< எரேமியா 26 >

1 யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சியின் ஆரம்பத்தில், யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது:
யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் உண்டான வார்த்தை:
2 “யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று, யெகோவாவின் ஆலயத்தில் வழிபட வருகின்ற யூதா பட்டணத்து மக்கள் எல்லோருடனும் பேசு. நான் உனக்குச் சொல்லும்படி கட்டளையிட்டிருக்கிற எல்லா வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் சொல்.
நீ யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, யெகோவாவுடைய ஆலயத்தில் பணிந்துகொள்ள வருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிமக்கள் அனைவருடனும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று யெகோவா சொல்லுகிறார்.
3 ஒருவேளை அவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒவ்வொருவரும் தங்கள் தீமையான வழியைவிட்டுத் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் செய்திருக்கிற தீமையின் நிமித்தம் நான் திட்டமிட்ட பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவராமல் மனமிரங்குவேன்.
அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பிற்காக நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனவருத்தமடையும் விதத்தில் ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
4 நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நான் உங்கள்முன் வைத்த என் சட்டத்தின்படி நடக்கவேண்டும்.
நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கவும்,
5 நான் திரும்பத்திரும்ப உங்களிடத்தில் அனுப்பும் என் ஊழியரான இறைவாக்கினரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை.
நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நடப்பதற்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,
6 ஆகையால் நான் இந்த ஆலயத்தை சீலோவைப்போல் அழித்து, இந்தப் பட்டணத்தையும் பூமியிலுள்ள எல்லா நாடுகளின் மத்தியிலும் சாபத்திற்குள்ளாக்குவேன் என்று சொல்’ என்றார்.”
நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப் போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
7 ஆசாரியரும், இறைவாக்கினரும், எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியா கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள்.
எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் கேட்டார்கள்.
8 யெகோவா சொல்லும்படி தனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் எரேமியா எல்லா மக்களுக்கும் சொன்னான். சொன்னவுடனேயே ஆசாரியரும், இறைவாக்கினரும் எல்லா மக்களும் அவனைப் பிடித்து, “நீ சாகவேண்டும்.
எல்லா மக்களுக்கும் சொல்லக் யெகோவா தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லா மக்களும் அவனைப்பிடித்து: நீ இறக்கவே இறக்கவேண்டும்.
9 நீ ஏன், இந்த ஆலயம் சீலோவைப் போலாகும் என்றும், பட்டணம் குடிகளின்றிப் பாழாகும் என்றும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கேட்டார்கள். எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள்.
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் அழிந்து போகும் என்று, நீ யெகோவாவுடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தில் எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
10 இவற்றை யூதாவின் அதிகாரிகள் கேள்விப்பட்டபோது அரச அரண்மனையிலிருந்து யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்று யெகோவாவின் ஆலயத்திலிருந்த புதிய வாசலின் முகப்பில் உட்கார்ந்தார்கள்.
௧0யூதாவின் பிரபுக்கள் இந்த நடவடிக்கைகளைக்கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய், யெகோவாவுடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
11 அப்பொழுது ஆசாரியரும், இறைவாக்கினரும், “இவன் பட்டணத்திற்கெதிராய் இறைவாக்குரைத்தான். இவன் மரண தண்டனைக்கு உரியவன். நீங்களே உங்கள் காதுகளால் கேட்டீர்கள்” என்று அதிகாரிகளிடமும், எல்லா மக்களிடமும் சொன்னார்கள்.
௧௧அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு உரியவன்; உங்கள் காதுகளால் நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
12 அப்பொழுது எரேமியா எல்லா அதிகாரிகளையும் மக்களையும் பார்த்து: “இந்த ஆலயத்திற்கும் இந்தப் பட்டணத்திற்கும் எதிராய் நான் சொன்ன எல்லாவற்றையும் இறைவாக்கு உரைக்கும்படி யெகோவாவே என்னை அனுப்பினார்.
௧௨அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா மக்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்திற்கும் இந்த நகரத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் யெகோவா என்னை அனுப்பினார்.
13 இப்போது உங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்திருத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது யெகோவா மனமிரங்கி உங்களுக்கெதிராகத் தீர்ப்பளித்த பேராபத்தைக் கொண்டுவரமாட்டார்.
௧௩இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்தி, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது யெகோவா உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனம் வருந்துவார்.
14 நானோ உங்கள் கையில் இருக்கிறேன்; நீங்கள் நலமானது என்றும், சரியானது என்றும் நினைப்பதைச் செய்யுங்கள்.
௧௪நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.
