< சங்கீதம் 95 >
1 வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.
௧யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.
2 நன்றியுடன் அவர்முன் வருவோம்; இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
௨துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.
3 யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார்.
௩யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; மலை உச்சிகளும் அவருக்கே உரியவை.
௪பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
௫கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
6 வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; நாம் முழங்காலிடுவோம்.
௬நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
7 அவரே நம் இறைவன்; நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும் அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம். இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,
௭அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் மக்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8 “அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
௮இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.
9 அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்; நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள்.
௯அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.
10 நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; ‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன்.
௧0நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11 எனவே கோபங்கொண்டு, ‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று, ஆணையிட்டு அறிவித்தேன்.”
௧௧என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.