< யோசுவா 11 >
1 ஆத்சோர் அரசன் யாபீன் இந்த வெற்றிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அருகிலுள்ள பட்டணங்களின் அரசர்களுக்கு ஒரு அவசரசெய்தி அனுப்பினான். அவர்கள்: மாதோனின் அரசன் யோபாப், சிம்ரோனின் அரசன், அக்சாபின் அரசன்,
௧ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடமும், சிம்ரோனின் ராஜாவிடமும், அக்சாபின் ராஜாவிடமும்,
2 மலைகளிலும், கின்னரோத்திற்குத் தெற்கேயுள்ள அரபாவிலும், மேற்கே மலையடிவாரங்களிலும், மேற்கேயுள்ள நாபோத் தோரிலும் ஆட்சி செய்த வடதிசை அரசர்கள் ஆகியோரே;
௨வடக்கே இருக்கிற மலைகளிலும் கின்னரேத்திற்குத் தெற்கே இருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடமும்,
3 அத்துடன் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், மலைநாட்டிலுள்ள எபூசியர், மிஸ்பா என்னும் பகுதியில் எர்மோன் மலையடிவாரத்தில் வாழ்ந்த ஏவியர் ஆகியோரிடத்திற்கும் செய்தி அனுப்பினான்.
௩கிழக்கேயும், மேற்கேயும் இருக்கிற கானானியர்களிடமும், மலைகளில் இருக்கிற எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்களிடமும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா தேசத்தில் இருக்கிற ஏவியர்களிடமும் ஆள் அனுப்பினான்.
4 அவர்கள் தங்கள் எல்லாப் படைகளோடும், குதிரைகளோடும், இரதங்களோடும் புறப்பட்டுவந்து ஒன்றுகூடினர். இந்த பெரும்படை கடற்கரை மணலைப்போல எண்ணிக்கையில் அதிகமாயிருந்தது.
௪அவர்கள் கடற்கரை மணலைப்போல ஏராளமான மக்களாகிய தங்களுடைய எல்லா சேனைகளோடும், ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும் புறப்பட்டார்கள்.
5 இந்த அரசர்களெல்லோரும் இஸ்ரயேலருக்கு எதிராகப் போர் செய்ய ஒன்றுகூடி, மேரோம் என்னும் நீரூற்றருகே முகாமிட்டார்கள்.
௫இந்த ராஜாக்கள் எல்லோரும் கூடி, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்ய வந்து, மேரோம் என்கிற ஏரியின் அருகில் ஏகமாக முகாமிட்டார்கள்.
6 அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நாளை இந்நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் கொல்லப்பட்டவர்களாக இஸ்ரயேலரிடம் ஒப்படைப்பேன். நீ அவர்களுடைய குதிரைகளின் பின்கால் நரம்புகளை வெட்டி, அவர்களுடைய இரதங்களையும் எரித்துவிடவேண்டும்” என்றார்.
௬அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; நாளை இந்த நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டப்பட்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாய் என்றார்.
7 யோசுவாவும் அவனுடைய படையினர் அனைவரும், மேரோம் நீரூற்றருகே எதிரிகளை திடீரெனத் தாக்கினார்கள்.
௭யோசுவாவும், அவனோடு யுத்த மக்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியின் அருகே இருக்கிற எதிரிகளிடம் வந்து, அவர்களைத் தாக்கினார்கள்.
8 யெகோவா எதிரிகளை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்தார். இஸ்ரயேலர் அவர்களை முறியடித்து பெரிய சீதோன், மிஸ்ரபோத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பே பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்கள். அவர்களில் ஒருவரையும் தப்பவிடவில்லை.
௮யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்து, பெரிய சீதோன்வரைக்கும் மிஸ்ரபோத்மாயீம்வரைக்கும், கிழக்கே இருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குவரைக்கும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியில்லாதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
9 யெகோவா கட்டளையிட்டபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தான்: அவன் குதிரைகளின் பின்கால் தசை நரம்புகளை வெட்டி அவற்றை முடமாக்கி இரதங்களையும் எரித்தான்.
௯யோசுவா யெகோவா தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்.
10 அவ்வேளை யோசுவா திரும்பிவந்து, ஆத்சோர் நாட்டைக் கைப்பற்றி அதன் அரசனை வாளுக்கு இரையாக்கினான். ஆத்சோர் இந்த அரசுகளுக்கெல்லாம் தலைமைப் பட்டணமாய் இருந்தது.
௧0அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாக இருந்தது.
11 அங்குள்ள ஒவ்வொருவரும் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் சுவாசமுள்ள ஒன்றையும் தப்பவிடாமல், அவர்கள் எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள். யோசுவா முழு ஆத்சோரையுமே எரித்துப்போட்டான்.
