< 1 இராஜாக்கள் 15 >

1 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
நேபாத்தின் மகனான யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான்.
2 மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அப்சலோமின் மகளான அவனுடைய தாயின் பெயர் மாக்காள்.
3 தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.
அவனுடைய தகப்பன் முன்பு செய்த எல்லாப் பாவங்களையும் இவனும் செய்தான். தன் முற்பிதாவாகிய தாவீது, தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுமனதோடு உண்மையாயிருந்ததுபோல, இவன் முழுமனதோடு உண்மையாய் இருக்கவில்லை.
4 ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
அப்படியிருந்தும் தாவீதின் இறைவனாகிய யெகோவா அவன் நிமித்தம் எருசலேமைப் பலப்படுத்தி, தாவீதுக்குப் பின் அரசாளுவதற்கு ஒரு மகனை எழுப்பி, எருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கைக் கொடுத்தார்.
5 தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
ஏனெனில் தாவீது ஏத்தியனான உரியாவின் விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வைக்குச் சரியானவற்றைச் செய்து, தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் கட்டளைகளில் எதையும் செய்யத் தவறவில்லை.
6 ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
யெரொபெயாமுக்கும் ரெகொபெயாமுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம் அபியாவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
7 அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
அபியாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.
8 அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான்.
9 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
இஸ்ரயேல் அரசனான யெரொபெயாமின் இருபதாம் வருடத்தில் ஆசா யூதாவின் அரசனானான்.
10 ௧0 41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
அவன் எருசலேமில் நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். அவனின் பாட்டி அப்சலோமின் மகளான மாக்காள் என்பவள்.
11 ௧௧ ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
ஆசா தன் முற்பிதாவாகிய தாவீதைப் போல யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்தான்.
12 ௧௨ அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
அவன், வழிபாட்டிடத்தில் வேசித்தனத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து வெளியேற்றி, தன் முற்பிதாக்கள் செய்துவைத்திருந்த எல்லா விக்கிரகங்களையும் அகற்றிவிட்டான்.
13 ௧௩ தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.
மேலும் அவன் தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரசி என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான்.
14 ௧௪ மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது.
அவன் வழிபாட்டு மேடைகளை அகற்றாமலிருந்த போதிலும்கூட ஆசா தன் வாழ்நாள் எல்லாம் தன் இருதயத்தை யெகோவாவுக்கே ஒப்புவித்திருந்தான்.
15 ௧௫ தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.
அவன் தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான்.
16 ௧௬ ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்தது.
17 ௧௭ ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான்.
18 ௧௮ அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:
பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.
19 ௧௯ எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.
மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான்.
20 ௨0 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான்.
பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவன் ஈயோன், தாண், ஆபேல் பெத்மாக்கா மற்றும் கின்னரோத்தின் எல்லாப் பகுதிகளையும், அத்துடன் நப்தலி நாட்டையும் பிடித்தான்.
21 ௨௧ பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.
பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, பின்வாங்கி திர்சாவுக்குப் போனான்.
22 ௨௨ அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
அப்பொழுது அரசன் ஆசா ஒருவனையும்விடாமல் யூதா நாடு முழுவதற்கும் ஒரு கட்டளை கொடுத்தான். அவர்கள் பாஷா அரசன் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அரசன் அவற்றைப் பயன்படுத்தி பென்யமீன் நாட்டில் கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான்.
23 ௨௩ ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.
ஆசாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், அவன் செய்தவைகள் அனைத்தும், அத்துடன் அவன் கட்டிய பட்டணங்கள் பற்றியும், யூதா அரசர்களது வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆயினும், அவனுடைய வயது முதிர்ந்த காலத்தில் அவன் கால்களில் வியாதி ஏற்பட்டது.
24 ௨௪ ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
பின்பு ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் முற்பிதாவாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான யோசபாத், அவனுடைய இடத்தில் அவனுக்குப்பின் அரசனானான்.
25 ௨௫ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான்.
யூதா அரசன் ஆசாவின் இரண்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரயேலுக்கு அரசனாகி, இஸ்ரயேலின்மேல் இரண்டு வருடம் ஆட்சிசெய்தான்.
26 ௨௬ அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
அவன் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய தன் தகப்பனுடைய வழிகளிலும், அவனுடைய பாவத்திலும் நடந்தான். இதனால் அவன் யெகோவாவினுடைய பார்வையில் தீமைசெய்தான்.
27 ௨௭ இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
நாதாபும், இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனை முற்றுகையிடுகையில், இசக்கார் குடும்பத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா, நாதாபிற்கு எதிராகச் சதிசெய்து, அங்கு அவனை வெட்டிக்கொன்றான்.
28 ௨௮ பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
யூதாவின் அரசனான ஆசாவின் மூன்றாம் வருடத்தில் பாஷா நாதாபைக் கொன்று, தானே அவனுக்குப்பின் அவன் இடத்தில் அரசனானான்.
29 ௨௯ அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
அவன் அரசாளத் தொடங்கியதும் யெரொபெயாமின் முழுக் குடும்பத்தையும் கொன்றான். யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் கொன்றான்.
30 ௩0 அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
யெரொபெயாம் செய்த பாவங்களின் காரணமாகவும், அவன் இஸ்ரயேல் மக்களைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபம்மூட்டினதாலுமே இவ்வாறு நடந்தது.
31 ௩௧ நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
நாதாபின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
32 ௩௨ ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருந்தது.
33 ௩௩ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு,
யூதா அரசனான ஆசா அரசாண்ட மூன்றாம் வருடத்தில், அகியாவின் மகன் பாஷா இஸ்ரயேல் முழுவதற்கும் திர்சாவில் அரசனானான். அவன் இருபத்தி நான்கு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
34 ௩௪ யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
அவன் இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின யெரொபெயாமின் வழிகளிலும், அவனுடைய பாவங்களிலும் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான்.

< 1 இராஜாக்கள் 15 >