு பட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
8 ௮ அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சை அந்த வேலையைப்போலவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு, அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
அதன் நுட்பமாக நெய்யப்பட்ட அதன் இடைப்பட்டியும் அதைப் போலவே இருக்கவேண்டும். அது ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் செய்யப்படவேண்டும்.
9 ௯ பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக.
“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து அவற்றில் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கு.
10 ௧0 அவர்கள் பிறந்த வரிசையின்படி, அவர்களுடைய பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்கவேண்டும்.
அவர்கள் பிறந்த வரிசையின்படியே ஆறு மகன்களின் பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு மகன்களின் பெயர்கள் மற்றொரு கல்லிலும் செதுக்கப்பட வேண்டும்.
11 ௧௧ இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.
இரத்தினங்களில் முத்திரையை வெட்டிச் செய்வதுபோல், அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கி வைக்கவேண்டும். பின்பு அந்தக் கற்களை தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதிக்கவேண்டும்.
12 ௧௨ ஆரோன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னுடைய இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படி கற்களாக வைக்கவேண்டும்.
பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களின் ஞாபகார்த்தக் கற்களாக ஏபோத்தின் தோள் துண்டுகளில் கட்டவேண்டும். ஆரோன் இந்தப் பெயர்களை யெகோவாவுக்கு முன்பாக ஒரு ஞாபகார்த்தமாய் தன் தோள்களில் சுமக்கவேண்டும்.
13 ௧௩ “பொன்னினால் வளையங்களைச்செய்து,
தங்கச்சரிகை வேலைப்பாடுகளைச் செய்து,
14 ௧௪ சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
அத்துடன் சுத்தத் தங்கத்தினால் கயிறுபோல பின்னப்பட்ட இரண்டு சங்கிலிகளைச் செய்து, அவற்றை அந்தச் சரிகை வேலைப்பாட்டுடன் தொடுத்துக்கொள்ள வேண்டும்.
15 ௧௫ “நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாகச் செய்; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
“திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக தீர்மானங்கள் எடுப்பதற்கான ஒரு மார்பு அணியைச் செய்யவேண்டும். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அதைச் செய்யவேண்டும்.
16 ௧௬ அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருக்கவேண்டும்.
அது ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் கொண்ட சதுரமாகவும், இரண்டாக மடிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
17 ௧௭ அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களை நிறையப் பதிக்கவும்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
அதன்மேல் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதிக்கவேண்டும். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்;
18 ௧௮ இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும்,
இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்;
19 ௧௯ மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி;
20 ௨0 நான்காம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாக இருக்கட்டும்; இவைகள் அந்தந்த வரிசையில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருக்கவேண்டும். அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்து வைக்கவேண்டும்.
21 ௨௧ இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.
இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட வேண்டும்.
22 ௨௨ மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
“மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும்.
23 ௨௩ அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
அதற்காக இரண்டு தங்க வளையங்களைச் செய்து மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும்.
24 ௨௪ பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
அந்த இரண்டு தங்கச்சங்கிலிகளையும் மார்பு அணியின் மூலைகளிலுள்ள இரண்டு வளையங்களோடு தொடுக்கவேண்டும்.
25 ௨௫ அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும்.
சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும் ஏபோத்தின் முன்பக்கத்தில் உள்ள தோள்பட்டியுடன் இணைந்திருக்கும் சரிகை வேலைப்பாடுகளுடன் தொடுக்கவேண்டும்.
26 ௨௬ நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்துடன் ஒட்டியிருக்கும் மார்பு அணியின் உட்புற விளிம்பில், இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும்.
27 ௨௭ வேறு இரண்டு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,
வேறு இரண்டு தங்க வளையங்களைச் செய்து, ஏபோத்திலுள்ள இடைப்பட்டிக்கு மேலாக உள்ள இணைப்புக்குச் சமீபமாய், ஏபோத்தின் முன்பக்கத்தில் இருக்கிற தோள்பட்டிகளின் அடிப்பக்கத்தில் தொடுக்கவேண்டும்.
28 ௨௮ மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படி, அது ஏபோத்திலிருந்து நீங்காதபடி, அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடு இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.
மார்பு அணி ஏபோத்தில் இருந்து விலகாதபடி, அதை இடைப்பட்டியுடன் இணைத்து, மார்பு அணியின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களுடன் நீலநிற நாடாவினால் இணைத்துக் கட்டவேண்டும்.
29 ௨௯ ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைத் தன்னுடைய இருதயத்தின்மேல் இருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும்.
“ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதெல்லாம், இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை தன் இருதயத்திற்கு மேலுள்ள தீர்மானத்திற்கான மார்பு அணியின்மேல் நிரந்தரமான ஒரு ஞாபகச்சின்னமாக, யெகோவாவுக்குமுன் சுமப்பான்.
30 ௩0 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைக்கவேண்டும்; ஆரோன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் நுழையும்போது, அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன்னுடைய இருதயத்தின்மேல் இஸ்ரவேலர்களுடைய நியாயவிதியைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும்.
