< சங்கீதம் 122 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.
௧தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
2 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன.
௨எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.
௩எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.
௪அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
௫அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.
௬எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
7 உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”
௭உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.
௮என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன்.
௯எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.