< ஏசாயா 10 >

1 ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
அநீதியான சட்டங்களை இயற்றி, ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
2 அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ,
அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும், என் மக்களில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்காதிருப்பதற்கும், விதவைகளைத் தங்களுக்கு இரையாக்குவதற்கும், அநாதைகளின் சொத்தை அபகரிப்பதற்குமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள்.
3 விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் அழிவின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?
உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும், தூரத்திலிருந்து அழிவு வரும்போதும் என்ன செய்வீர்கள்? யாரிடம் உதவிக்கு ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கு வைப்பீர்கள்?
4 கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும், கொலையுண்டவர்களுக்கிடையில் விழுவதையும்விட, உங்களுக்கு வேறு கதி இராது. இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
5 என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம்.
“எனது கோபத்தின் கோலாய் இருக்கிற அசீரியனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கையில் எனது கடுங்கோபத்தின் தண்டாயுதம் இருக்கிறது.
6 அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
நான் அவனை இறைவனை மறுதலிக்கிற ஒரு நாட்டுக்கு விரோதமாக அனுப்பி, எனக்குக் கோபமூட்டும் மக்களைக் கொள்ளையிட்டு சூறையாடி, பறித்து, தெருவிலுள்ள சேற்றை மிதிப்பதுபோல் அவர்களை மிதித்துப் போடவும் நான் அவனுக்கு கட்டளை கொடுக்கிறேன்.
7 அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
ஆனால் அசீரிய அரசன் எண்ணுவது இதுவல்ல; அவனுடைய மனதில் இருப்பதும் இதுவல்ல, பல நாடுகளை அழித்து அவர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதே அவனுடைய நோக்கம்.
8 அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா?
9 கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
கல்னோ பட்டணம் கர்கேமிஷைப்போல் ஆகவில்லையா? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆகவில்லையா? சமாரியா தமஸ்குவைப்போல் ஆகவில்லையா?
10 ௧0 எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள உருவச்சிலைகளைவிட சிறந்த உருவச்சிலைகளின் அரசுகளை நான் கைப்பற்றினேன்.
11 ௧௧ நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான்.
சமாரியாவுக்கும் அதன் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல, எருசலேமுக்கும், அதன் விக்கிரகங்களுக்கும் செய்யமாட்டேனோ?’”
12 ௧௨ ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தனது செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்ததும், “நான் அசீரிய அரசனின் இருதய மேட்டிமைக்கும், அவனுடைய கண்களின் அகங்காரத்துக்கும் அவனைத் தண்டிப்பேன்” என்பார்.
13 ௧௩ அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிமக்களைத் தாழ்த்தினேன்.
ஏனெனில் அவன் சொல்கிறதாவது: “‘எனது கரத்தின் வல்லமையாலும், எனது ஞானத்தினாலும் அறிவினாலும் நான் இதைச் செய்தேன், நான் பல நாடுகளின் எல்லைகளை அகற்றினேன், அவர்களுடைய செல்வங்களைச் சூறையாடினேன், பெரும் வல்லவனைப்போல் அவர்களின் அரசர்களை அடக்கிக் கீழ்ப்படுத்தினேன்.
14 ௧௪ ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான்.
ஒருவன் பறவைகளின் கூட்டிற்குள் எட்டிக் கைவிடுவதுபோல், நாடுகளின் செல்வத்தை எடுப்பதற்கு என் கை நீட்டப்பட்டது. கைவிடப்பட்ட முட்டைகளை மனிதர் சேர்ப்பதுபோல், எல்லா நாடுகளையும் நான் ஒன்றாகச் சேர்த்தேன். ஒன்றாவது சிறகை அடிக்கவுமில்லை, கூச்சலிடுவதற்காக வாயைத் திறக்கவுமில்லை.’”
15 ௧௫ கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே.
கோடரி தன்னைத் தூக்குபவனைவிட மேலானதோ? வாள் தன்னை உபயோகிக்கிறவனுக்கு மேலாகத் தற்பெருமை கொள்ளுமோ? அப்படியானால், வீசி அடிப்பதற்காக ஒருவன் ஒரு தடியை எடுக்க, அந்தத் தடியோ தன்னை எடுத்தவனையே தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே. மரத்தாலான தண்டாயுதம், தானாகவே எழுந்து நின்று, மரமல்லாத மனிதனைத் தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே.
16 ௧௬ ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா அவனுடைய பலமுள்ள இராணுவவீரர்களுக்குள் உருக்கும் நோயை அனுப்புவார். அவனுடைய பகட்டான ஆடம்பரத்தின்கீழ் எரியும் சுவாலை போன்ற தீயை மூட்டுவார்.