யெகோவா முன்னிலையில் ஆரோன் வரும்போதெல்லாம், அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கும்படி ஊரீம், தும்மீம் ஆகியவற்றை அந்த மார்பு அணியில் வைக்கவேண்டும். இவ்வாறு ஆரோன் இஸ்ரயேலருக்கான தீர்மானங்களைச் செய்யும் சாதனங்களை எப்பொழுதும் யெகோவா முன்னிலையில் தன் இருதயத்திற்கு மேல் சுமப்பான்.
31 ௩௧ “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
“ஏபோத்துடன் அணியும் மேலங்கி முழுவதும், நீலநிறத் துணியினாலேயே செய்யப்படவேண்டும்.
32 ௩௨ தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்திற்கு நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள ஒரு நாடா சுற்றிலும் இருக்கவேண்டும்; அது கிழியாதபடி மார்க்கவசத்தின் துவாரத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.
அதன் நடுப்பகுதியில் தலை நுழையும் துவாரம் இருக்கவேண்டும். அந்த துவாரம் கிழிந்து போகாதபடி, அதைச் சுற்றிலும் கழுத்துப்பட்டியைப் போன்ற ஒரு நெய்யப்பட்ட விளிம்பு இருக்கவேண்டும்.
33 ௩௩ அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும்.
மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் நீலநூல், ஊதாநூல், சிவப்புநூல் ஆகியவற்றால் மாதுளம் பழங்களைச் செய்து, அவைகளுக்கு இடையிடையே தங்க மணிகளைத் தொங்கவிட வேண்டும்.
34 ௩௪ அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமுமாகத் தொங்கட்டும்.
மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் தங்க மணியும், மாதுளம் பழமும் மாறிமாறித் தொங்கவிட வேண்டும்.
35 ௩௫ ஆரோன் ஆராதனை செய்யக் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடி, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.
ஆரோன் தன் ஆசாரிய ஊழியத்தைச் செய்யப்போகும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். யெகோவாவுக்குமுன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதும், அங்கிருந்து வரும்போதும், அந்த மணியின் சத்தம் கேட்கும். எனவே அவன் சாகாதிருப்பான்.
36 ௩௬ “சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
“சுத்தத் தங்கத்தினால் தகடு ஒன்றைச் செய்து அதில், யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று ஒரு முத்திரையைப்போல பொறிக்கவேண்டும்.
37 ௩௭ அது தலைப்பாகையில் இருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
“அதைத் தலைப்பாகையுடன் சேர்த்துக் கட்டும்படி ஒரு நீலநிற நாடாவை அதில் இணைக்க வேண்டும். அது தலைப்பாகையின் முன்பக்கத்தில் இருக்கவேண்டும்.
38 ௩௮ இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; யெகோவாவுடைய சந்நிதியில் அவர்கள் அங்கீகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.
அது ஆரோனுடைய நெற்றியில் இருக்கவேண்டும். இஸ்ரயேலர் அர்ப்பணிக்கும் பரிசுத்த கொடைகள் எதுவானாலும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றத்தை அவன் சுமப்பான். அந்தக் கொடைகள் யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அந்தத்தகடு அவனுடைய நெற்றியின்மேல் தொடர்ந்து இருக்கும்.
39 ௩௯ “மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புக்கச்சையை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும்.
“மென்பட்டு நூலினால் உள் அங்கியை நெய்து, மென்பட்டினால் தலைப்பாகையையும் செய்யவேண்டும். இடைப்பட்டி சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருக்கவேண்டும்.
40 ௪0 “ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும்.
ஆரோனுடைய மகன்களுக்கு மதிப்பையும், கனத்தையும் கொடுப்பதற்கு அவர்களுக்கும் உள் அங்கிகளையும், இடைப்பட்டிகளையும், அத்துடன் குல்லாக்களையும் செய்யவேண்டும்.
41 ௪௧ உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் அவனுடன் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அந்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
நீ அந்த உடைகளை உன் சகோதரன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் அணிவித்தபின், அவர்களை அபிஷேகித்து நியமனம் செய்யவேண்டும். அவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்யவேண்டும்.
42 ௪௨ அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படி, இடுப்புத்துவங்கி முழங்கால்வரை அணிய சணல்நூல் உள்ளாடைகளையும் உண்டாக்கவேண்டும்.
“அவர்களுடைய உடலை மூடுவதற்கான கால் சட்டையை மென்பட்டினால் செய்யவேண்டும். அவை இடுப்பிலிருந்து தொடைவரை இருக்கவேண்டும்.
43 ௪௩ ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும் பலிபீடத்தின் அருகில் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடி, அவைகளை அணிந்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர கட்டளை.
ஆரோனும், அவன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதோ அல்லது பரிசுத்த இடத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும்படி பலிபீடத்தை நெருங்கும்போதோ, குற்றம் உள்ளவர்களாகிச் சாகாதபடி, அவற்றை அணிந்திருக்க வேண்டும். “இது ஆரோனுக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.”