< ஏசாயா 8 >
1 பின்பு யெகோவா என்னிடம், “வரைபலகையை எடுத்து அதில், மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என சாதாரண எழுத்தாய் எழுது.”
௧பின்னும் யெகோவா என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனிதன் எழுதுகிறவிதமாக அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.
2 அதற்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருக்கும்படி ஆசாரியன் உரியாவையும், எபரேக்கியாவின் மகன் சகரியாவையும் நான் அழைப்பேன் என்றார்.
௨அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரர்களாகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் மகனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
3 பின்பு நான் என் மனைவியாகிய இறைவாக்கு உரைப்பவளுடன் சேர்ந்தேன்; அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா என்னிடம், “அவனுக்கு மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்று பெயரிடு.
௩நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பெயரை அவனுக்குச் சூட்டு.
4 அவன் ‘என் அப்பா’ அல்லது ‘என் அம்மா’ என்று சொல்ல அறியுமுன் தமஸ்குவின் செல்வமும், சமாரியாவின் கொள்ளைப்பொருளும், அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
௪இந்தக் குழந்தை, அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
5 யெகோவா மீண்டும் என்னிடம் பேசினதாவது:
௫பின்னும் யெகோவா என்னை நோக்கி:
6 “இந்த மக்கள், அமைதியாக ஓடும் ஷீலோவாமின் தண்ணீரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ரேத்சீனுக்கும் ரெமலியாவின் மகனுக்கும் என்ன நடக்கும் என்பதில் களிகூர்ந்தார்கள்.
௬இந்த மக்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைசெய்து, ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
7 ஆதலால் யெகோவா, ஐபிராத்து நதியின் பெருவெள்ளத்தை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்போகிறார். அசீரிய அரசனே கம்பீரத்துடன் அந்த வெள்ளத்தைப்போல் வருவான். அது வாய்க்கால்களை நிரப்பி கரைபுரண்டு பாயும்.
௭இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளச்செய்வார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
8 அது யூதா நாட்டிற்குள் பாய்ந்து, அதற்கு மேலாகப் பெருக்கெடுத்து அதன் கழுத்தளவுக்குப் பாயும். இம்மானுயேலே, உனது நாட்டின் அகன்ற பரப்பை வெள்ளத்தின் அகல விரிந்த சிறகுகள் மூடுமே!”
௮யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துவரை வரும் என்றார். இம்மானுவேலே, அவன் இறக்கைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.
9 நாடுகளே, போர் முழக்கமிடுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்! தூர தேசங்களே, கேளுங்கள். போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்! போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
௯மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
10 உங்கள் போர் முறையைத் திட்டமிடுங்கள், ஆனால் அது முறியடிக்கப்படும்; கூடிப்பேசி முடிவெடுங்கள், ஆனால் அதுவும் நிலைக்காது; ஏனெனில் இறைவன் நம்மோடு இருக்கிறார்.
௧0ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார்.
11 யெகோவா தமது பலத்த கரத்தை என்மீது வைத்து, என்னோடு பேசி, இந்த மக்களின் வழியைப் பின்பற்றவேண்டாம் என என்னை எச்சரித்துச் சொன்னதாவது:
௧௧யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்:
12 “இந்த மக்கள் சதி என்று சொல்லும் எல்லாவற்றையும் நீ சதி என்று சொல்லாதே; அவர்கள் அஞ்சுவதற்கு நீயும் அஞ்சாதே, அதற்கு நீ நடுங்காதே.
௧௨இந்த மக்கள் கட்டுப்பாடு என்று சொல்கிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
13 சேனைகளின் யெகோவாவை மட்டுமே பரிசுத்தர் என போற்று, அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும்; அவர் ஒருவருக்கே நீ நடுங்கவேண்டும்.
௧௩சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
14 அவர் உனக்குப் பரிசுத்த இடமாயிருப்பார்; ஆனால் இஸ்ரயேல், யூதாவாகிய இரு குடும்பங்களுக்கும் அவர், இடறச்செய்யும் கல்லாகவும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருப்பார். எருசலேம் மக்களுக்கு அவர் கண்ணியாகவும், பொறியாகவும் இருப்பார்.
௧௪அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
15 அநேகர் அவைகளில் தடுமாறுவார்கள், அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள். அவர்கள் கண்ணியில் அகப்பட்டு பிடிக்கப்படுவார்கள்.”
௧௫அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
16 சாட்சியின் ஆகமத்தை பத்திரமாய்க் கட்டிவை; இறைவனுடைய சட்டத்தை என் சீடர்களிடையே முத்திரையிட்டு வை.
௧௬சாட்சி புத்தகத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
17 யாக்கோபின் வீட்டாருக்குத் தன் முகத்தை மறைக்கும் யெகோவாவுக்கு நான் காத்திருப்பேன். அவரிலேயே என் நம்பிக்கையை வைப்பேன்.
௧௭நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிறயெகோவாவுக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
18 நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம். நாங்கள் சீயோன் மலையில் வசிக்கும் எல்லாம் வல்ல யெகோவாவினால் இஸ்ரயேலில் அடையாளங்களும் அறிகுறிகளுமாய் இருக்கிறோம்.
௧௮இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் மலையில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
19 முணுமுணுத்து ஓதுகிற, ஆவிகளுடன் தொடர்புடையோரிடமும், குறிசொல்வோரிடமும் விசாரிக்கும்படி மனிதர் உங்களிடம் சொல்கிறார்கள். மக்கள் தங்கள் இறைவனிடம் அல்லவோ விசாரிக்கவேண்டும்? உயிருள்ளவர்களுக்காக மரித்தவர்களிடம் ஏன் விசாரிக்கவேண்டும்?
௧௯அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
20 சட்டத்தையும், சாட்சி ஆகமத்தையுமே நாடவேண்டும். அவர்கள் இந்த வார்த்தையின்படி பேசாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
௨0வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது.
21 மக்கள் துயரும் பசியும் உடையவர்களாய் நாட்டில் அலைந்து திரிவார்கள். பட்டினியால் அவதியுறும்போது கோபங்கொண்டு மேல்நோக்கிப் பார்த்து, தங்கள் இறைவனையும் அரசனையும் சபிப்பார்கள்.
௨௧துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள்.
22 பின்பு அவர்கள் பூமியை நோக்கிப்பார்த்து துன்பத்தையும், இருளையும், பயங்கர அந்தகாரத்தையும் மட்டுமே காண்பார்கள். அவர்கள் காரிருளுக்குள்ளே தள்ளப்படுவார்கள்.
௨௨அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளாடி அலைவார்கள்.