< சங்கீதம் 127 >

1 சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல். யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.
சாலொமோனின் ஆரோகண பாடல். யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.
நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
4 ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.
இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
5 இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.
அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.

< சங்கீதம் 127 >