15 நீங்கள் என்னைக் கொன்றால், குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும், இந்தப் பட்டணத்தின்மேலும், இதில் வாழ்கிறவர்கள்மேலும் நீங்களே சுமரப்பண்ணுவீர்கள் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உண்மையிலேயே நீங்கள் கேட்ட இந்த வார்த்தைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லும்படி யெகோவாவே என்னை அனுப்பினார்” என்றான்.
௧௫ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் காதுகளில் சொல்லக் யெகோவா மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
16 அப்பொழுது அதிகாரிகளும், எல்லா மக்களும் ஆசாரியர்களையும், இறைவாக்கினரையும் பார்த்து, “இந்த மனிதன் மரண தண்டனைக்கு தகுதியானவன் அல்ல. அவன் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே எங்களுடன் பேசியிருக்கிறான்” என்றார்கள்.
௧௬அப்பொழுது பிரபுக்களும் எல்லா மக்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பெயரில் நம்முடனே பேசினான் என்றார்கள்.
17 நாட்டின் முதியோர் சிலர் முன்னேவந்து, கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது:
௧௭தேசத்தில் மூப்பர்களில் சிலர் எழும்பி, சபையாகிய மக்களை நோக்கி:
18 “யூதாவின் அரசன் எசேக்கியாவின் நாட்களில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா இறைவாக்குரைத்தான். அவன் எல்லா யூத மக்களிடமும், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “‘சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும், ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்’” என்று சொல்லியிருந்தான்.
௧௮யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் எல்லா மக்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகும்; இந்த ஆலயத்தின் மலை காட்டிலுள்ள மேடுகளாகும் என்று சேனைகளின் யெகோவா சொன்னார் என்று சொன்னான்.
19 “அப்பொழுது யூதாவின் அரசன் எசேக்கியாவோ அல்லது யூதாவிலிருந்து வேறு எவரோ அவனைக் கொன்றார்களா? எசேக்கியா யெகோவாவுக்குப் பயந்து அவருடைய தயவை நாடவில்லையோ? யெகோவாவும் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பிட்ட பேராபத்தை அனுப்பாதபடி, மனமிரங்கவில்லையோ? ஆனால் நாங்களோ, எங்களுக்கெதிராகப் பெரும் பேரழிவை வருவித்துக்கொள்ளப் போகிறோம்” என்றார்கள்.
௧௯அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது யெகோவா அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனவருத்தமடைந்தார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரச்செய்கிறவர்களாயிருக்கிறோமே.
20 இப்பொழுது கீரியாத்யாரீம் ஊரைச்சேர்ந்த செமாயாவின் மகன் உரியா என்னும் வேறொருவனும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தான். அவனும் எரேமியா கூறிய அதே வார்த்தைகளையே இந்தப் பட்டணத்திற்கும், இந்த நாட்டிற்கும் எதிராக இறைவாக்கு உரைத்தான்.
௨0கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் மகன் உரியா என்னும் ஒரு மனிதனும் யெகோவாவுடைய பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்திற்கும் இந்த தேசத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
21 யோயாக்கீம் அரசனும், அவனுடைய எல்லா அதிகாரிகளும், அலுவலர்களும் அவனுடைய வார்த்தைகளைக் கேட்டபோது, அரசன் அவனைக் கொலைசெய்யத் தேடினான். ஆனால் உரியா அதைக் கேள்விப்பட்டு பயந்து எகிப்திற்குத் தப்பி ஓடினான்.
௨௧யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய எல்லா பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோட தீர்மானித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்தில் சேர்ந்தான்.
22 ஆயினும் யோயாக்கீம் அரசன் அக்போரின் மகன் எல்நாத்தானை வேறுசில மனிதரோடு எகிப்திற்கு அனுப்பினான்.
௨௨அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும் அவனுடன் வேறு சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.
23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, யோயாக்கீம் அரசனிடம் கொண்டுபோனார்கள். அரசன் அவனை வாளால் வெட்டி, அவனுடைய உடலை பொதுமக்களை அடக்கம்பண்ணுகிற இடத்தில் எறிந்துவிட்டான்.
௨௩இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தால் அவனை வெட்டி, அவன் உடலை ஏழை மக்களின் கல்லறைகளிடத்தில் எறிந்துவிட்டான் என்றார்கள்.
24 ஆனாலும் சாப்பானின் மகன் அகீக்காம் எரேமியாவுக்குச் சார்பாக இருந்தபடியால், எரேமியா கொலைசெய்யப்படும்படி மக்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படவில்லை.
௨௪ஆகிலும் எரேமியாவைக் கொல்ல மக்களின் கையில் ஒப்புக்கொடுக்காமல், சாப்பானுடைய மகனாகிய அகீக்காம் அவனுக்கு உதவியாயிருந்தான்.

< எரேமியா 26 >