< நியாயாதிபதிகள் 6 >

1 இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தார்கள். அவர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
2 மீதியானியரின் வலிமையினால் இஸ்ரயேலுக்கெதிரான ஒடுக்குதல் மிகுதியாய் இருந்தது. அதனால் இஸ்ரயேலர் மலைகளின் வெடிப்புகளிலும், குகைகளிலும், அரண்களிலும் தங்களுக்கென கோட்டைகளை அமைத்துக்கொண்டனர்.
மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
3 இஸ்ரயேலர் பயிரிடும் போதெல்லாம் மீதியானியரும், அமலேக்கியரும் மற்றும் கிழக்குத்திசை இனமக்கள் எல்லோரும் நாட்டிற்குள் படையெடுத்தார்கள்.
இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து;
4 அங்கே அவர்கள் முகாமிட்டு பயிர்களை காசாவரை அழித்தனர். இஸ்ரயேலருக்கோ செம்மறியாடுகள், கால்நடைகள், கழுதைகள் உட்பட உயிர்வாழும் எவற்றையும் விட்டுவைக்கவில்லை.
அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள்.
5 தங்களிடமுள்ள வளர்ப்பு மிருகங்களோடும், கூடாரங்களோடும், வெட்டுக்கிளி கூட்டங்கள்போல் வந்தார்கள். அந்த மனிதர்களையும், ஒட்டகங்களையும் எண்ண முடியாதிருந்தது. அவர்கள் நாட்டை சூறையாடி அழிக்கும்படி அதன்மேல் படையெடுத்தார்கள்.
அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.
6 இவ்வாறு மீதியானியர் இஸ்ரயேலரை மிகவும் ஏழ்மையாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலர் தங்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டு யெகோவாவிடம் அழுதார்கள்.
இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.
7 மீதியானியரின் கொடுமையால் இஸ்ரயேலர் யெகோவாவிடம் அழுதபோது,
இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே யெகோவாவை நோக்கி முறையிட்டபோது,
8 அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.
யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,
9 அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன்.
எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
10 நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான்.
௧0நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.
11 அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான்.
௧௧அதற்குப்பின்பு யெகோவாவுடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான்.
12 அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார்.
௧௨யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார்.
13 அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான்.
௧௩அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.
14 யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார்.
௧௪அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
15 அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான்.
௧௫அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான்.
16 அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார்.
௧௬அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.
17 அதற்கு கிதியோன், “இப்பொழுது உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடம் பேசுபவர் உண்மையாகவே நீர் என்றால் அதற்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்.
௧௭அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும்.
18 நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்கும்வரையும், தயவுசெய்து இவ்விடம் விட்டு நீர் போகவேண்டாம்” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீ திரும்பி வரும்வரையும் நான் காத்திருப்பேன்” என்றார்.
௧௮நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.
19 உடனே கிதியோன் போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை பிடித்து சமைத்து, ஒரு எப்பா அளவு மாவில் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டான். இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு பானையிலும் ஊற்றி கர்வாலி மரத்தடியில் இருந்தவரிடம் கொண்டுவந்து கொடுத்தான்.
௧௯உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான்.
20 யெகோவாவின் தூதனானவர் அவனிடம், “இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் எடுத்து இந்த கற்பாறையின்மேல் வைத்து குழம்பை அதன்மேல் ஊற்று” என்றார். கிதியோனும் அப்படியே செய்தான்.
௨0அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.
21 யெகோவாவின் தூதனானவர் தன் கையிலிருந்த கோலின் நுனியால் இறைச்சியையும், அப்பத்தையும் தொட்டார். அப்பொழுது கற்பாறையிலிருந்து நெருப்பு திடீரென எழுந்து இறைச்சியையும், அப்பத்தையும் சுட்டெரித்தது. யெகோவாவின் தூதனானவரும் மறைந்தார்.
௨௧அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார்.
22 கிதியோன் தான் கண்டது யெகோவாவின் தூதனானவர் என அறிந்தான்; அப்போது அவன் சத்தமிட்டு, “யெகோவாவாகிய ஆண்டவரே! யெகோவாவின் தூதனானவரை நான் முகமுகமாய்க் கண்டேனே!” என்று வியப்புடன் கூறினான்.
௨௨அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான்.
