< லேவியராகமம் 25 >

1 யெகோவா சீனாய் மலையில் மோசேயுடன் பேசினார்,
யெகோவா சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
2 “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அந்த நாடும் யெகோவாவுக்காக ஓய்வை கடைபிடிக்க வேண்டும்.
“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, தேசம் யெகோவாவுக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
3 ஆறு வருடங்கள் உங்கள் வயல்களை விதைத்து, ஆறு வருடங்கள் திராட்சைத் தோட்டத்தின் கொடிகளின் கிளைகளைத்தரித்து சுத்தம்செய்து, அவற்றின் பலனை அறுவடை செய்யுங்கள்.
ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
4 ஆனால் ஏழாம் வருடத்தில், நிலம் ஓய்வு பெறவேண்டும். அது யெகோவாவுக்கான ஓய்வு. அந்த வருடத்தில் நீங்கள் வயலை விதைக்கவும், திராட்சைத்தோட்டத்து கிளைகளைத் தரிக்கவும் வேண்டாம்.
ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும்,
5 தானாய் முளைத்து விளையும் பயிரை, அறுவடை செய்யவும் வேண்டாம். பராமரிக்கப்படாத திராட்சைக் கொடியிலிருந்து பழங்களைப் பறிக்கவும் வேண்டாம். நிலத்திற்கு ஓய்வு வருடம் இருக்கவேண்டும்.
தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக.
6 நாட்டின் ஓய்வு வருடத்தில் விளைகிறது உனக்கு உணவாகும். அது உனக்கும், உன் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலியாளுக்கும், உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளனுக்கும் உணவாகும்,
தேசத்தின் ஓய்விலே விளைகிறது உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; உன்னுடைய வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,
7 உன் வீட்டு மிருகங்களுக்கும், வயல்களிலுள்ள மிருகங்களுக்கும் அது உணவாயிருக்கும். நிலத்தின் விளைச்சல் எதையும் சாப்பிடலாம்.
உன் நாட்டு மிருகத்திற்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்திற்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாக இருப்பதாக.
8 “‘ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள். ஏழுமுறை ஏழு வருடங்களாக நாற்பத்தொன்பது வருடங்கள் வரும்வரை ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள்.
“மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு ஏழு வருடங்களைக் கணக்கிடுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது வருடங்களாகும்.
9 பின்பு ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, நாடெங்கிலும் எக்காளம் ஊதுங்கள். பாவநிவிர்த்தி நாளிலே, எக்காளத்தை நாடெங்கும் ஊதுங்கள்.
அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்.
10 ஐம்பதாம் வருடத்தை அர்ப்பணம் செய்து, நாட்டு மக்கள் அனைவருக்கும், விடுதலையைப் பிரசித்தப்படுத்துங்கள். அது உங்களுக்கான யூபிலி வருடமாயிருக்கும். உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் குடும்பச் சொத்து உரிமைக்கும், தன்தன் கோத்திரத்திற்கும் திரும்பிச் செல்லவேண்டும்.
௧0“50 வது வருடத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன்.
11 ஐம்பதாம் வருடம் உங்களுக்கு ஒரு யூபிலி வருடம். நீங்கள் விதைக்கவோ, தானாய் விளைந்த தானியத்தையாகிலும் திராட்சைப் பழங்களையாகிலும் அறுவடை செய்யவோ வேண்டாம்.
௧௧அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
12 ஏனெனில் அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அந்த வருடம் வயல்களில் தானாய் விளைந்தவற்றை மட்டுமே சாப்பிடுங்கள்.
௧௨அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும்.
13 “‘இந்த யூபிலி வருடத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முற்பிதாக்களின் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.
௧௩“அந்த யூபிலி வருடத்தில் உங்களில் அவனவன் தன்தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போகக்கடவன்.
14 “‘நீங்கள் உங்கள் நாட்டவனுக்கு ஒரு நிலத்தை விற்றாலோ அல்லது அவனிடமிருந்து வாங்கினாலோ ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
௧௪ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது விலைகொடுத்து வாங்கினாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
15 நீங்கள் உங்கள் நாட்டினரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, சென்ற யூபிலி வருடத்திலிருந்து கழிந்த வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாங்கவேண்டும். அவன் உங்களுக்கு விற்கும்போது விளைச்சலை அறுவடை செய்யவேண்டிய வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதை விற்கவேண்டும்.
