< ஏசாயா 24 >
1 இதோ, யெகோவா பூமியை அழித்து சீர்குலைக்கப்போகிறார். அதன் மேற்பரப்பைப் பாழாக்கி, குடிகளைச் சிதறடிப்பார்.
௧இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார்.
2 மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும், வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும், வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும், இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும், கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும்.
௨அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.
3 பூமி முழுவதும் அழிக்கப்பட்டு முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும். யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார்.
௩தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை.
4 பூமி வறண்டு வாடுகிறது, உலகம் நலிந்து வாடுகிறது; பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள்.
௪தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து மக்களிலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.
5 பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து, நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள்.
௫தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.
6 ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள். மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள்.
௬இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.
7 புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
௭திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள்.
8 மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது, களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது; யாழின் இன்னிசை அடங்கிற்று.
௮மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும்.
9 இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை, மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும்.
௯பாடலோடே திராட்சைரசம் குடிக்கமாட்டார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.
10 அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது; வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும்.
௧0வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.
11 அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்; இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன; சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன.
௧௧திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும்.
12 பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது, அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன.
௧௨நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும்.
13 அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும், திராட்சை அறுவடையின்பின் கிளைகளில் சில பழங்கள் மீந்திருப்பது போலுமே பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும் மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.
௧௩ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.
14 அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள்.
௧௪அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; யெகோவாவுடைய மகத்துவத்திற்காக சமுத்திரத்திலிருந்து ஆர்ப்பரிப்பார்கள்.
15 ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; கடலின் தீவுகளில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள்.
௧௫ஆகையால் யெகோவாவை, சூரியன் உதிக்கும் திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.
16 “நீதியுள்ளவருக்கே மகிமை” என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம். ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன் ஐயோ எனக்குக் கேடு! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்! துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன்.
௧௬நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன்.
17 பூமியின் குடிகளே, பயங்கரமும், படுகுழியும், கண்ணியுமே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
௧௭தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
18 பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன் படுகுழிக்குள் விழுவான். குழியிலிருந்து வெளியேறுபவன் கண்ணியில் அகப்படுவான். வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன, பூமியின் அஸ்திபாரங்கள் அசைகின்றன.
௧௮அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.
19 பூமி உடைந்து போயிருக்கிறது, பூமி பிளக்கப்பட்டுப் போயிருக்கிறது, பூமி அதிர்ந்து நடுங்குகிறது.
௧௯தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
20 பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது, அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது; மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால், ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.
௨0வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது.
21 அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும், கீழே பூமியில் இருக்கும் அரசர்களையும் யெகோவா தண்டிப்பார்.
௨௧அக்காலத்தில் யெகோவா உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.
22 இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல், அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள்.
௨௨அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.
23 சந்திரன் நாணமடையும், சூரியன் வெட்கமடையும்; ஏனெனில், சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார்.
௨௩அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார்.