< அப்போஸ்தலர் 8 >

1 ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள்.
ஸ்தேவானைக் கொலைசெய்கிறதற்கு, சவுலும் உடன்பட்டிருந்தான். அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலரைத் தவிர அனைவரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறடிக்கப்பட்டார்கள்.
2 தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள்.
இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள்.
3 சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான்.
ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான்.
4 சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள்.
சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
5 அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான்.
பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான்.
6 பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள்.
கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
7 அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்.
அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள்.
8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.
இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
9 சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான்.
சீமோன் என்னும் பெயருடைய ஒருவன், சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து, சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கச்செய்தான். அவன் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காண்பித்துக்கொண்டான்.
10 ௧0 தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.
இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள்.
11 ௧௧ அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
சீமோன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப்பண்ணினதால், அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
12 ௧௨ தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ஆனால் பிலிப்பு இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தியையும் இயேசுகிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது, அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக திருமுழுக்குப் பெற்றார்கள்.
13 ௧௩ அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.
சீமோனும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றான். அவன் தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான்.
14 ௧௪ சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள்.
15 ௧௫ இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
இவர்கள் அங்கேபோய்ச் சேர்ந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள்.
16 ௧௬ அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து,
ஏனெனில், அதுவரை அவர்களில் யாருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.
17 ௧௭ அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.
பேதுருவும் யோவானும் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.
18 ௧௮ அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
அப்போஸ்தலர் கைகளை வைத்து மன்றாடும்போது, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து,
19 ௧௯ நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
“நான் எவர்கள்மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான்.
20 ௨0 பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.
அப்பொழுது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்!
21 ௨௧ உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லாதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே.
22 ௨௨ ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார்.
23 ௨௩ நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
ஏனெனில், நீ முழுவதும் கசப்பிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருப்பதை நான் காண்கிறேன்” என்றான்.
24 ௨௪ அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
அப்பொழுது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.
25 ௨௫ இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.
பேதுருவும் யோவானும் சாட்சி கூறி, கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
26 ௨௬ பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான்.
கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார்.
27 ௨௭ அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
எனவே அவன் புறப்பட்டுப்போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த, ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடும்படி எருசலேமுக்குச் சென்றிருந்தான்.
28 ௨௮ ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
அந்த அதிகாரி தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, வழியிலே தனது தேரில் உட்கார்ந்து, இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 ௨௯ ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார்.
30 ௩0 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான்.
பிலிப்பு அந்தத் தேரை நோக்கி ஓடிச்சென்றப் போது, அவன் இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பதன் பொருள் உனக்குத் தெரிகின்றதா?” எனக் கேட்டான்.
31 ௩௧ அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான்.
“அதற்கு அவன், யாராவது எனக்கு அதை விவரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி விளங்கும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான்.
32 ௩௨ அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: “அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்: “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார். மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல், அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33 ௩௩ அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.
அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே” என்றிருந்தது.
34 ௩௪ மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?” தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான்.
35 ௩௫ அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான்.
அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான்.
36 ௩௬ இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.
அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான்.
37 ௩௭ அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி;
அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீ திருமுழுக்கு பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசுகிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றான்.
38 ௩௮ இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவு கொடுத்தான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்குத் திருமுழுக்கு கொடுத்தான்.
39 ௩௯ அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான்.
அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். அந்த அதிகாரி அதற்குப் பின்பு பிலிப்புவைக் காணாமல், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான்.
40 ௪0 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.
பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு, செசரியாவைச் சென்றடைந்தான்.

< அப்போஸ்தலர் 8 >