23 ஆனால் யெகோவா அவனிடம், “சமாதானமாய் இரு; பயப்படாதே! நீ சாகமாட்டாய்” என்றார்.
௨௩அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
24 எனவே கிதியோன் அந்த இடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவ்விடத்திற்கு யெகோவா ஷாலோம் யெகோவாவே சமாதானம் என்று பெயரிட்டான். அவ்விடம் இந்நாள்வரை அபியேஸ்ரியரின் ஒப்ராவில் இருக்கிறது.
௨௪அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
25 அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு.
௨௫அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.
26 அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார்.
௨௬இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் யெகோவாவுடைய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார்.
27 எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான்.
௨௭அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
28 அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
௨௮அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து;
29 அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர். பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
௨௯ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
30 உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள்.
௩0அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
31 ஆனால் யோவாஸ் தன்னைச் சுற்றிலும் எதிர்த்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் பாகாலுக்காக பரிந்து பேசப்போகிறீர்களோ? அல்லது நீங்கள் பாகாலைக் காப்பாற்றப் போகிறீர்களோ? பாகாலுக்காகச் சண்டையிடுபவன் காலையிலேயே கொல்லப்படவேண்டும். பாகால் உண்மையான தெய்வமானால் தனது பலிபீடத்தை உடைக்கும்போதே தன்னைப் பாதுகாத்திருக்கலாமே?” என்று சொன்னான்.
௩௧யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான்.
32 அந்த நாளில் அவர்கள் கிதியோனை, “யெருபாகால்” என அழைத்தார்கள். பாகால் பலிபீடத்தை கிதியோன் உடைத்ததால், “பாகாலே அவனுடன் வாதாடட்டும்” என்று சொல்லி இப்படிப் பெயரிட்டார்கள்.
௩௨தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது.
33 சிறிது காலத்தின்பின், மீதியானியர் எல்லோரும், அமலேக்கியரும், கிழக்கு நாட்டு மக்களும் இஸ்ரயேலரை எதிர்த்து ஒன்றுகூடினர். அவர்கள் யோர்தானைக் கடந்துசென்று யெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தார்கள்.
௩௩மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள்.
34 அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் கிதியோன்மேல் வந்தார். எனவே அவன் எக்காளம் ஊதி அபியேசரியரைத் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தான்.
௩௪அப்பொழுது யெகோவாவுடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியர்களைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
35 பின்பு அவன் மனாசே நாடு முழுவதற்கும் தூதுவர்களை அனுப்பி அவர்களையும் ஆயுதம் தரிக்கும்படி அழைத்தான். அதோடு ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்களும் அவர்களைச் சந்திக்கப் போனார்கள்.
௩௫மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
36 அப்பொழுது கிதியோன் இறைவனிடம், “நீர் வாக்குக் கொடுத்தபடி இஸ்ரயேலை எனது கைகளினால் மீட்பது உண்மையானால்,
௩௬அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால்,
37 நான் கம்பளியை களத்தில் போடுவேன்; பனி, கம்பளியில் மட்டும் பெய்து எல்லா நிலமும் காய்ந்து காணப்பட்டால், நீர் சொன்னபடி இஸ்ரயேலை என் கையினால் மீட்பீர் என்பதை அறிந்துகொள்வேன்” என்றான்.
௩௭இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
38 கிதியோன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அது அப்படியே நடந்திருந்தது. உடனே அவன் கம்பளியைப் பிழிந்து ஒரு கிண்ணம் அளவு தண்ணீரை எடுத்தான்.
௩௮அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
39 பின்பும் கிதியோன் இறைவனிடம், “நீர் என்னோடு கோபங்கொள்ள வேண்டாம். நான் உம்மிடம் கேட்க இன்னும் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கம்பளியைக்கொண்டு இன்னும் ஒருமுறை சோதித்துப்பார்க்க இடங்கொடும். இம்முறை கம்பளி காய்ந்திருக்கவும் நிலமெல்லாம் பனியால் நனைந்திருக்கவும் செய்யும்” என்றான்.
௩௯அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
40 அந்த இரவும் இறைவன் அவ்வாறே செய்தார். கம்பளி மாத்திரம் காய்ந்தும், நிலமெல்லாம் பனியால் நனைந்தும் இருந்தது.
௪0அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.

< நியாயாதிபதிகள் 6 >