< பிரசங்கி 6 >

1 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது.
2 அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது.
3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன்.
ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன்.
4 அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும்.
அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது.
5 அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.
அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது.
6 அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?
அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள்.
7 மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை.
மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே. ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை.
8 இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்? மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?
9 ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது.
ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட, கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
10 ௧0 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.
இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன; மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது. தன்னிலும் வலிமையுள்ளவரோடு ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது.
11 ௧௧ மாயையைப் பெருகச்செய்கிற அநேக காரியங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனிதர்களுக்குப் பயன் என்ன?
வார்த்தைகள் கூடும்போது, அர்த்தம் குறையும். இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ?
12 ௧௨ நிழலைப்போன்ற மாயையான தன்னுடைய வாழ்நாளை போக்கும் மனிதர்களுக்கு இந்த வாழ்வில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே நடக்கும் காரியம் இன்னதென்று மனிதனுக்கு அறிவிப்பவன் யார்?
ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்?

< பிரசங்கி 6 >