< உபாகமம் 23 >
1 விதைகள் நசுக்கப்பட்டதினாலோ, ஆணுறுப்பு வெட்டப்பட்டதினாலோ ஆண்மையிழந்தவன் எவனும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது.
௧“விரை நசுக்கப்பட்டவனும், ஆணுறுப்பு வெட்டப்பட்டவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.
2 முறைகேடான உறவினால் பிறந்தவனும், அவன் சந்ததியும் பத்தாம் தலைமுறைவரை யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது.
௨“வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.
3 அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது.
௩“அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.
4 ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, அவர்கள் வழியிலே உங்களைச் சந்திக்க உணவுடனும், தண்ணீருடனும் வரவில்லை. அவர்கள் மெசொப்பொத்தோமியாவிலுள்ள பெத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமை, உங்கள்மேல் சாபம் கூறும்படி கூலிக்கு அமர்த்தினார்கள்.
௪நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினாலும், உன்னை சபிக்கும்படியாக மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினாலும் இப்படிச் செய்யவேண்டும்.
5 ஆனாலும், உங்களுடைய இறைவனாகிய யெகோவா பிலேயாமுக்கும செவிசாய்க்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள்மேல் அன்பு கூர்ந்ததினால், அவனுடைய சாபத்தை உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார்.
௫உன் தேவனாகிய யெகோவா பிலேயாமுக்குச் செவிகொடுக்க விருப்பமில்லாமல், உன் தேவனாகிய யெகோவா உன்மேல் அன்புசெலுத்தியதால், உன் தேவனாகிய யெகோவா அந்த சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறச்செய்தார்.
6 ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம்.
௬நீ உயிருள்ளவரை அவர்களுக்கு ஒருபோதும் சமாதானத்தையும் நன்மையையும் செய்யாதே.
7 ஏதோமியனை வெறுக்காதீர்கள், அவன் உங்கள் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதீர்கள். அவனுடைய நாட்டில் நீங்கள் அந்நியராய் இருந்தீர்கள்.
௭“ஏதோமியனை வெறுக்காதே, அவன் உன்னுடைய சகோதரன்; எகிப்தியனை வெறுக்காதே, அவனுடைய தேசத்திலே நீ அந்நியனாக இருந்தாய்.
8 எகிப்தியரின் பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறையினர் யெகோவாவின் சபைக்குள் வரலாம்.
௮மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படலாம்.
9 நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராக முகாமிட்டிருக்கும்பொழுது அசுத்தமான எல்லாவற்றிலுமிருந்து விலகியிருங்கள்.
௯“நீ படையெடுத்து உன்னுடைய எதிரிகளுக்கு விரோதமாகப் புறப்படும்போது, தீமையான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.
10 இராக்காலத்தில் விந்து வெளிப்படுவதினால், உங்கள் மத்தியில் ஒருவன் அசுத்தப்பட்டிருந்தால், அவன் முகாமுக்கு வெளியே போய் அங்கே இருக்கவேண்டும்.
௧0இரவு நேரத்தில் விந்து வெளியேறியதால் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களுக்குள் இருந்தால், அவன் முகாமிற்கு வெளியே போய், முகாமிற்குள் வராமல்,
11 ஆனால் மாலை நேரம் வந்ததும் அவன் குளித்து சூரியன் மறையும் நேரத்தில் முகாமுக்கு மீண்டும் வரலாம்.
௧௧மாலையில் தண்ணீரில் குளித்து, சூரியன் மறையும்போது முகாமிற்குள் வரக்கடவன்.
12 முகாமுக்கு வெளியே மலசலம் கழிப்பதற்கு உங்களுக்கு ஒரு இடத்தை வைத்திருக்கவேண்டும்.
௧௨“உன் மலம் கழிக்கும் இடம் முகாமிற்கு வெளியே இருக்கவேண்டும்.
13 உங்கள் ஆயுதங்களுடன் ஒன்றாக மண் தோண்டுவதற்கு எதையாவது வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளியே போய் மலசலம் கழித்தபின் ஒரு குழியைத் தோண்டி மலத்தை மண்ணால் மூடிவிடுங்கள்.
