< தானியேல் 7 >
1 இவற்றிற்கு முன், பாபிலோன் அரசன் பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதலாவது வருடத்தில், தானியேல் ஒரு கனவு கண்டிருந்தான். அவன் படுத்திருக்கும்போது, அவனுடைய மனதில் தரிசனங்கள் கடந்துசென்றன. அவன் தான் கண்ட கனவின் சுருக்கத்தை எழுதிவைத்தான்.
௧பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருடத்திலே தானியேல் ஒரு கனவையும் தன் படுக்கையின்மேல் தன் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தக் கனவை எழுதி, காரியங்களின் சாராம்சத்தை விவரித்தான்.
2 தானியேல் சொன்னதாவது: அந்த இரவில், என் தரிசனத்தில், வானத்தின் நான்கு காற்றுகள் வீசி மாபெருங்கடலை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்ததைக் கண்டேன்.
௨தானியேல் சொன்னது: இரவு நேரத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நான்கு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.
3 அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலில் இருந்து மேலே வெளியேறின. அவை ஒன்றிலிருந்து மற்றது வித்தியாசமான உருவமுள்ளனவாய் இருந்தன.
௩அப்பொழுது வெவ்வேறு தோற்றமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.
4 முதலாவது விலங்கு சிங்கத்தைப்போன்றது; அதற்குக் கழுகின் சிறகுகள் இருந்தன. நான் கவனித்துப்பார்க்கையில், அந்தக் கழுகின் சிறகுகள் பிடுங்கப்பட்டு, அது நிலத்திலிருந்து மேலே தூக்கப்பட்டது. அப்பொழுது அது ஒரு மனிதனைப்போல் இரண்டு கால்களையும் ஊன்றி நின்றது. அதற்கு ஒரு மனிதனுடைய இருதயமும் கொடுக்கப்பட்டது.
௪முதலாவது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் இறக்கைகள் இருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதின் சிறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்துநிற்கும்படி செய்யப்பட்டது; மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5 அங்கே எனக்கு முன்பாக இரண்டாவது மிருகம் நின்றது. அது கரடியைப்போல் காணப்பட்டது. அதன் ஒரு பக்கம் உயர்ந்திருக்கக் காணப்பட்டது. அதன் வாயில் பற்களுக்கிடையில் மூன்று விலா எலும்புகள் இருந்தன. அப்பொழுது, “எழுந்திரு, போதுமான அளவு மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது.”
௫பின்பு, கரடியைப் போல வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி அதிக மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 அதன்பின்பு நான் பார்க்கையில் எனக்கு முன்பாக வேறொரு மிருகம் இருந்தது. அது சிறுத்தையைப்போல் இருந்தது. பறவையின் இறகுகளைப்போன்ற நான்கு சிறகுகள் அதன் முதுகின் பின்புறத்தில் இருந்தன. அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. ஆளுவதற்கான அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
௬அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பறவையின் இறக்கைகளைப்போல நான்கு இறக்கைகள் இருந்தன; அந்த மிருகத்திற்கு நான்கு தலைகளும் இருந்தன; அதற்கு ஆளுகை கொடுக்கப்பட்டது.
7 அந்த இரவிலே, எனது தரிசனத்தில் எனக்கு முன்பாக நான்காவது மிருகத்தையும் கண்டேன். அதுவோ திகிலூட்டுவதாகவும், பயங்கரமானதாகவும், மிகவும் வல்லமையுடையதாகவும் இருந்தது. பெரிய இரும்புப் பற்கள் அதற்கு இருந்தன. அது தனக்கு அகப்பட்டதை நசுக்கி சின்னாபின்னமாக்கி விழுங்கியது. எஞ்சியதைத் தனது கால்களால் மிதித்துப்போட்டது. அது முன்பு காணப்பட்ட மிருகங்களையும்விட, வித்தியாசமானதாய் இருந்தது. அதற்கு பத்து கொம்புகள் இருந்தன.
௭அதற்குப்பின்பு, இரவுநேரத் தரிசனங்களில் நான்காம் மிருகத்தைக் கண்டேன்; அது கொடியதும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன; அது நொறுக்கி அழித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்பிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.
8 நான் அந்தக் கொம்புகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில், அங்கே எனக்கு முன்பாக அவற்றிற்கு நடுவில் வேறொரு சிறிய கொம்பு எழும்பிற்று. அப்பொழுது முன்பிருந்த கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டன. அந்தச் சிறிய கொம்பில் மனிதனுடைய கண்களைப்போன்ற கண்களும், பெருமையாய் பேசும் வாயும் இருந்தன.
௮அந்தக் கொம்புகளை நான் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சிறிய கொம்பு எழும்பியது; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனித கண்களைப்போன்ற கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.
