< ஆதியாகமம் 27 >
1 ஈசாக்கு முதிர்வயதானதால், அவனுடைய கண்பார்வை மங்கிப்போயிருந்தன. அவன் தன் மூத்த மகன் ஏசாவைக் கூப்பிட்டு, “என் மகனே” என்றான். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான்.
௧ஈசாக்கு முதிர்வயதானதால் அவனுடைய கண்கள் பார்வையிழந்தபோது, அவன் தன் மூத்த மகனாகிய ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றான்; அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.
2 ஈசாக்கு அவனிடம், “இப்பொழுது நான் கிழவனாகிவிட்டேன். எந்த நாளில் மரணம் வருமோ? எனக்குத் தெரியாது.
௨அப்பொழுது அவன்: “நான் முதிர்வயதானேன், எப்போது இறப்பேனென்று எனக்குத் தெரியாது.
3 ஆகையால், நீ உன் ஆயுதங்களான வில்லையும், அம்புக் கூட்டையும் எடுத்துக்கொண்டு, உடனே காட்டு வெளிக்குப்போய் வேட்டையாடி, எனக்கு இறைச்சி கொண்டுவா.
௩ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்புகளை வைக்கும் பையையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப்போய், எனக்காக வேட்டையாடி,
4 நான் விரும்பும் சுவையுள்ள உணவை நீ சமைத்து, நான் அதைச் சாப்பிடுவதற்கு என்னிடம் கொண்டுவா. நான் இறப்பதற்குமுன் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
௪அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள உணவுகளாகச் சமைத்து, நான் சாப்பிடவும், நான் இறப்பதற்குமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா” என்றான்.
5 ஈசாக்கு தன் மகன் ஏசாவுடன் பேசியதை, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா மிருகங்களை வேட்டையாடிக் கொண்டுவருவதற்காகக் காட்டு பகுதிக்குப் போனான்.
௫ஈசாக்கு தன் மகனாகிய ஏசாவோடு பேசும்போது, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவர காட்டுக்குப் போனான்.
6 அப்பொழுது ரெபெக்காள் தன் மகன் யாக்கோபிடம், “பார், உன் தகப்பன் உன் சகோதரன் ஏசாவிடம் பேசுவதை நான் கேட்டேன்.
௬அப்பொழுது ரெபெக்காள் தன் மகனாகிய யாக்கோபை நோக்கி: “உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:
7 அவர், ‘நீ வேட்டையாடி, இறைச்சியைக் கொண்டுவந்து, நான் சாப்பிடுவதற்கு சுவையுள்ள உணவைத் தயாரித்து கொண்டுவா; நான் இறப்பதற்குமுன், யெகோவாவின் முன்னிலையில் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுக்கவேண்டும்’ என்றார், என்று சொன்னாள்.
௭நான் சாப்பிட்டு, எனக்கு மரணம் வருமுன்னே, யெகோவா முன்னிலையில் உன்னை ஆசீர்வதிக்க, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள உணவுகளாகச் சமைத்துக்கொண்டுவா” என்று சொல்வதைக்கேட்டேன்.
8 இப்பொழுதும் என் மகனே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நான் உனக்குச் சொல்வதைச் செய்:
௮ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குச் சொல்கிறபடி செய்.
9 நீ உடனே ஆட்டு மந்தைக்குப் போய் நல்ல வெள்ளாட்டுக் குட்டிகள் இரண்டை என்னிடம் கொண்டுவா; உன் தகப்பன் விரும்புகிற விதமாகவே சுவையுள்ள உணவை நான் சமைத்துத் தருவேன்.
௯நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள உணவுகளாகச் சமைப்பேன்.
10 அதைக் கொண்டுபோய் அவர் சாப்பிடுவதற்குக் கொடு. அவர் இறப்பதற்குமுன் தன் ஆசீர்வாதத்தை உனக்குத் தரட்டும்” என்றாள்.
௧0உன் தகப்பன் தாம் இறப்பதற்குமுன்னே உன்னை ஆசீர்வதிப்பதற்கு, அவர் சாப்பிடுவதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
11 அதற்கு யாக்கோபு, தன் தாய் ரெபெக்காளிடம், “என் சகோதரன் ஏசா உடலில் உரோமம் நிறைந்தவன்; என் உடலோ மிருதுவானது.
௧௧அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: “என் சகோதரனாகிய ஏசா அதிக ரோமமுள்ளவன், நான் ரோமமில்லாதவன்.
12 என் தகப்பன் என்னைத் தொட்டால் என்ன செய்வது? அவரை ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சாபத்தையே என்மேல் கொண்டுவருவேன்” என்றான்.
௧௨ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தையே வரவழைத்துக்கொள்வேன்” என்றான்.
13 அவன் தாய் அவனிடம், “என் மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும்; நான் சொல்லுகிறபடி நீ போய், ஆட்டுக்குட்டிகளைக் கொண்டுவா” என்றாள்.
௧௩அதற்கு அவனுடைய தாய்: “என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா” என்றாள்.
14 அப்படியே யாக்கோபு போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டுவந்தான். அவள் அவற்றை அவனுடைய தகப்பனுக்கு விருப்பமான சுவையுள்ள உணவாகச் சமைத்தாள்.
