< 2 நாளாகமம் 17 >

1 ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான்.
ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அரசனாகி இஸ்ரயேலுக்கு எதிராகத் தன்னை பலப்படுத்திக் கொண்டான்.
2 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான்.
அவன் யூதாவிலுள்ள எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவவீரர்களை நிறுத்தினான். அத்துடன் அவன் யூதாவிலும், தன் தகப்பன் ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீம் பட்டணங்களிலும் காவற் படையையும் வைத்தான்.
3 யெகோவா யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
யெகோவா யோசபாத்துடன்கூட இருந்தார். ஏனெனில் அவனுடைய ஆட்சியின் ஆரம்ப வருடங்களில் தனது தகப்பன் தாவீது பின்பற்றிய வழிகளில் அவன் நடந்தான். பாகால்களிடம் ஆலோசனை கேட்கவில்லை.
4 தன் முற்பிதாக்களுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.
அவன் தன் முற்பிதாக்களின் இறைவனைத் தேடி, இஸ்ரயேலின் பழக்கங்களைவிட அவரது கட்டளைகளையே பின்பற்றினான்.
5 ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது.
யெகோவா அரசாட்சியை அவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் நிலைநிறுத்தினார். யூதா மக்கள் எல்லோரும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அதனால் அவன் மிகுந்த செல்வமும், கனமும் பெற்றான்.
6 யெகோவாவுடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான்.
அவனுடைய இருதயம் யெகோவாவினுடைய வழிகளைப் பின்பற்ற உறுதிகொண்டது. மேலும் அவன் யூதாவிலிருந்து வழிபாட்டு மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் அகற்றிப்போட்டான்.
7 அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும்,
அவனுடைய ஆட்சியின் மூன்றாம் வருடத்தில், யூதாவின் பட்டணங்களில் உள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா ஆகிய தனது அதிகாரிகளை அனுப்பினான்.
8 இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான்.
அவர்களுடன் செமாயா, நெதானியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகிய சில லேவியர்களும், ஆசாரியர்களான எலீஷாமாவும், யெகோராமும் இருந்தார்கள்.
9 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, யெகோவாவுடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள்.
அவர்கள் யெகோவாவின் சட்டப் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய் யூதா முழுவதும் படிப்பித்தார்கள். அவர்கள் யூதாவின் பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் போய் அங்குள்ள மக்களுக்குப் படிப்பித்தார்கள்.
10 ௧0 யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள்.
யெகோவாவைப்பற்றிய பயம் யூதாவைச் சுற்றிலுமிருந்த நாடுகளின் எல்லா அரசுகளின் மேலும் வந்தது. அதனால் அவர்கள் யோசபாத்துடன் யுத்தம் செய்யவில்லை.
11 ௧௧ பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.
சில பெலிஸ்தியர் யோசபாத்திற்கு அன்பளிப்புகளையும், திறையாக வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் அரபியரும் அவனுக்கு 7,700 செம்மறியாட்டுக் கடாக்களும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களும் அடங்கிய மந்தைகளையும் கொண்டுவந்தார்கள்.
12 ௧௨ இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
யோசபாத் மேலும் மேலும் வல்லமையுடையவனானான். அவன் யூதாவில் கோட்டைகளையும், களஞ்சியப் பட்டணங்களையும் கட்டினான்.
13 ௧௩ யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
யூதாவின் பட்டணங்களில் ஏராளமாய் பொருட்கள் இருந்தன. அவன் எருசலேமில் அனுபவமிக்க இராணுவவீரரையும் வைத்திருந்தான்.
14 ௧௪ தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அதனா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.
இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட குடும்பங்களின்படியான அவர்களுடைய விபரமாவது: யூதாவைச் சேர்ந்த ஆயிரம் பேர்களைக் கொண்ட பிரிவுகளுக்கான தளபதிகள்: அத்னா 3,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்;
15 ௧௫ அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
அடுத்ததாக யோகனான் 2,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்;
16 ௧௬ அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.
அடுத்ததாக சிக்ரியின் மகன் அமசியா 2,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். இவன் யெகோவாவுக்குப் பணிசெய்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான்;
17 ௧௭ பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
பென்யமீனியரைச் சேர்ந்த எலியாதா, வில்லுகளும் கேடயங்களும் ஏந்திய 2,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். இவன் தைரியமுள்ள வீரன்.
18 ௧௮ அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
அடுத்ததாக யெகோசபாத் யுத்த ஆயுதம் தரித்த 1,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்.
19 ௧௯ ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.
யூதா முழுவதிலுமுள்ள அரணான பட்டணங்களில் அவன் நிறுத்தியிருந்த போர் வீரர்களைத் தவிர, அரசனின் இராணுவ பணியில் ஈடுபட்ட மனிதர் இவர்களே.

< 2 நாளாகமம் 17 >