9 நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த இடத்தில் அரியணைகள் அமைக்கப்பட்டன. அதன் நடுவில் பூர்வீகத்திலுள்ளவர் அமர்ந்திருந்தார். அவரது உடை உறைந்த பனியைப்போல் வெண்மையாயிருந்தது. அவருடைய தலைமயிர் தூய்மையான பஞ்சைப்போல் வெண்மையாய் இருந்தது. அவரது அரியணை கொழுந்துவிட்டெரிகிற நெருப்பினால் சுடர் விட்டுக்கொண்டிருந்தது. அதன் சக்கரங்கள் கொழுந்து விட்டெரிந்தன.
௯நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சிங்காசனங்கள் வைக்கப்பட்டன; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய உடை உறைந்த மழையைப்போலவும், அவருடைய தலைமுடி வெண்மையாகவும், பஞ்சைப்போல தூய்மையாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் நெருப்புத் தழலும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
10 அவர் முன்னிலையிலிருந்து நெருப்பு ஆறு ஒன்று எழும்பி ஓடிக்கொண்டிருந்தது. ஆயிரம் ஆயிரமானவர்கள் அவருக்குப் பணிபுரிந்தார்கள். கோடிக்கணக்கானோர் அவர்முன் நின்றார்கள். நீதிமன்றம் கூட்டப்பட்டது. புத்தகங்கள் திறக்கப்பட்டன.
௧0அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடானகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புத்தகங்கள் திறக்கப்பட்டது.
11 “அதன்பின் அந்த சிறிய கொம்பு பெருமையான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், நான் தொடர்ந்து கவனித்துப் பார்த்தேன். அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டு, அதன் உடல் அழிக்கப்பட்டு நெருப்பு ஜூவாலையில் எறியப்படும்வரையும், நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
௧௧அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினால் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற நெருப்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
12 மற்ற மிருகங்களிடமிருந்தோ அவற்றின் அதிகாரம் பறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவை குறிப்பிட்ட காலத்திற்கு வாழும்படி அனுமதிக்கப்பட்டன.
௧௨மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் நேரமும் நிறைவேறும்வரை அவைகள் உயிரோடு இருக்கக் கட்டளையிடப்பட்டது.
13 “அந்த இரவிலே எனது தரிசனத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அங்கே எனக்கு முன்பாக வானத்தின் மேகங்களுடன் மனித குமாரனைப்போன்ற ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் பூர்வீகத்தில் உள்ளவரிடத்தின் அருகே வர, அவருக்கு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
௧௩இரவுநேரத் தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, மனிதனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுள் உள்ளவரின் அருகில் கொண்டுவரப்பட்டார்.
14 அவருக்கு அதிகாரமும், மகிமையும், ஆளுமையும், வல்லமையும் கொடுக்கப்பட்டன. எல்லா மக்களும், நாடுகளும், பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரும் அவரை வழிபட்டனர். அவரது ஆளுகை ஒழிந்துபோகாத ஆளுகை, அது என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது அரசு ஒருபோதும் அழிந்துபோகாது.
௧௪சகல மக்களும் தேசத்தார்களும், பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும், மகிமையும், அரசாட்சியும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ஆளுகை அழியாததுமாயிருக்கும்.
15 “தானியேலாகிய நான் எனது ஆவியில் கலங்கியிருந்தேன், என் மனதின் வழியாகக் கடந்துசென்ற தரிசனங்கள் என்னைக் கலக்கமடையச்செய்தன.
௧௫தானியேலாகிய நான் என் உடலுக்குள் என் ஆவியிலே சஞ்சலப்படமாட்டேன்; என் மனதில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கச்செய்தது.
16 அரியணையின் அருகில் நின்றவர்களில் ஒருவனை நான் அணுகி, இவற்றின் உண்மையான விளக்கத்தைக் கேட்டேன். “அப்போது அவன் எனக்கு அவற்றின் விளக்கத்தைச் சொன்னான்.
௧௬சிங்காசனத்தின் அருகில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் அர்த்தம் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்:
17 அந்த நான்கு பெரிய மிருகங்களும், பூமியிலிருந்து தோன்றப்போகும் நான்கு அரசுகள்.
௧௭அந்த நான்கு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நான்கு ராஜாக்கள்.
18 இருந்தாலும் மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களே அரசைப்பெற்று, அதை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள். ஆம், என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்.
௧௮ஆனாலும் உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்கள் அரசாட்சியைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்றான்.
19 “அதன் பின்னர் நான்காவது மிருகத்தைப்பற்றிய உண்மையான விளக்கத்தை அறிய விரும்பினேன். இந்த மிருகம் மற்ற எல்லாவற்றிலும் வித்தியாசமானதும், மிகுந்த பயங்கரமானதும், இரும்புப் பற்களையுடையதும், வெண்கல நகங்களையுடையதுமாயிருந்தது. தனக்கு அகப்பட்டதைப் நசித்து சின்னாபின்னமாக்கி, தான் விழுங்கியதுபோக எஞ்சியதைத் தன் காலின்கீழ் போட்டு மிதித்தது.
