< சங்கீதம் 99 >

1 யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும். 2 சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். 3 பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர். 4 அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; நீர் யாக்கோபில் நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர். 5 நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; அவர் பரிசுத்தமானவர். 6 அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்குப் பதிலளித்தார். 7 அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர் அவர்களுக்குக் கொடுத்த அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள். 8 எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர். 9 நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.

< சங்கீதம் 99 >