< சங்கீதம் 3 >

1 தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம். யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். 2 அநேகர் என்னைக்குறித்து, “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள். 3 ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். 4 நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார். 5 நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். 6 எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன். 7 யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும். 8 யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

< சங்கீதம் 3 >