< யோனா 2 >
1 யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.
௧அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
2 அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
௨என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol )
3 நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; உமது அலைகளும், அலையின் நுரைகளும் என்மேல் புரண்டன.
௩கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
4 ‘உமது முன்னிலையிலிருந்து நான் துரத்தப்பட்டேன். இருந்தாலும், நான் திரும்பவும் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன்.
௪நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
5 என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.
௫தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
6 மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
௬மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.
7 “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் நான் உம்மையே நினைத்தேன், என் மன்றாட்டு மேலெழுந்து உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.
௭என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
8 “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.
௮பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.
9 ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். ‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’” என்றான்.
௯நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான்.
10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.
௧0யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.