௧௪அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள்.
15 பின்பு ரெபெக்காள், வீட்டிலிருந்த தன் மூத்த மகன் ஏசாவின் மிகச்சிறந்த உடைகளை எடுத்து, அவற்றைத் தன் இளையமகன் யாக்கோபுக்கு உடுத்தினாள்.
௧௫பின்பு ரெபெக்காள், வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல ஆடைகளை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
16 அவனுடைய கைகளையும், கழுத்தின் மிருதுவான பகுதியையும் வெள்ளாட்டுத் தோல்களினால் மறைத்தாள்.
௧௬வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு;
17 பின்பு அவள் தயாரித்த சுவையுள்ள உணவையும் அப்பங்களையும் தன் மகன் யாக்கோபிடம் கொடுத்தாள்.
௧௭தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள்.
18 அவன் தன் தகப்பனிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான்.
௧௮அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே” என்றான்.
19 அதற்கு யாக்கோபு தன் தகப்பனிடம், “நான் உங்கள் மூத்த மகன் ஏசா; நீங்கள் சொன்னபடியே நான் செய்திருக்கிறேன். எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குத் தாருங்கள்” என்றான்.
௧௯அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான்.
20 ஈசாக்கு தன் மகனிடம், “மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். அதற்கு அவன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவே எனக்கு வெற்றியைத் தந்தார்” என்றான்.
௨0அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: “என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய யெகோவா எனக்குக் கிடைக்கச்செய்தார்” என்றான்.
21 அப்பொழுது ஈசாக்கு யாக்கோபிடம், “என் மகனே, உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானோ அல்லவோ என தொட்டுப் பார்க்கும்படி, என் அருகில் வா” என்றான்.
௨௧அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: “என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா” என்றான்.
22 யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கின் அருகில் வந்தபோது, ஈசாக்கு அவனைத் தடவிப்பார்த்து, “குரலோ யாக்கோபின் குரல்; கைகளோ ஏசாவின் கைகள்” என்றான்.
௨௨யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கினருகில் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: “சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்” என்று சொல்லி,
23 அவனுடைய கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்ததாய் இருந்தபடியால், அவனுடைய தகப்பன் அவனை இன்னாரென்று அறியவில்லை; எனவே அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான்.
௨௩அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து,
24 ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான். அவனும், “ஆம், நான்தான்” என்றான்.
௨௪“நீ என் மகனாகிய ஏசாதானோ” என்றான்; அவன்: “நான்தான்” என்றான்.
25 அப்பொழுது ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியில் கொஞ்சத்தை நான் சாப்பிடும்படி என்னிடம் கொண்டுவா; நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். யாக்கோபு அதைக் கொண்டுவந்தான். அவன் அதைச் சாப்பிட்டான்; அத்துடன் அவன் திராட்சை இரசத்தையும் கொண்டுவந்தான், ஈசாக்கு அதைக் குடித்தான்.
௨௫அப்பொழுது அவன்: “என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா” என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சைரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
26 அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான்.
௨௬அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.
27 யாக்கோபு தன் தகப்பனருகில் போய் அவனை முத்தமிட்டான். ஈசாக்கு யாக்கோபினுடைய உடையின் மணத்தை முகர்ந்து பார்த்து, அவனை ஆசீர்வதித்து சொன்னது: “ஆஹா, என் மகனின் மணம் யெகோவா ஆசீர்வதித்த வயலின் மணத்தைப்போல் இருக்கிறது.
௨௭அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
28 இறைவன் உனக்கு வானத்தின் பனியையும், மண்ணின் வளத்தையும் கொடுப்பாராக. தானியத்தையும், திராட்சை இரசத்தையும் நிறைவாய் தருவாராக.
௨௮தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக.
29 நாடுகள் உனக்குப் பணி செய்வார்களாக. மக்கள் கூட்டங்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்களாக. உன் சகோதரரின்மேல் நீ முதன்மையானவனாய் இருப்பாய், உன் தாயின் மகன்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்களாக. உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக.”
௨௯மக்கள் உன்னைச் சேவித்து தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
30 ஈசாக்கு அவனை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன் முன்னிருந்து போன மாத்திரத்தில், வேட்டையாடப் போன ஏசா திரும்பிவந்தான்.
௩0ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
31 அவனும் இறைச்சியைச் சுவையுள்ள உணவாகச் சமைத்து தன் தகப்பனிடம் கொண்டுவந்தான். அவன், “அப்பா எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குக் கொடுங்கள்” என்றான்.
௩௧அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: “உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான்.
32 அப்பொழுது ஈசாக்கு, “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு அவன், “நான் உம்முடைய மகன்; மூத்த மகனான ஏசா” என்றான்.
௩௨அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: “நீ யார்” என்றான்; அதற்கு அவன்: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்றான்.
33 ஈசாக்கு வெகுவாய் நடுங்கி, “அப்படியானால் வேட்டையாடிச் சமைத்த உணவை என்னிடம் கொண்டுவந்தவன் யார்? நீ வருவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே! நிச்சயமாய் அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பான்” என்றான்.
