< சகரியா 11 >
1 லெபனோனே, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கும்படி உன் கதவுகளைத் திற.
௧லீபனோனே, நெருப்பு உன் கேதுருமரங்களை அழிக்க உன் வாசல்களைத் திற.
2 தேவதாரு மரங்களே, புலம்பி அழுங்கள். கேதுரு மரங்கள் வீழ்ந்தன; சிறந்த மரங்கள் அழிக்கப்பட்டன. பாசானின் கர்வாலி மரங்களே, புலம்பியழுங்கள். ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
௨தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது.
3 மேய்ப்பரின் புலம்பலைக் கேளுங்கள். அவர்களின் செழிப்பான பசும்புல் தரை அழிக்கப்பட்டது; சிங்கங்களின் கர்ச்சனையைக் கேளுங்கள். யோர்தானின் அடர்ந்த புதர் அழிந்திருக்கிறது.
௩மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனதினால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனதினால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கிறது.
4 என் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “வெட்டுவதற்குக் குறிக்கப்பட்டிருக்கும் மந்தையை மேய்ப்பாயாக.
௪என் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், கொலைசெய்யப்படுகிற ஆடுகளை மேய்க்கவேண்டும்.
5 அவைகளை வாங்குகிறவர்களோ அவைகளைக் கொலைசெய்கிறார்கள். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள்கிறார்கள். அவைகளை விற்கிறவர்களோ, ‘யெகோவாவுக்குத் துதி; நான் செல்வந்தன்’ என்று சொல்கிறார்கள். அவைகளின் சொந்த மேய்ப்பர்களோ, அவைகளைக் காத்துக்கொள்ளவில்லையே.
௫அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று நினைக்கிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் ஆனோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை.
6 அதுபோல இந்நாட்டு மக்கள்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கங்காட்டமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் ஒவ்வொருவனையும், அவன் அயலானின் கைகளிலும் அரசனின் கைகளிலும், நான் ஒப்படைப்பேன். அவர்கள் நாட்டை ஒடுக்குவார்கள். நான் அவர்களின் கைகளிலிருந்து இவர்களைத் தப்புவிக்க மாட்டேன்.”
௬நான் இனி தேசத்து மக்கள்மேல் இரக்கம் வைக்காமல் மனிதர்களில் அனைவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கைகளிலும் அகப்படச்செய்வேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.
7 எனவே வெட்டப்படுவதற்கென குறிக்கப்பட்ட மந்தையை நான் மேய்த்தேன். முக்கியமாக மந்தையில் ஒடுக்கப்பட்டதை நான் பராமரித்தேன். அப்பொழுது மேய்ப்பனின் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிக்கு தயவு என்றும், மற்றொன்றிற்கு ஐக்கியம் என்றும் பெயரிட்டேன். நான் மந்தைகளை அவற்றால் மேய்த்தேன்.
௭கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து,
8 ஒரே மாதத்தில் மூன்று பயனற்ற மேய்ப்பர்களை அகற்றினேன். ஆனால் அந்த மந்தையும் என்னை அருவருத்தது. நானும் அவற்றைக்குறித்து சலிப்படைந்தேன்.
௮ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
9 நான் அவர்களிடம், “நான் உங்கள் மேய்ப்பனாயிருக்க மாட்டேன். சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும். மீதியாயிருப்பவை ஒன்றின் மாமிசத்தை மற்றொன்று தின்னட்டும் என்றேன்.”
௯இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று சாப்பிடவேண்டும் என்று நான் சொல்லி,
10 அப்பொழுது நான் தயவு என்கிற என் கோலை எடுத்து முறித்துப் போட்டேன், அதனால் இறைவன் எல்லா நாடுகளுடனும் செய்துகொண்ட உடன்படிக்கையை இல்லாமல் செய்துவிட்டார் என்பது தெரிந்தது.
௧0அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த மக்கள் அனைவருடனும் செய்திருந்த என் உடன்படிக்கை முறிந்துபோகும்படி அதை அழித்துப்போட்டேன்.
11 அந்த நாளிலே அது தள்ளுபடியாயிற்று, எனவே என்னைக் கவனித்துக் கொண்டிருந்த மந்தையில் பாதிக்கப்பட்டவர்கள், இது யெகோவாவின் வார்த்தை என்பதை அறிந்துகொண்டார்கள்.
௧௧அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.
12 அப்பொழுது நான் அவர்களிடம், “அது நல்லது என நீங்கள் கருதினால் எனது கூலியைக் கொடுங்கள்; இல்லையெனில், வைத்திருங்கள் என்றேன்.” அப்பொழுது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தார்கள்.
௧௨உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள்.
13 அதன்பின் யெகோவா என்னிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு” இதுவே எனக்கென அவர்கள் மதிப்பிட்ட மேன்மையான விலை! என்று சொன்னார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த குயவனிடத்தில் எறிந்துவிட்டேன்.
௧௩யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
14 பின்பு நான் ஐக்கியம் என்னும் எனது இரண்டாவது கோலையும் முறித்துப் போட்டேன். அப்படியே யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தையும் குலைத்துவிட்டேன்.
௧௪நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன்.
15 அதன்பின் யெகோவா எனக்குக் கூறியது இதுவே, “மறுபடியும் நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுக்குரிய கருவிகளை எடுத்துக்கொள்.
௧௫யெகோவா என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
16 ஏனெனில் இதோ பார்! நான் இந்த நாட்டின்மேல் ஒரு மேய்ப்பனை எழும்பப் பண்ணுவேன். அவன் காணாமல் போவதைக் கவனிக்கவோ, குட்டிகளைத் தேடவோ, காயமுற்றதைக் குணமாக்கவோ, நலமானவற்றிற்கு உணவளித்துப் பராமரிக்கவோமாட்டான். ஆனால் கொழுத்த ஆடுகளின் குளம்புகளைக் கிழித்து அதன் இறைச்சியைத் தின்பான்.
௧௬இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான்.
17 “மந்தையைக் கைவிடுகிற பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ கேடு, அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும். அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும். அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!”
௧௭மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.