< உபாகமம் 22 >
1 ௧ “உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
உங்கள் அயலானுடைய எருதோ, செம்மறியாடோ வழிதவறிப்போவதைக் கண்டால், காணாததுபோல் இருக்கவேண்டாம். அதை உரியவனிடத்தில் கொண்டுபோய்விட நீங்கள் கவனமாயிருங்கள்.
2 ௨ உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
அந்த அயலவன் உங்களுக்கு அருகில் குடியிராவிட்டாலோ, அவன் யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலோ அவன் அதைத் தேடிவரும்வரை அதை உங்கள் வீட்டில் கொண்டுபோய் வைத்திருந்து, அவனிடம் திருப்பிக்கொடுங்கள்.
3 ௩ அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது.
உங்கள் அயலான் தனது கழுதையையோ, மேலங்கியையோ அல்லது வேறு பொருளையோ தொலைத்திருக்க நீங்கள் அதைக் கண்டெடுத்தால், இவ்வாறே செய்யவேண்டும். அதைத் திருப்பிக் கொடுக்காதிருக்கவேண்டாம்.
4 ௪ “உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.
உங்கள் அயலானுடைய கழுதையோ, மாடோ வீதியில் விழுந்து கிடப்பதைக் கண்டால், அதைக் காணாததுபோல் இருக்கவேண்டாம். அந்த மிருகத்தைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய்யுங்கள்.
5 ௫ “ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
ஒரு பெண், ஆண்களின் உடையையோ ஒரு ஆண், பெண்களின் உடையையோ உடுத்தக்கூடாது. ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா இதைச் செய்பவர்களை அருவருக்கிறார்.
6 ௬ “வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது.
வழியருகிலாவது, மரத்திலாவது, தரையிலாவது தாய்க் குருவி ஒன்று முட்டைகளோடு அல்லது குஞ்சுகளோடு ஒரு கூட்டில் இருப்பதை நீங்கள் கண்டால், தாய்க் குருவியை குஞ்சுகளோடு எடுக்காதீர்கள்.
7 ௭ தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
நீங்கள் குஞ்சுகளை எடுக்கலாம், ஆனால் தாய்க் குருவியை போகவிட கவனமாயிருங்கள், அப்படிச் செய்தால் நீங்கள் நலமாயிருந்து நீடித்து வாழ்வீர்கள்.
8 ௮ “நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.
நீங்கள் புதிய வீடு கட்டும்பொழுது கூரையிலிருந்து யாரும் விழாதபடி, கூரையைச் சுற்றி சிறிய கைச்சுவரைக் கட்டுங்கள். ஏனெனில், யாரேனும் கூரையிலிருந்து விழுந்தால், நீங்கள் அந்த வீட்டின்மேல் இரத்தப்பழி சுமராதிருக்கச்செய்வீர்கள்.
9 ௯ “உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
உங்கள் திராட்சைத் தோட்டத்தில் இரண்டு வகையான விதைகளை நடவேண்டாம்; அப்படிச் செய்தால் நீங்கள், நட்டவைகளின் பயிர்கள் மட்டுமல்ல திராட்சைத் தோட்டத்தின் பலனும் தீட்டுப்படும்.
10 ௧0 மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.
மாட்டையும், கழுதையையும் ஒரே நுகத்தில் பூட்டி உழவேண்டாம்.
11 ௧௧ ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
கம்பளி நூலும், மென்பட்டு நூலும் சேர்த்து நெய்யப்பட்ட துணியினாலான உடையை உடுத்தவேண்டாம்.
12 ௧௨ “நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக.
நீங்கள் உடுத்தும் உங்கள் மேலங்கியின் நான்கு முனைகளிலும் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள்.
13 ௧௩ “ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:
ஒருவன் ஒரு மனைவியை எடுத்து, அவளுடன் உறவுகொண்டபின் அவளை வெறுத்து,
14 ௧௪ நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
“நான் அவளுடன் சேர்ந்தபொழுது அவளுடைய கன்னித்தன்மைக்கான அத்தாட்சியை அவளில் காணவில்லை” என்று சொல்லி, அவளைத் தூஷித்து, அவளுக்கு ஒரு கெட்டபெயர் வரப்பண்ணக்கூடும்.
15 ௧௫ அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
அப்பொழுது அவளுடைய தகப்பனும் தாயும் அவள் கன்னித்தன்மை உடையவள் என்ற அத்தாட்சியை பட்டண வாசலில் இருக்கும் சபைத்தலைவர்களிடம் கொண்டுவர வேண்டும்.
16 ௧௬ அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
அவளின் தகப்பன் சபைத்தலைவர்களிடம், “என் மகளை இவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறான்.
17 ௧௭ நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.