௧௩உன் ஆயுதங்களுடன் ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்; நீ மலம் கழிக்கும்போது, அந்தக் கோலினால் மண்ணைத் தோண்டி, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடவேண்டும்.
14 ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைப் பாதுகாக்கவும், உங்கள் பகைவர்களை உங்களிடம் ஒப்படைக்கவும், உங்கள் முகாமில் உலாவுகிறார். ஆகவே அவர் உங்கள் மத்தியில் வெட்கக்கேடான எதையும் கண்டு உங்களைவிட்டு விலகிக்போகாதபடி, நீங்கள் முகாமைப் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
௧௪உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.
15 ஒரு அடிமை தப்பி ஓடிவந்து உன்னிடம் அடைக்கலம் புகுந்தால், அவனை அவனுடைய எஜமானிடம் பிடித்துக்கொடுக்க வேண்டாம்.
௧௫“தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்திற்கு வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாதே.
16 அவன் தான் தெரிந்துகொள்கிற பட்டணத்தில் தான் விரும்பிய எங்காவது உங்கள் மத்தியில் வாழட்டும். அவனை ஒடுக்கவேண்டாம்.
௧௬அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.
17 இஸ்ரயேலில் ஒரு பெண்ணும் கோயில் வேசியாய் இருக்கக்கூடாது. ஒரு ஆணும் அப்படியிருக்கக் கூடாது.
௧௭“இஸ்ரவேலின் மகள்களில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாக இருக்கக்கூடாது.
18 வேசித்தனம் பண்ணும் ஆணோ, வேசித்தனம் பண்ணும் பெண்ணோ தங்கள் வேசித்தனத்தினால் பெறும் வருமானத்தை, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வீட்டுக்குள் எந்தவித நேர்த்திக்கடனை செலுத்தும்படிக்கும் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை அருவருக்கிறார்.
௧௮வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
19 நீங்கள் உங்கள் சகோதரனிடம் வட்டி வசூலிக்கக்கூடாது. வட்டிக்குக் கடனாகக் கொடுக்கக்கூடிய பணத்திற்கோ, உணவுப்பொருளுக்கோ, வேறு எதற்கோ வட்டி வசூலிக்கவேண்டாம்.
௧௯“கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே.
20 நீங்கள் அந்நியனிடம் வட்டிவாங்கலாம். ஆனால் உங்கள் சகோதர இஸ்ரயேலனிடம் வட்டி வசூலிக்கவேண்டாம். அப்படிச் செய்யும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் அந்நாட்டில், நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
௨0அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா நீ கையிட்டுச்செய்யும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்க உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காதே.
21 உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் நேர்த்திக்கடன் செய்திருந்தால், நீங்கள் அதைச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் நிச்சயமாய் அதைக் கேட்பார். தாமதித்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளியாவீர்கள்.
௨௧“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பொருத்தனை செய்திருந்தால், அதைச் செலுத்தத் தாமதம்செய்யாதே; உன் தேவனாகிய யெகோவா அதை நிச்சயமாக உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
22 ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
௨௨நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
23 உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாயினால் சொல்லும் எதையும் செய்ய நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் சொந்த வாயினால் சுயவிருப்பத்துடன் உங்கள் நேர்த்திக்கடனை செய்தீர்கள்.
௨௩உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் வாயினால் நீ பொருத்தனைசெய்து சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
24 உங்கள் அயலானுடைய திராட்சைத் தோட்டத்திற்குள்போனால், விரும்பிய அளவு திராட்சைப் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் ஒன்றையும் உங்கள் கூடையில் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்.
௨௪“நீ பிறனுடைய திராட்சைத்தோட்டத்தில் நுழைந்தால், உன் ஆசைதீர திராட்சைப்பழங்களைத் திருப்தியாக சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.
25 நீங்கள் உங்கள் அயலானுடைய வயலுக்குள்போனால் உங்கள் கையினால் கதிர்களைப் பறிக்கலாம், ஆனால் அவனுடைய தானியக் கதிர்களை அரிவாளினால் வெட்டவேண்டாம்.
௨௫பிறனுடைய விளைச்சலில் நுழைந்தால், உன் கையினால் கதிர்களைப் பறிக்கலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.