௧௫யூபிலி வருடத்திற்குப் பின்வரும் வருடங்களின் எண்ணிக்கைக்கேற்ப பிறனிடத்தில் வாங்குவாயாக; பலனுள்ள வருடங்களின் தொகைக்கேற்ப அவன் உனக்கு விற்பானாக.
16 அறுவடை வருடங்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் விலையையும் அதிகரிக்கவேண்டும். வருடங்கள் குறைவாக இருந்தால் விலையையும் குறைக்கவேண்டும். ஏனெனில், அவன் உங்களுக்கு உண்மையாக விற்பது அறுவடையின் எண்ணிக்கையின் மதிப்பையே.
௧௬பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால், வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால் விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.
17 ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
௧௭உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
18 “‘நீங்கள் என்னுடைய விதிமுறைகளைப் பின்பற்றி, என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
௧௮“என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள்.
19 அப்பொழுது நாடு தன் பலனைக் கொடுக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
௧௯பூமி தன் பலனைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
20 நீங்கள் ஏழாம் வருடத்தில் விதையாமலும், அறுவடை செய்யாமலும் இருந்து, எதைச் சாப்பிடுவோம் என்று கேட்பீர்களானால்,
௨0ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
21 ஆறாம் வருடத்தில் நான் உங்களுக்கு அதிக விளைச்சலுள்ள ஆசீர்வாதத்தை அனுப்புவேன். அவ்வருடத்தில் மூன்று வருடங்களுக்கு போதுமான பலனை அந்நிலம் தரும்.
௨௧நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்; அது உங்களுக்கு மூன்று வருடங்களின் பலனைத் தரும்.
22 நீங்கள் எட்டாம் வருடத்தில் விதைக்கும் காலத்தில் பழைய விளைச்சலிலிருந்து சாப்பிடுவீர்கள். ஒன்பதாம் வருடத்தில் அறுவடை செய்யும்வரை நீங்கள் அதில் தொடர்ந்து சாப்பிடுவீர்கள்.
௨௨நீங்கள் எட்டாம் வருடத்திலே விதைத்து, ஒன்பதாம் வருடம்வரை பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரை பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
23 “‘நிலம் நிரந்தரமாய் விற்கப்படக்கூடாது. நிலம் என்னுடையது. நீங்களோ, பிறநாட்டினரும் குத்தகைக்காரருமாக இருக்கிறீர்கள்.
௨௩“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள்.
24 நீங்கள் சொத்துரிமையாகக் கொண்டிருக்கும் நாடெங்கும் அந்த நிலங்களை மீட்டுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும்.
௨௪உங்கள் சொந்தமான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
25 “‘உன் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி தன் சொத்து நிலத்தில் கொஞ்சத்தை விற்றால், அவனுடைய நெருங்கிய உறவினன் முன்வந்து, தன் நாட்டினன் விற்றுப்போட்டதை மீட்டுக்கொள்ள வேண்டும்.
௨௫“உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
26 ஆனாலும், ஒருவனுக்கு அவ்வாறு மீட்கக்கூடிய நெருங்கிய உறவினன் இல்லாமல் இருந்து, அவன் தானே செல்வந்தனாகி, அதை மீட்கத்தக்க வசதியைப் பெற்றிருந்தால்,
௨௬அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
27 அவன் விற்றதிலிருந்து கழிந்த வருடங்களுக்கான மதிப்பை நிர்ணயித்து, தான் ஏற்கெனவே விற்ற விலையிலிருந்து அதைக் கழித்து, மிகுதியை தன்னிடம் வாங்கியவனிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் சொத்து நிலத்திற்குத் திரும்பிப்போகலாம்.
௨௭அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன்.
28 ஆனால் தான் விற்றதைத் திருப்பிவாங்க வசதி இல்லாதுபோனால், யூபிலி வருடம் மட்டும் அது வாங்கியவனுக்கு உரிமையாயிருக்கும். ஆனால், யூபிலி வருடத்தில் அது விற்றவனுக்குத் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும்.
௨௮அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.
29 “‘ஒருவன் மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள ஒரு வீட்டை விற்றால், அதை விற்றபின் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் அதை மீட்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தக் காலத்திற்குள் அவன் அதை மீட்கலாம்.
௨௯“ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
30 ஒரு வருடம் நிறைவடையுமுன் அவன் அதைத் திருப்பி மீட்காவிட்டால், மதில் சூழ்ந்த பட்டணத்தில் இருக்கும் அவ்வீடு வாங்கியவனுக்கும், அவன் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர உரிமையாகும். அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியதில்லை.
௩0ஒரு வருடத்திற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருடத்திலும் அது விடுதலையாகாது.
