< யாத்திராகமம் 23 >
1 ௧ “அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே.
“பொய் வதந்திகளைப் பரப்பவேண்டாம். தீயநோக்கமுள்ள சாட்சியாய் இருந்து கொடியவனுக்கு உதவவேண்டாம்.
2 ௨ தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே.
“பிழையானதைச் செய்யும் மக்கள் கூட்டத்தைப் பின்பற்றவேண்டாம். ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, அதிகமான மக்களுக்கு சார்பாக இருந்து நீதியைப் புரட்டவேண்டாம்.
3 ௩ வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே.
ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம்.
4 ௪ உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு.
“உங்கள் பகைவனுடைய மாட்டையோ அல்லது கழுதையையோ வழிதப்பி திரிகிறதை நீங்கள் காணநேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய்விடத் தவறவேண்டாம்.
5 ௫ உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம்.
6 ௬ உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே.
“உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதிவழங்க மறுக்கவேண்டாம்.
7 ௭ தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
பொய்க்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவேண்டாம். குற்றமற்றவனையும், உண்மையுள்ளவனையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டியாமல் விடமாட்டேன்.
8 ௮ லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
“இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது.
9 ௯ அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
“பிறநாட்டினனை ஒடுக்கவேண்டாம்; பிறநாட்டினராய் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. ஏனெனில், நீங்களும் எகிப்தில் பிறநாட்டினராய் இருந்தீர்களே.
10 ௧0 ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
“நீங்கள் ஆறு வருடங்களுக்கு உங்கள் வயல்களை விதைத்து விளைச்சலை அறுவடை செய்யவேண்டும்.
11 ௧௧ ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும்.
ஆனால் ஏழாவது வருடமோ, நிலமானது உழப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட வேண்டும். உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் அதிலிருந்து வளரும் தானியங்களை உணவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் விட்டதைக் காட்டு மிருகங்கள் தின்னலாம். உங்கள் திராட்சைத் தோட்டத்திற்கும், ஒலிவத்தோப்பிற்கும் அப்படியே செய்யுங்கள்.
12 ௧௨ ஆறுநாட்கள் உன்னுடைய வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன்னுடைய மாடும் உன்னுடைய கழுதையும் இளைப்பாறவும், உன்னுடைய அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திரு.
“நீங்கள் ஆறு நாட்களுக்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஏழாம்நாளோ வேலைசெய்யவேண்டாம். அதனால் உங்கள் எருதும், கழுதையும் இளைப்பாறட்டும். பிறநாட்டினனும் உங்கள் வீட்டில் பிறந்த அடிமையும் இளைப்பாறி, புதுபெலன் பெறட்டும்.
13 ௧௩ நான் உங்களுக்குச் சொன்னவைகள் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். அந்நிய தெய்வங்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன்னுடைய வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
“நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். பிற நாட்டு தெய்வங்களின் பெயரைச்சொல்லிக் கூப்பிடவேண்டாம். அவற்றின் பெயரை உங்கள் உதடுகளினால் உச்சரிக்கவும் வேண்டாம்.
14 ௧௪ வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி.
“வருடத்தில் மூன்றுமுறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்.
15 ௧௫ புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம்.
“முதலாவதாக புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் இதைச் செய்யுங்கள். ஏனெனில் அந்த மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேவந்தீர்கள். “ஒருவரும் வெறுங்கையுடன் என்முன் வரக்கூடாது.
16 ௧௬ நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
“நீங்கள் விதைத்த உங்கள் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். “பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உங்கள் வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
17 ௧௭ வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் யெகோவாவாகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும்.
“இவ்வாறாக வருடத்தில் மூன்றுமுறை எல்லா ஆண்களும் ஆண்டவராகிய யெகோவா முன்பாக வரவேண்டும்.
18 ௧௮ எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
“பலியின் இரத்தத்தை புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் சேர்த்து எனக்குச் செலுத்தவேண்டாம். “எனது பண்டிகைக் காணிக்கைகளின் கொழுப்பை மறுநாள் காலைவரை பலியிடாமல் வைத்திருக்கக்கூடாது.
19 ௧௯ உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.
“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
20 ௨0 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
“பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன்.
21 ௨௧ அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது.
அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில் என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார்.
22 ௨௨ நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன்.
அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன்.
23 ௨௩ என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன்.
என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன்.
24 ௨௪ நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும்.
நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும்.
25 ௨௫ உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன்.
26 ௨௬ கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவேன்.
உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன்.
27 ௨௭ எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன்.
“நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டினரையும் கலங்கப்பண்ணுவேன். உங்கள் பகைவரையெல்லாம் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன்.
28 ௨௮ உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியைவிட்டுத் துரத்திவிட உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்புவேன்.
29 ௨௯ தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல்,
ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே துரத்திவிடமாட்டேன். அப்படிச் செய்தால், நாடு பாழாய்ப் போய்விடும், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாத அளவு பெருகிவிடும்.
30 ௩0 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன்.
நீங்கள் அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குப் பெருகுகிறவரைக்கும், நான் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை உங்கள் முன்னின்று துரத்துவேன்.
31 ௩௧ செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய்.
“செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல் வரைக்கும், பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள் அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள்.
32 ௩௨ அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே.
அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம்.
33 ௩௩ உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.
உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.