௧௧அதில் இருந்த உயிரினங்களையெல்லாம் பட்டயத்தினால் வெட்டி, அழித்துப்போட்டான்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
12 யோசுவா அந்த அரசர்கள் வாழும் எல்லாப் பட்டணங்களையும் கைப்பற்றி, அவற்றின் அரசர்களை வாளுக்கு இரையாக்கினான். யெகோவாவின் அடியானாகிய மோசே கட்டளையிட்டபடி அவற்றையெல்லாம் யோசுவா முழுவதும் அழித்தான்.
௧௨அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயத்தினால் வெட்டி, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டான்.
13 ஆனாலும் இஸ்ரயேலர் யோசுவா எரித்துப்போட்ட ஆத்சோர் பட்டணத்தைத்தவிர, மேடுகளின்மேல் கட்டப்பட்ட எந்தப்பட்டணத்தையும் எரிக்கவில்லை.
௧௩ஆனாலும் தங்களுடைய மேட்டின்மேல் இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர்கள் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான்.
14 இந்த நகரங்களிலிருந்து கொள்ளைப்பொருட்களையும் மிருகங்களையும் இஸ்ரயேலர் தங்களுக்கெனக் கொண்டுசென்றார்கள். ஆனால் சுவாசமுள்ள ஒருவரையும் தப்பவிடாமல் அம்மக்கள் எல்லோரும் முற்றுமாக அழியும்வரை, அவர்களைத் தங்கள் வாள்களுக்கு இரையாக்கினார்கள்.
௧௪அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருட்களையும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனிதர்களையும் அழித்துப்போடும்வரைக்கும் அவர்களைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை.
15 யெகோவா தமது அடியவனாகிய மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான். யோசுவாவும் அதைச் செய்தான்.
௧௫யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை.
16 மோசேக்கு யெகோவா அளித்த கட்டளைகள் ஒன்றையேனும், யோசுவா நிறைவேற்றாமல் விடவில்லை. இப்படியாக யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றிக்கொண்டான். அவையாவன; மலைநாடு, நெகேப் முழுவதும், கோசேனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி, மேற்கு மலையடிவாரங்கள், அரபாவும் இஸ்ரயேலின் மலைகளும், அதன் அடிவாரங்களுமாகும்,
௧௬இந்த விதமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவங்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால்காத் வரையுள்ள அந்த முழு தேசமாகிய மலைகளையும், தென்தேசம் எல்லாவற்றையும், கோசேன் தேசத்தையும் சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
17 இவை சேயீர் நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலையிலிருந்து, எர்மோன் மலைக்குக் கீழே இருக்கும் லெபனோன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாகால்காத்வரை பரந்திருந்தது. யோசுவா இப்பிரதேசங்களை ஆண்ட அரசர்கள் அனைவரையும் சிறைப்பிடித்து, அவர்களை வெட்டிக்கொன்றான்.
௧௭அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
18 யோசுவா நீண்டகாலமாக அந்த அரசர்களுக்கெதிராகப் போர்தொடுத்திருந்தான்.
௧௮யோசுவா நீண்டநாட்களாக அந்த ராஜாக்கள் எல்லோரோடும் யுத்தம்செய்தான்.
19 கிபியோனில் வாழ்ந்த ஏவியரைத்தவிர, வேறெந்த நாட்டினரும் இஸ்ரயேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. இஸ்ரயேலர் அப்பட்டணங்களையெல்லாம் போர்புரிந்தே கைப்பற்றினார்கள்.
௧௯கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்து பிடித்தார்கள்.
20 யெகோவாவே இஸ்ரயேலருடன் போர்புரியும்படி அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை இரக்கமின்றி அழிக்கும்படிக்கே இப்படிச் செய்தார்.
௨0யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் யெகோவாவால் வந்த காரியமாக இருந்தது.
21 அக்காலத்தில் யோசுவா போய் மலைநாட்டிலிருந்த ஏனாக்கியரை அழித்தான்: அவர்கள் எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய பகுதிகளிலும், யூதா மலைநாடுகளிலும், இஸ்ரயேல் மலைநாடுகளிலும் வாழ்ந்துவந்தனர். யோசுவா அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முற்றிலும் அழித்தான்.
௨௧அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் எல்லா மலைகளிலும் இருந்த ஏனாக்கியர்களை அவர்களுடைய பட்டணங்களோடு சேர்த்து அழித்தான்.
22 இஸ்ரயேலர் வாழ்ந்த நாட்டின் எல்லைக்குள் ஒரு ஏனாக்கியருமே தப்பியிருக்கவில்லை. ஆயினும் காசா, காத், அஸ்தோத் ஆகிய பகுதிகளில் மட்டும் சிலர் வசித்தனர்.
௨௨இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள்.
23 இவ்வாறாக யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றி, இஸ்ரயேலருக்கு அவர்கள் கோத்திரப் பிரிவுகளின்படி அவற்றைச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான். அதன்பின் நாட்டில் போர் ஓய்ந்து அமைதி நிலவியது.
௨௩அப்படியே யோசுவா, யெகோவா மோசேயிடம் சொன்னபடியெல்லாம் முழு தேசத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்களின் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சொந்தமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.