அவன் இப்போது அவளைத் தூஷித்து, உன்னுடைய மகளைக் கன்னியாக நான் காணவில்லை என்று சொல்கிறான். அவளது கன்னித்தன்மையின் அத்தாட்சி இங்கே இருக்கிறது” என்று சொல்லவேண்டும். பின்பு அவளுடைய பெற்றோர், பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் அந்த துணியை விரித்துக் காட்டவேண்டும்.
18 ௧௮ அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
அப்பொழுது பட்டணத்து சபைத்தலைவர்கள் அந்த மனிதனைப்பிடித்து, அவனைத் தண்டிக்கவேண்டும்.
19 ௧௯ அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது.
அவர்கள் அவனுக்கு நூறு சேக்கல் வெள்ளி அபராதம் விதித்து, அதைப் பெண்ணின் தகப்பனிடம் கொடுக்கவேண்டும். ஏனெனில் அந்த மனிதன் ஒரு இஸ்ரயேலில் கன்னிப்பெண்ணிற்கு கெட்டபெயரை உண்டாக்கியிருக்கிறான். அவள் தொடர்ந்து அவன் மனைவியாக இருக்கவேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்துசெய்தல் கூடாது.
20 ௨0 அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,
ஆனாலும் அக்குற்றச்சாட்டு உண்மையாயிருந்து, அவளின் கன்னித்தன்மைக்கான அத்தாட்சி காட்டப்படாதிருந்தால்,
21 ௨௧ அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
அந்தப் பெண்ணை அவள் தகப்பன் வீட்டு வாசலில் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அந்த பட்டணத்தில் உள்ள ஆண்கள் அவள்மேல் கல்லெறிந்து அவளைக் கொல்லவேண்டும். ஏனெனில் தன் தகப்பன் வீட்டில் அவள் இருக்கும்போது, அவள் மானக்கேடாக நடந்து, இஸ்ரயேலில் ஒரு இழிவான செயலைச் செய்திருக்கிறாள். இப்படியாக உங்கள் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
22 ௨௨ “ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.
ஒருவன் வேறு ஒருவனின் மனைவியுடன் உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவளுடன் உறவுகொண்ட மனிதனும், அந்த பெண்ணுமாகிய இருவருமே சாகவேண்டும். இப்படியாக இஸ்ரயேலின் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
23 ௨௩ “கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,
ஒரு கன்னிப்பெண்ணை ஒருவனுக்கென்று நியமித்தபின், வேறொருவன் பட்டணத்தில் அவளைக் கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,
24 ௨௪ அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
நீங்கள் அவர்கள் இருவரையும் பட்டணத்து வாசலுக்குக் கொண்டுவந்து, அவர்கள்மேல் கல்லெறிந்து அவர்களைக் கொல்லவேண்டும். ஏனெனில், அவள் பட்டணத்திலிருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாதபடியால் அவளையும், அவன் வேறொருவனது மனைவியை மானபங்கப்படுத்தினபடியால் அவனையும் கொல்லவேண்டும். இப்படியாக உங்கள் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
25 ௨௫ “ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
ஆனால் வேறொருவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த ஒரு பெண்ணை நாட்டுப்புறத்தில் கண்டு, ஒருவன் அவளைக் கற்பழித்தால், அதைச் செய்த அம்மனிதன் மட்டுமே சாகவேண்டும்.
26 ௨௬ பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.
அவளுக்கு ஒன்றும் செய்யவேண்டாம். அவள் மரணத்துக்குரிய பாவம் ஒன்றையும் செய்யவில்லை. இந்த செயல் ஒருவன் தன் அயலானைத் தாக்கிக் கொலைசெய்தது போன்றதாகும்,
27 ௨௭ வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.
அவன் அவளை புறம்பான ஒரு தனி இடத்திலே கண்டு அதைச் செய்தான். விவாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட அப்பெண் கூக்குரலிட்டிருந்தும் அவளைக் காப்பாற்ற ஒருவரும் இருக்கவில்லை.
28 ௨௮ “நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
ஆனால் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வெளியிலே கண்டு, அவளைக் கற்பழித்தது, கண்டுபிடிக்கப்பட்டால்,
29 ௨௯ அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.
அவன் அவளுடைய தகப்பனுக்கு ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அவன் அவளை பலாத்காரமாய் கற்பழித்தபடியால், அவளைத் திருமணம் செய்யவேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் அவளை விவாகரத்து செய்யமுடியாது.
30 ௩0 “ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியுடன் உறவுகொள்ளக்கூடாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தக்கூடாது.
ஒருவன் தன் தகப்பனின் மனைவியை திருமணம் செய்யக்கூடாது; அவன் தன் தகப்பனை அவமதிக்கக்கூடாது.