௩௩அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: “வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.
34 தன் தகப்பனின் வார்த்தைகளைக் கேட்டவுடனே ஏசா மனங்கசந்து, சத்தமிட்டுக் கதறி அழுது தன் தகப்பனிடம், “அப்பா என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான்.
௩௪ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனமுடைந்து அதிக சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும்” என்றான்.
35 அப்பொழுது ஈசாக்கு, “உன் சகோதரன் யாக்கோபு தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான்.
௩௫அதற்கு அவன்: “உன் சகோதரன் தந்திரமாக வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான்.
36 அதைக்கேட்ட ஏசா தகப்பனிடம், “அவன் யாக்கோபு என சரியாகவல்லவோ பெயரிடப்பட்டிருக்கிறான்? அவன் என்னை இரண்டுமுறை ஏமாற்றிவிட்டான்: அன்று என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான், இன்று என் ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டான்!” என்றான். பின்பு அவன், “நீங்கள் எனக்காக எந்த ஆசீர்வாதத்தையும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான்.
௩௬அப்பொழுது அவன்: “அவனுடைய பெயர் யாக்கோபு என்பது சரியல்லவா? இதோடு இரண்டுமுறை என்னை ஏமாற்றினான்; என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான்” என்று சொல்லி, “நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாவது வைத்திருக்கவில்லையா” என்றான்.
37 அதற்கு ஈசாக்கு ஏசாவிடம், “நான் யாக்கோபை உனக்குத் தலைவனாகவும், அவனுடைய எல்லா உறவினரையும் அவனுக்கு வேலைக்காரராகவும் கொடுத்து, தானியத்தினாலும், புதிய திராட்சை இரசத்தினாலும் அவனை நிறைவாக்கியிருக்கிறேன். அவ்வாறிருக்க, என் மகனே, உனக்காக நான் என்ன செய்வேன்?” என்றான்.
௩௭ஈசாக்கு ஏசாவுக்கு மறுமொழியாக: “இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும் அவனுக்கு வேலைக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சைரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.
38 அப்பொழுது ஏசா தகப்பனிடம், “அப்பா, ஒரேயொரு ஆசீர்வாதம் மட்டும்தானா உங்களிடம் உண்டு? என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி சத்தமிட்டு அழுதான்.
௩௮ஏசா தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி”, ஏசா சத்தமிட்டு அழுதான்.
39 அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனிடம் சொன்னது: “பூமியின் செழிப்புக்கும் வானத்தின் பனிக்கும் தூரமாகவே உன் குடியிருப்பு இருக்கும்.
௩௯அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக: “உன் குடியிருப்பு பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.
40 நீ உன் வாளினால் வாழ்ந்து, உன் சகோதரனுக்குப் பணிசெய்வாய். நீ கட்டுக்கடங்காது போகும்போது, அவன் உன் கழுத்தின்மேல் வைத்த நுகத்தை நீ எடுத்து எறிந்துபோடுவாய்.”
௪0உன் ஆயுதத்தால் நீ பிழைத்து, உன் சகோதரனுக்குப் பணிவிடை செய்வாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் மேலிருக்கிற அவனுடைய ஆளுகையை உடைத்துப்போடுவாய்” என்றான்.
41 தன் தகப்பன், யாக்கோபுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின் நிமித்தம், ஏசா யாக்கோபின்மேல் வன்மம் கொண்டிருந்தான். “என் தகப்பனுக்காக துக்கங்கொண்டாடும் நாட்கள் சமீபமாய் இருக்கின்றன. அப்பொழுது நான் என் சகோதரன் யாக்கோபைக் கொன்றுவிடுவேன்” என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
௪௧யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: “என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன்” என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.
42 மூத்த மகன் ஏசாவின் திட்டம் ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டபோது, அவள் தன் இளையமகன் யாக்கோபைக் கூப்பிட்டு, அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லும் நினைப்பில் தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறான்.
௪௨மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: “உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.
43 ஆகையால் மகனே, இப்பொழுது நான் சொல்வதுபோல் செய்: உடனடியாக ஆரானிலிருக்கும் என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போ.
௪௩ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப்போய்,
44 உன் சகோதரனின் மூர்க்கம் தணியுமட்டும் நீ அங்கே தங்கியிரு.
௪௪உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு.
45 உன் சகோதரன் கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை மறக்கும்போது, நீ அங்கிருந்து திரும்பிவரும்படி நான் உனக்குச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் உங்கள் இருவரையும் நான் ஏன் இழந்துபோக வேண்டும்?” என்றாள்.
௪௫உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும்” என்றாள்.
46 பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம் போய், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. யாக்கோபும் இந்த நாட்டுப் பெண்களிலிருந்து ஒரு ஏத்தியப் பெண்ணை மனைவியாகக் கொண்டால், நான் உயிர்வாழ்ந்தும் பயனில்லை” என்றாள்.
௪௬பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: “ஏத்தின் பெண்களால் என் வாழ்க்கை எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் பெண்களில் யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் என் உயிர் இருந்து என்ன பயன்” என்றாள்.