31 ஆனால் மதில் சூழப்படாத கிராமப் பகுதிகளிலுள்ள வீடுகள், நாட்டின் நிலங்களைப்போல் கருதப்படும். அவை மீட்கப்படலாம். யூபிலி வருடத்தில் அவை திருப்பி கொடுக்கப்படவேண்டும்.
௩௧மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும்.
32 “‘ஆனால் லேவியர்களோ, லேவியருடைய நகரங்களிலிருக்கிற தங்களுடைய வீடுகளை மீட்க எப்பொழுதும் உரிமையுடையவர்களாய் இருக்கிறார்கள். அவை அவர்களுடைய உரிமைச்சொத்துக்கள்.
௩௨லேவியர்களின் சொந்த இடமாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர்கள் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
33 எனவே லேவியருடைய சொத்து மீட்கக்கூடியது. அதாவது அவர்களுக்குரிய எந்தப் பட்டணத்திலாவது ஒரு வீடு விற்கப்பட்டால், அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இஸ்ரயேலர் மத்தியில் லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் மட்டுமே அவர்களுடைய சொத்தாகும்.
௩௩இஸ்ரவேல் மக்களுக்குள்ளே லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய சொந்தமாக இருப்பதால், லேவியர்களிடத்தில் அவனுடைய சொந்தமான பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு, யூபிலி வருடத்தில் விடுதலையாகும்.
34 ஆனால் அவர்களுடைய பட்டணங்களுக்குரிய மேய்ச்சல் நிலமோ, விற்கப்படக்கூடாது. ஏனெனில், அவை அவர்களின் நிரந்தர சொத்துரிமை.
௩௪அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படக்கூடாது; அது அவர்களுக்கு நிரந்தர சொந்தமாக இருக்கும்.
35 “‘உங்கள் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி, தன்னைத்தானே பராமரிக்க இயலாத வேளையில், ஒரு பிறநாட்டினனுக்கோ, தற்காலிக குடியிருப்பாளனுக்கோ உதவுவதுபோல் நீங்கள் அவனுக்கு உதவிசெய்யுங்கள். அவ்வாறு உங்கள் மத்தியில் அவன் தொடர்ந்து வாழலாம்.
௩௫“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
36 அவனிடம் எவ்வித வட்டியையும் வாங்கவேண்டாம். ஆனால் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். இப்படியாக உங்கள் நாட்டினன் உங்கள் மத்தியில் தொடர்ந்து வாழலாம்.
௩௬நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக.
37 நீங்கள் அவனுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கக்கூடாது. இலாபத்திற்கு அவனுக்கு உணவும் விற்கக்கூடாது.
௩௭அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தை லாபத்திற்கும் கொடுக்காதே.
38 உங்களுக்குக் கானான் நாட்டைக் கொடுக்கவும், உங்கள் இறைவனாயிருக்கவும் உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
௩௮உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாக இருப்பதற்கு, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.
39 “‘உங்கள் நாட்டவரில் ஒருவன் உங்களுக்குள் ஏழையாகி தன்னை விற்றால், அவனை அடிமையாக வேலைசெய்ய வைக்கவேண்டாம்.
௩௯“உன் சகோதரன் ஏழ்மையடைந்து, உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல வேலைசெய்ய நெருக்கவேண்டாம்.
40 அவன் ஒரு கூலிக்காரனைப் போலவும், உங்களிடம் வந்த தற்காலிக குடியிருப்பாளனைப் போலவும் நடத்தப்படவேண்டும். யூபிலி வருடம்வரை அவன் உங்களுக்குப் பணிசெய்ய வேண்டும்.
௪0அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன் இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்.
41 அதன்பின் அவனும் அவன் பிள்ளைகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவன் தன் சொந்தக் கோத்திரத்திற்கும் முற்பிதாக்களின் சொத்து நிலத்திற்கும் திரும்பிப் போகவேண்டும்.
௪௧பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னைவிட்டு விலகி, தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும் திரும்பிப்போகக்கடவன்.
42 எகிப்து நாட்டிலிருந்து நான் வெளியே கொண்டுவந்த இஸ்ரயேலர் என் பணியாட்களாய் இருப்பதால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது.
௪௨அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என்னுடைய வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது.
43 அவர்களை நீங்கள் கொடூரமாய் ஆளுகை செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள்.
௪௩நீ அவனைக் கடினமாக நடத்தாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.
