< சங்கீதம் 12 >
1 செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.
௧செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
2 ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.
௨அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
3 முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.
௩வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
4 “எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
௪அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
5 “ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதினால் நான் இப்பொழுது எழுந்து, அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
௫ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. அவை களிமண் உலையில் ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.
௬யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன.
7 யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.
௭யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, எங்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
8 இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.
௮மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.