௧௯அப்பொழுது மற்றவைகளைப்பார்க்கிலும் வேறுபட்ட உருவம் கொடியதும், இரும்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாக நொறுக்கி அழித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப் போட்டதுமாயிருந்த நான்காம் மிருகத்தைக்குறித்தும்,
20 அதோடு அதன் தலையிலிருந்த பத்துக்கொம்புகளைப் பற்றியும், முளைத்த மற்ற கொம்பைப்பற்றியும் அறிய விரும்பினேன். முன்பிருந்த மூன்று கொம்புகளையும் விழப்பண்ணின இந்தக் கொம்பு, மற்றதைவிடப் பெலமுடையதாய்க் காணப்பட்டது. அதற்கு கண்களும், பெருமை பேசும் வாயும் இருந்தன.
௨0அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாக, கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயை உடையதுமாக, மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் அர்த்தத்தை அறிய மனதாயிருந்தேன்.
21 நான் பார்த்தபோது, அந்தக் கொம்பு இறைவனின் பரிசுத்தவான்களுக்கு எதிராகப் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்துக்கொண்டிருந்தது.
௨௧நீண்ட ஆயுசுள்ளவராகிய தேவன் வரும்வரைக்கும், நியாயவிசாரிப்பு, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்ஜியத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் காலம் வரும்வரைக்கும்,
22 பூர்வீகத்திலுள்ளவர் வந்து, மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களின் சார்பாக நியாயத்தீர்ப்பு வழங்கும் வரைக்கும், அவர்களுக்கு அரசுரிமை கிடைக்கும் காலம் வரும்வரைக்கும் அது யுத்தம் செய்துகொண்டே இருந்தது.
௨௨இந்தக் கொம்பு பரிசுத்தவான்களுடன் போரிட்டு, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.
23 “எனக்கு அவன் கொடுத்த விளக்கமாவது: அந்த நான்காம் மிருகம் பூமியில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கும். அது மற்ற எல்லா அரசுகளையும்விட, வித்தியாசமானதாய் இருக்கும். அது பூமி முழுவதையும் மிதித்து, நசுக்கி விழுங்கிவிடும்.
௨௩அவன் சொன்னது: நான்காம் மிருகம் பூமியிலே உண்டாகும் நான்காம் ராஜ்ஜியமாகும்; அது எல்லா ராஜ்ஜியங்களைப்பார்க்கிலும் வேறுபட்டதாக இருந்து, பூமியை எல்லாம் அழித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
24 அந்தப் பத்துக் கொம்புகளும், அந்த அரசில் இருந்து தோன்றும் அரசர்கள். அவர்களுக்குப்பின் முந்தின அரசர்களைவிட, வித்தியாசமான வேறொருவன் தோன்றுவான். அவன் அவர்களுள் மூன்று அரசர்களைத் தனக்குக் கீழ்ப்படுத்துவான்.
௨௪அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்ஜியத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாகும்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறுபட்டதாக இருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,
25 அவன் மகா உன்னதமானவருக்கு எதிராகப் பேசுவான். அவன் அவரது பரிசுத்தவான்களை ஒடுக்கி, நியமிக்கப்பட்ட கால அட்டவணைகளையும், நீதிச்சட்டங்களையும் மாற்ற முயற்சிசெய்வான். பரிசுத்தவான்கள் அவனிடத்தில் ஒரு காலத்திற்கும், காலங்களுக்கும், அரைக் காலத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
௨௫உன்னதமான தேவனுக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லும்வரை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26 “‘ஆனால், நீதிமன்றம் அமரும்; அப்போது அவனுடைய வல்லமை அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, என்றென்றுமாய் முழுவதும் அழிக்கப்படும்.
௨௬ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுவரை அவனை முற்றிலும் அழிக்கும்படியாக அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
27 வானத்தின் கீழுள்ள எல்லா அரசுகளின் ஆளுமையும், வல்லமையும், மகத்துவமும், மகா உன்னதமானவருடைய மக்களான பரிசுத்தவான்களிடம் ஒப்படைக்கப்படும். அவரது அரசு நித்திய அரசாயிருக்கும். எல்லா ஆளுநர்களும் அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.’
௨௭வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்ஜியங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களாகிய மக்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்ஜியம் நித்திய ராஜ்ஜியம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.
28 “இதுவே நான் கண்டவற்றின் முடிவு. ஆனால், தானியேலாகிய நான் என் சிந்தனையில் குழப்பமடைந்திருந்தேன். என்னுடைய முகம் வேறுபட்டது. என்றாலும், இவற்றை நான் என்னுடனே என் மனதிலே வைத்துக்கொண்டேன்.”
௨௮அவன் சொன்ன வார்த்தை இத்துடன் முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.