44 “‘உங்களைச் சுற்றியிருக்கிற நாடுகளிடமிருந்தே உங்களுக்கு ஆண் அடிமைகளும், பெண் அடிமைகளும் வரவேண்டும். அவர்களிடமிருந்தே நீங்கள் அடிமைகளை வாங்கலாம்.
௪௪உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற அந்நியமக்களாக இருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
45 உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களில் சிலரை அடிமைகளாக வாங்கலாம். உங்கள் நாட்டில் பிறந்த அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களையும் வாங்கலாம். அவர்கள் உங்கள் சொத்துக்களாவார்கள்.
௪௫உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம்.
46 நீங்கள் அவர்களை உங்கள் பிள்ளைகளுக்கு உரிமைச்சொத்தாக எழுதிக்கொடுத்து, அவர்களை ஆயுட்கால அடிமைகளாக்கலாம். ஆனால் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேலரைக் கொடூரமாய் ஆளுகை செய்யக்கூடாது.
௪௬அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சொந்தமாக்கும்படி நீங்கள் அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்கலாம்; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களோ ஒருவரையொருவர் கடினமாக நடத்தக்கூடாது.
47 “‘உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ அல்லது தற்காலிக குடியிருப்பாளனோ செல்வந்தனாயிருக்கையில் உங்கள் நாட்டவரில் ஒருவன் ஏழையாகி, அந்த பிறநாட்டினனுக்கோ அல்லது பிற நாட்டு வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினருக்கோ தன்னை விற்றால்,
௪௭“உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வந்தனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விற்கப்பட்டுப்போனால்,
48 தன்னை விற்றுவிட்ட பின்பும் தன்னை மீட்டுக்கொள்ளும் உரிமையுடையவனாய் இருக்கிறான். அவனுடைய உறவினருக்குள் ஒருவன் அவனை மீட்கலாம்:
௪௮அவன் விற்கப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவனுடைய சகோதரர்களில் ஒருவன் அவனை மீட்கலாம்.
49 அவனுடைய சிறிய தகப்பனோ அல்லது சிறிய தகப்பனுடைய மகனோ அல்லது அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த இரத்த உறவினனோ அவனை மீட்டுக்கொள்ளலாம். அல்லது அவன் செழிப்படையும்போது தன்னைத்தானே மீட்டுக்கொள்ளவும் முடியும்.
௪௯அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
50 அவனும், அவனை வாங்கியவனும் அவன் தன்னை விற்ற வருடத்திலிருந்து யூபிலி வருடம் வரையுள்ள காலத்தைக் கணக்கிடவேண்டும். ஒரு கூலியாளுக்குச் செலுத்தப்படுகின்ற கூலி அளவை அடிப்படையாகக்கொண்டு அவனுக்குரிய விடுதலைக்கான விலை அமையவேண்டும்.
௫0அவன் தான் விற்கப்பட்ட வருடம் துவங்கி, யூபிலி வருடம்வரைக்கும் உள்ள காலத்தைத் தன்னை விலைக்கு வாங்கியவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருடத்தொகைக்கு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
51 இன்னும் அநேக வருடங்கள் இருக்குமானால், தனக்காகச் செலுத்தப்பட்ட விலைமதிப்பின் ஒரு பெரிய பங்கை அவன் தன்னுடைய மீட்புக்காகச் செலுத்தவேண்டும்.
௫௧இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.
52 யூபிலி வருடத்திற்கு இன்னும் சில வருடங்கள் மட்டுமே இருக்குமானால், அவன் அதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப தன் மீட்புக்கான பணத்தைக் கொடுக்கலாம்.
௫௨யூபிலி வருடம்வரை மீதியாக இருக்கிற வருடங்கள் கொஞ்சமாக இருந்தால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருடங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
53 அவன் வருடத்திற்கு வருடம் கூலிக்கு அமர்த்தப்பட்டவன்போல் நடத்தப்படவேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாய் நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.
௫௩இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது.
54 “‘இவ்விதமாக, எந்த வழிகளிலாவது அவன் மீட்கப்படாவிட்டாலும், அவனும் அவனுடைய பிள்ளைகளும், யூபிலி வருடத்தில் விடுதலையாக்கப்பட வேண்டும்.
௫௪இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள்.
55 ஏனெனில், இஸ்ரயேலர் என் பணியாட்களாக எனக்கு சொந்தமாயிருக்கிறார்கள். அவர்கள் நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த பணியாட்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
௫௫இஸ்ரவேல் மக்கள் என் ஊழியக்காரர்கள்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என் ஊழியக்காரர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

< லேவியராகமம் 25 >