< யாத்திராகமம் 8 >

1 அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ பார்வோனிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு.
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: “எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.
2 நீ அவர்களைப் போகவிட மறுத்தால், உன் நாடு முழுவதையும் தவளைகளினால் வாதிப்பேன்.
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.
3 நைல் நதி தவளைகளால் நிரம்பும். அவை உன் அரண்மனைக்குள்ளும் உன் படுக்கையறைக்குள்ளும், உன் கட்டிலின்மேலும், உன் அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும், உன் மக்கள்மேலும், உன் அடுப்புகளுக்குள்ளும், மாப்பிசையும் பாத்திரங்களுக்குள்ளும் வந்து ஏறும்.
நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும்.
4 தவளைகள் உன்மேலும், உன் நாட்டு மக்கள்மேலும், உன் அதிகாரிகள்மேலும் வந்து ஏறும்’ என்று சொல்” என்றார்.
அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்” என்றார்.
5 பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘நீ உன் கோலை எடுத்து, உனது கையை நீரோடைகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரும்படி செய்’ என்று சொல்” என்றார்.
மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார்.
6 அப்படியே ஆரோன் எகிப்திலுள்ள நீர் நிலைகள்மேல் தன் கையை நீட்டினான். அப்போது தவளைகள் வந்து, நாட்டை மூடிக்கொண்டன.
அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
7 ஆனால் எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்து, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.
மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.
8 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “இந்தத் தவளைகள் என்னையும் என் நாட்டு மக்களையும் விட்டு நீங்கும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அப்பொழுது நான் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த உங்கள் மக்களைப் போகவிடுவேன்” என்றான்.
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “அந்தத் தவளைகள் என்னையும் என்னுடைய மக்களையும்விட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; யெகோவாவுக்குப் பலியிடும்படி மக்களைப் போகவிடுவேன்” என்றான்.
9 மோசே பார்வோனிடம், “தவளைகள் உம்மிடத்திலிருந்தும் உமது வீடுகளிலிருந்தும் நீங்கும்படி, உமக்காகவும் உமது அதிகாரிகளுக்காகவும் உமது மக்களுக்காகவும் நான் மன்றாடுவேன். ஆனால் அதற்கான நேரத்தை நீரே தீர்மானித்து எனக்குத் தெரியப்படுத்தும். நைல் நதியில் மட்டும் தவளைகள் இருக்கும்” என்றான்.
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: “தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக” என்றான்.
10 அதற்குப் பார்வோன், “நாளைக்கே மன்றாடு” என்றான். அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே ஆகும். அப்பொழுது எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நிகரானவர் யாரும் இல்லையென்று நீர் அறிந்துகொள்வீர்.
௧0அதற்கு அவன்: “நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: “எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும்.
11 தவளைகள் உம்மையும், உமது வீடுகளையும், அதிகாரிகளையும், மக்களையும் விட்டு நீங்கிவிடும்; ஆனால் நைல் நதியில் மட்டும் இருக்கும்” என்றான்.
௧௧தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும்” என்றான்.
12 மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து போனபின், பார்வோன்மேல் யெகோவா கொண்டுவந்த தவளைகளைக் குறித்து, மோசே அவரை நோக்கி மன்றாடினான்.
௧௨மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு எதிராக வரச்செய்த தவளைகளினால் மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.
13 யெகோவா மோசே கேட்டபடியே செய்தார். வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலுமுள்ள தவளைகளெல்லாம் செத்துப்போயின.
௧௩யெகோவா மோசேயின் சொற்படிச் செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போனது.
14 தவளைகள் குவியலாகக் குவிக்கப்பட்டன. அதனால் நாடெங்கும் துர்நாற்றமெடுத்தது.
௧௪அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
15 துயரம் நீங்கியதை பார்வோன் கண்டதும், யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.
௧௫இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; யெகோவா சொல்லியிருந்தபடியே ஆனது.
16 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம், நீ உன் கோலை நீட்டி நிலத்தின் புழுதியை அடி. அப்பொழுது எகிப்து நாடு எங்குமுள்ள புழுதி பேன்களாக மாறும் என்று சொல்” என்றார்.
௧௬அப்பொழுது யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: “உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல்” என்றார்.
17 அவர்கள் அப்படியே செய்தார்கள். ஆரோன் கோலைப் பிடித்திருந்த தன் கையை நீட்டி நிலத்தின் புழுதியை அடித்ததும், மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் பேன்கள் வந்தன. எகிப்து நாட்டின் புழுதியெல்லாம் பேன்களாக மாறிற்று.
௧௭அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன்னுடைய கையில் இருந்த தன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள்மேலும், மிருகஜீவன்கள்மேலும், எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களானது.
18 ஆனால் மந்திரவாதிகள், தங்கள் மாயவித்தைகளினால் பேன்களை உண்டுபண்ண முயன்றபோது, அவர்களால் முடியாது போயிற்று. மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் பேன்கள் இருந்தன.
