< எஸ்தர் 2 >

1 அகாஸ்வேரு அரசனின் கோபம் தணிந்தபின்பு, அவன் வஸ்தியையும், அவள் செய்ததையும், அவளுக்குத் தான் பிறப்பித்த ஆணையையும் நினைவிற்கொண்டான்.
இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
2 அப்பொழுது அரசனின் அந்தரங்க ஏவலாட்கள் கூறிய ஆலோசனையாவது: “அரசனுக்காக அழகிய இளம் கன்னிகைகளைக் தேடிப்பார்ப்போம்.
அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.
3 சூசானிலுள்ள கோட்டைப் பட்டணத்திலிருக்கும் அந்தப்புரத்திற்கு அந்த அழகிய இளம்பெண்களையெல்லாம் கொண்டுவரும்படி, அரசர் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட, எல்லா நாடுகளிலும் மேற்பார்வையாளர்களை நியமிப்பாராக. பெண்களுக்குப் பொறுப்பாயிருக்கிற, அரசனின் அதிகாரியான யேகாயின் பராமரிப்பின்கீழ் அப்பெண்கள் வைக்கப்படட்டும். அங்கு அவர்கள் அழகுபடுத்தப்படுவார்களாக.
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
4 பின்பு அரசருக்குப் பிரியமாயிருக்கிற இளம்பெண், வஸ்திக்குப் பதிலாக அரசியாயிருக்கட்டும்” என்றார்கள். இந்த ஆலோசனை அரசனுக்குப் பிரியமாயிருந்ததால், அதை அவன் நடைமுறைப்படுத்தினான்.
அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான்.
5 அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன்.
அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான்.
6 இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன்.
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
7 மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான்.
அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான்.
8 அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள்.
ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள்.
9 இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான்.
அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான்.
10 எஸ்தர் தான் எந்த இனம் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவேன்றோ வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் மொர்தெகாய் அப்படிச் செய்யவேண்டாம் என்று அவளுக்குச் சொல்லியிருந்தான்.
௧0எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.
11 ஒவ்வொரு நாளும் மொர்தெகாய் எஸ்தர் எப்படியிருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன நடக்கிறது என்றும் அறிவதற்கு அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
௧௧எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான்.
12 அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும்.
௧௨ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது,
13 அவள் அரசனிடம் போகவேண்டியது எப்படியெனில், அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச்செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும்.
௧௩இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
14 மாலையில் அவள் அரசனிடம் போய், மறுநாள் காலையில், அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில் மறுமனையாட்டிகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். ஒருத்தியின்மேல் அரசன் பிரியப்பட்டு அவளைப் பெயர்சொல்லி அழைத்தால் அன்றி, அவள் திரும்பவும் அரசனிடம் போகமுடியாது.
௧௪மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது.
15 மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சிறிய தகப்பன் அபிகாயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் போவதற்கான முறை வந்தபோது, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த அரசனின் அதிகாரியான யேகாய் கொண்டுபோகும்படி சொன்னதைத்தவிர, அவள் வேறு எதையும் கேட்கவில்லை. எஸ்தர் தன்னைக் கண்ட எல்லோரிடமிருந்தும் தயவைப் பெற்றாள்.
௧௫மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறை வந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது.
16 அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள்.
௧௬அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
17 அரசன் மற்ற எந்தப் பெண்ணையும் விட, எஸ்தரினால் அதிகமாய் கவரப்பட்டான். அவள் அவனிடமிருந்து மற்ற கன்னிகைகளையும்விட, அதிக தயவையும், பாராட்டையும் பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவள் தலையில் வைத்து வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான்.
௧௭ராஜா எல்லாப் பெண்களையும்விட எஸ்தர்மேல் அன்புவைத்தான்; எல்லா கன்னிப்பெண்களையும்விட அவளுக்கு ராஜாவிற்கு முன்பாக அதிக தயவும் இரக்கமும் கிடைத்தது; ஆகையால் ராஜா ராஜகிரீடத்தை அவளுடைய தலையின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் இடத்தில் பட்டத்து ராணியாக்கினான்.
18 அரசன் எஸ்தருக்கான விருந்தாக, ஒரு பெரிய விருந்தை எல்லா உயர்குடி மனிதருக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்தான். அவன் மாகாணங்கள் எங்கும் ஒரு விடுமுறை நாளை அறிவித்து, அரசனுடைய நிறைவின்படியே அன்பளிப்புகளை வழங்கினான்.
௧௮அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான்.
19 கன்னிப்பெண்கள் இரண்டாவது முறையாக கூடுகிறபோது, மொர்தெகாய் அரச வாசலில் உட்கார்ந்திருந்தான்.
௧௯இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
20 மொர்தெகாய் தனக்குச் சொன்னபடியே எஸ்தர் தனது குடும்ப விபரத்தையும், தான் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதையும் இரகசியமாய் வைத்திருந்தாள். ஏனெனில், மொர்தெகாய் தன்னை வளர்க்கிறபோது செய்தபடியே அவள் அவனுடைய அறிவுறுத்தல்களைக் கைக்கொண்டாள்.
௨0எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன்னுடைய உறவினர்களையும் தன்னுடைய மக்களையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாயிடம் வளரும்போது அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்துவந்தாள்.
21 மொர்தெகாய், அரசனுடைய வாசலில் இருக்கும் நாட்களில், வாசலைக் காவல்காக்கும் அரசனின் இரு அதிகாரிகளான பிக்தானும், தேரேசும் அரசன் அகாஸ்வேருவுடன் கோபமடைந்து, அவனைக் கொலைசெய்யச் சதி செய்தார்கள்.
௨௧அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு வாசல் காவலாளிகள் பிக்தானாவும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள்.
22 ஆனால் மொர்தெகாய் இந்த சதியைப்பற்றி அறிந்து அரசி எஸ்தருக்குச் சொன்னான். அவள் அதை மொர்தெகாய் சொன்னதாகக் குறிப்பிட்டு, அரசனுக்கு அறிவித்தாள்.
௨௨இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள்.
23 அந்த அறிக்கை விசாரணை செய்யப்பட்டு, உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்த இரண்டு அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டார்கள். இவை எல்லாம் அரசனின் முன்னிலையில் வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன.
௨௩அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

< எஸ்தர் 2 >