< அப்போஸ்தலர் 21 >
1 ௧ நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து,
நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.
2 ௨ அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம்.
அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.
3 ௩ சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது.
நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.
4 ௪ அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
5 ௫ அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப்போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு பட்டணத்திற்கு வெளியே எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம்.
6 ௬ அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7 ௭ நாங்கள் கப்பல் பயணத்தை முடித்து, தீரு பட்டணத்தைவிட்டு பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்து, சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம்.
நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
8 ௮ மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்திற்கு வந்து, ஏழு நபர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்னும் நற்செய்தியாளர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினோம்.
மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன்.
9 ௯ தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
10 ௧0 நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.
11 ௧௧ அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
12 ௧௨ இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம்.
நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13 ௧௩ அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான்.
அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
14 ௧௪ அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம்.
நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
15 ௧௫ அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
16 ௧௬ செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள்.
செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
17 ௧௭ நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.
நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
18 ௧௮ மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
19 ௧௯ பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச்சொன்னான்.
பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
20 ௨0 யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக்கேட்டுக் கர்த்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாக இருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
21 ௨௧ யூதரல்லாதோர்களோடு இருக்கிற யூதர்களெல்லோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும் வேண்டியதில்லை என்று நீர் சொல்லி, அவர்கள் மோசேயைவிட்டுப் பிரிந்துபோகும்படி போதனை செய்கிறீர் என்று இவர்கள் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
22 ௨௨ இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும்.
ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
23 ௨௩ ஆகவே, நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் பொருத்தனை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 ௨௪ இவர்களை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு போய், இவர்களோடு உம்மை சுத்திகரிப்புச் செய்துகொண்டு, இவர்கள் முடி வெட்டிக்கொள்வதற்கு வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அப்படிச் செய்தால் அவர்கள் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய் என்றும், நீ மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவரென்றும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்.
இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
25 ௨௫ விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள்.
யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26 ௨௬ மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்.
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
27 ௨௭ அந்த ஏழு நாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனைப் பிடித்து:
அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள்.
28 ௨௮ இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள்.
29 ௨௯ எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.
ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
30 ௩0 அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
31 ௩௧ அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும்போது, எருசலேம் முழுவதும் கலக்கமாக இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது.
அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.
32 ௩௨ உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோம அதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள்.
அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
33 ௩௩ அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 ௩௪ அதற்கு மக்கள் பல காரியங்களைச் சொல்லி அதிகமாகக் கூச்சல் போட்டார்கள்; அதிக சத்தத்தினாலே அதிபதிக்கு ஒன்றும் புரியாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.
35 ௩௫ அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள்கூட்டம் அவனுக்கு பின்னேசென்று,
பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
36 ௩௬ இவனைக் கொல்லவேண்டும் என்று மிகுந்த கோபமாக சத்தம் போட்டதினாலே, போர்வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாக இருந்தது.
பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
37 ௩௭ அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற நேரத்தில், அவன் ரோம அதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
38 ௩௮ பல நாட்களுக்கு முன்னே கலகம் உண்டாக்கி, நான்கு ஆயிரம் கொலைபாதகர்களை வனாந்திரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் நீதானே என்றான்.
சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.
39 ௩௯ அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற தர்சு பட்டணத்தைச் சேர்ந்த யூதன்; மக்களுடனே பேசுவதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.
40 ௪0 அவன் அனுமதி அளித்தபோது, பவுல் படிகளின்மேல் நின்று மக்களைப் பார்த்து அமைதியாக இருக்கச்சொல்லி கையை அசைத்தான்; மிகுந்த அமைதி உண்டானது; அப்பொழுது அவன் எபிரெய மொழியிலே பேசத்தொடங்கினான்.
படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.