௧௮மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.
19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனிடம், “இது இறைவனின் விரலேதான்” என்றார்கள். ஆனாலும் யெகோவா சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினமாகி, அவர்களுக்கு அவன் செவிகொடுக்கவில்லை.
௧௯அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
20 அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ அதிகாலையில் எழுந்து பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது அவனுக்கு முன்பாக நின்று அவனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு, என் மக்களைப் போகவிடு.
௨0அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு.
21 என் மக்களைப் போகவிடாவிட்டால் உன்மேலும், உன் அதிகாரிகள்மேலும், உன் மக்கள்மேலும், உன் வீட்டிற்குள்ளும் வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியருடைய வீடுகள் வண்டுகளால் நிறைந்திருக்கும். அவர்கள் வாழும் நிலமும் அவைகளால் நிறைந்திருக்கும்.
௨௧என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
22 “‘ஆனாலும் என் மக்கள் வாழும் கோசேன் நாட்டையோ, அந்த நாளில் நான் வித்தியாசமாக நடத்துவேன்; அங்கு வண்டுகள் இராது, அதனால் யெகோவாவாகிய நான் இந்த நாட்டில் இருக்கிறேன் என்பதை நீ அறிந்துகொள்வாய்.
௨௨பூமியின் நடுவில் நானே யெகோவா என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி,
23 இவ்வாறு என் மக்களுக்கும், உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுத்துவேன். இந்த அற்புத அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.
௨௩என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார்.
24 யெகோவா அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனுடைய அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும் திரளான வண்டுகள் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் போயிற்று.
௨௪அப்படியே யெகோவா செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது.
25 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “நீங்கள் போய் உங்கள் இறைவனுக்கு பலி செலுத்துங்கள். இந்த நாட்டிலேயே அதைச் செலுத்துங்கள்” என்றான்.
௨௫அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு இந்த தேசத்திலேயே பலியிடுங்கள்” என்றான்.
26 அதற்கு மோசே, “நாங்கள் அப்படிச் செய்வது சரியல்ல; ஏனெனில் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் செலுத்தும் பலிகள் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும். அப்படி அவர்கள் பார்வையில் அருவருப்பாயிருக்கிற பலிகளை நாங்கள் செலுத்தினால், அவர்கள் எங்கள்மேல் கல்லெறியாமல் விடுவார்களோ?
௨௬அதற்கு மோசே: “அப்படிச் செய்யக்கூடாது; எங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் எகிப்தியர்களுடைய அருவருப்பைப் பலியிடுகிறதாக இருக்குமே, எகிப்தியர்களுடைய அருவருப்பை நாங்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
27 எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அவருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பிரயாணமாய்ப் பாலைவனத்திற்குப் போகவேண்டும்” என்றான்.
௨௭நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணமாக போய், எங்களுடைய தேவனாகிய யெகோவா எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம்” என்றான்.
28 அப்பொழுது பார்வோன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பாலைவனத்தில் பலிசெலுத்தும்படி, நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால் நீங்கள் அதிக தூரம் போகக்கூடாது. இப்பொழுது எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான்.
௨௮அப்பொழுது பார்வோன்: “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு வனாந்திரத்தில் பலியிடும்படி, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாகப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்” என்றான்.
29 அதற்கு மோசே, “நான் இங்கிருந்து போனவுடனேயே யெகோவாவிடம் மன்றாடுவேன்; நாளைக்கு வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், அவன் மக்களையும் விட்டு நீங்கிவிடும். யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த மக்களைப் போகவிடாதபடி பார்வோனாகிய நீர் மீண்டும் வஞ்சனையாய் நடக்காதிரும்” என்றான்.
௨௯அதற்கு மோசே: “நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின்பு, நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவருடைய வேலைக்காரர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும்படி, நான் யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், யெகோவாவுக்குப் பலியிடுகிறதற்கு மக்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி ஏமாற்றாதிருப்பாராக” என்றான்.
30 பின்பு மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான்.
௩0மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவா நோக்கி வேண்டுதல் செய்தான்.
31 மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், நாட்டு மக்களையும் விட்டு நீங்கிற்று; ஒரு வண்டும் மிஞ்சியிருக்கவில்லை.
௩௧அப்பொழுது யெகோவா மோசேயின் சொற்படி, வண்டுவகைகள் பார்வோனையும் அவனுடைய வேலைக்காரர்களையும், மக்களையும்விட்டு நீங்கும்படிச் செய்தார்; ஒன்றுகூட மீதியாக இருக்கவில்லை.
32 ஆனாலும் இம்முறையும் பார்வோன் தன் மனதைக் கடினப்படுத்தி இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
௩௨பார்வோனோ, இந்த முறையும் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, மக்களைப் போகவிடாமல் இருந்தான்.

< யாத்திராகமம் 8 >