17 ௧௭ இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து,
இஸ்ரயேலின் ஒளியானவர், நெருப்பாகவும், அவர்களுடைய பரிசுத்தர் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும் வருவார். அவர் அவனுடைய முட்செடிகளையும், அவனுடைய நெருஞ்சில் செடிகளையும் ஒரே நாளில் எரித்துப்போடுவார்.
18 ௧௮ அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
நோயுற்ற ஒருவன் நலிந்துபோவது போல, அவனுடைய காடுகளிலும் வளமுள்ள வயல்களிலும் உள்ள செழிப்பு முற்றிலும் அழிந்துவிடும்.
19 ௧௯ காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
அவனுடைய காடுகளில் மீதமிருக்கும் மரங்களின் தொகை, ஒரு சிறுபிள்ளைகூட எண்ணக்கூடியதாய் குறைந்திருக்கும்.
20 ௨0 அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவையே உண்மையாகச் சார்ந்துகொள்வார்கள்.
அந்த நாளில் இஸ்ரயேலில் மீதியிருப்போரும், யாக்கோபின் குடும்பத்தில் தப்பியிருப்போரும் தங்களை முறியடித்தவன்மேல் இனியொருபோதும் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். ஆனால் இஸ்ரயேலின் பரிசுத்தராகிய யெகோவாவிலேயே உண்மையான நம்பிக்கையை வைப்பார்கள்.
21 ௨௧ மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
மீதியிருப்பவர்கள் திரும்புவார்கள், யாக்கோபின் குடும்பத்தில் மீதியிருப்பவர்கள் வல்ல இறைவனிடம் திரும்புவார்கள்.
22 ௨௨ இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.
இஸ்ரயேலே, உன் மக்கள் இப்பொழுது கடற்கரை மணல்போல் இருந்தபோதிலும், மீதமிருக்கும் சிலர் மட்டுமே திரும்புவார்கள். மூழ்கடிக்கும் அழிவு ஒன்று கட்டளையிடப்பட்டிருக்கிறது; அது நீதியானது.
23 ௨௩ சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
நாடு முழுவதற்கும் கட்டளையிடப்பட்ட அழிவை யெகோவா, சேனைகளின் யெகோவா நிறைவேற்றுவார்.
24 ௨௪ ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சீயோனில் வாழும் என் மக்களே, எகிப்தியர் செய்ததுபோல, உங்களைப் பிரம்பால் அடித்து, தண்டாயுதத்தை உயர்த்துகிற அசீரியருக்குப் பயப்படவேண்டாம்.
25 ௨௫ ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
உங்களுக்கு விரோதமாக இருக்கும் என் கோபம், வெகுவிரைவில் முடிந்துவிடும். எனது கோபமோ, சீரியர்களுடைய அழிவை நோக்கித் திருப்பப்படும்.”
26 ௨௬ ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
ஓரேப் மலையில் மீதியானியரை அடித்து வீழ்த்தியதுபோல, சேனைகளின் யெகோவா அவர்களைச் சவுக்கால் அடிப்பார். எகிப்தில் செய்ததுபோல, தம் கோலை கடலின்மேல் உயர்த்துவார்.
27 ௨௭ அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்.
அந்த நாளில் அசீரியனால் உங்களுக்கு உண்டான சுமையோ, உங்கள் தோள்களில் இருந்து நீக்கப்படும்; அவர்களுடைய நுகம் உங்கள் கழுத்திலிருந்து அகற்றப்படும், நீங்கள் கொழுத்திருக்கிறபடியால் நுகம் முறிந்துவிடும்.
28 ௨௮ அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள். மிக்ரோனு வழியாகப் போகிறார்கள் மிக்மாஷாவிலே தமது பொருட்களை வைக்கிறார்கள்.
29 ௨௯ கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
அவர்கள் கணவாயைத் தாண்டிச் சென்று சொல்கிறதாவது: “நாம் கேபாவில் இரவு தங்குவோம்.” ராமா நடுங்குகிறது; சவுலின் பட்டணமாகிய கிபியாவின் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.
30 ௩0 காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
காலீம் மகளே, ஓலமிடு! லாயிஷாவே, கேள்! பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே!
31 ௩௧ மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்; கேபீம் மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.
32 ௩௨ இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான்.
இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்; எருசலேம் மலையிலுள்ள சீயோன் மகளின் மேட்டுக்கு விரோதமாய், கைநீட்டி மிரட்டுவார்கள்.
33 ௩௩ இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா, மிக்க வல்லமையோடு பெரிய கிளைகளை வெட்டிவிடுவார். பெரு மரங்கள் வீழ்த்தப்படும், ஓங்கி வளர்ந்த மரங்கள் தாழ்த்தப்படும்.
34 ௩௪ அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.
அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும்.

< ஏசாயா 10 >