< சங்கீதம் 104 >
1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.
௧என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2 யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.
௨ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; அவர் மேகங்களைத் தமது தேராக்கி, காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார்.
௩தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
4 அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.
௪தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
5 அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; அது ஒருபோதும் அசைக்கப்படாது.
௫பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
6 உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.
௬அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7 ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது.
௭அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
8 அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.
௮அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9 அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.
௯அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10 அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.
௧0அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11 அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.
௧௧அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12 ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன.
௧௨அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
13 அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது.
௧௩தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:
௧௪பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.
௧௫மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
16 யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.
௧௬யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.
௧௭அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.
௧௮உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
19 காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும்.
௧௯சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
20 நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன.
௨0நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
21 சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன.
௨௧இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
22 சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.
௨௨சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
23 அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.
௨௩அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
24 யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.
௨௪யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
25 அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.
௨௫பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
26 அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.
௨௬அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27 நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன.
௨௭ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28 நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, அவை சேகரித்துக்கொள்கின்றன; நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.
௨௮நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29 நீர் உமது முகத்தை மறைக்கும்போது, அவை திகைக்கின்றன; நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.
௨௯நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
30 நீர் உமது ஆவியை அனுப்புகையில், அவை படைக்கப்படுகின்றன; நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.
௩0நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக.
௩௧யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
32 அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.
௩௨அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
33 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
௩௩நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
34 நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.
௩௪நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
35 ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. அல்லேலூயா.
௩௫பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, அல்லேலூயா.