< சங்கீதம் 91 >

1 மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான். 2 நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன். 3 நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார். 4 யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்; அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும். 5 நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய். 6 இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய். 7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், அது உன்னை நெருங்காது. 8 உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய். 9 “யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால், 10 அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது. 11 அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உன்னைக்குறித்து தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்; 12 உன் பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள். 13 நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்; இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய். 14 யெகோவா இப்படியாக சொல்கிறார்: “அவன் என்னை நேசிக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்; அவன் என் பெயரை அறிந்திருக்கிறபடியால், நான் அவனைப் பாதுகாப்பேன். 15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்; துன்பத்தில் நான் அவனோடிருந்து, அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.”

< சங்கீதம் 91 >